Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 11 Verses

1 கடவுளின் வார்த்தையைப் புறவினத்தார் கூட ஏற்றுக்கொண்டதை யூதேயாவிலுள்ள சகோதரரும் அப்போஸ்தலரும் கேள்விப்பட்டனர்.
2 இராயப்பர் யெருசலேமுக்குச் சென்றபோது, விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்,
3 "நீர் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள் வீட்டிற்குப் போய் அவர்களோடு சாப்பிட்டீரே!" என்று அவருடன் வாதாடினர்.
4 அதற்கு இராயப்பர் நடந்ததை விவரமாக விளக்கிச் சொன்னதாவது:
5 "நான் யோப்பா நகரில் செபித்துக்கொண்டிருந்தபொழுது பரவசமாகிக் காட்சி கண்டேன். கப்பல் பாயைப்போன்ற ஒரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி வானத்தினின்று இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.
6 அதை நான் உற்று நோக்குகையில் காட்டு விலங்குகள், தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன யாவும் கண்டேன்.
7 அப்பொழுது, 'இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு' என ஒரு குரல் கேட்டது.
8 அதற்கு நான், 'வேண்டாம், ஆண்டவரே. தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் என் வாயில் வைத்ததேயில்லை' என்றேன்.
9 அதற்கு, 'சுத்தமெனக் கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே' என மீளவும் அக்குரல் பேசிற்று. இப்படி மும்முறை நடந்தது.
10 பின் எல்லாம் வானத்திற்கு எடுக்கப்பட்டன.
11 அதே நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கி இருந்த வீட்டுக்கு முன்னே வந்து நின்றனர்.
12 தயக்கமின்றி அவர்களுடன் செல்லும்படி ஆவியானவர் எனக்குச் சொன்னார். எனவே, நானும் இந்த ஆறு சகோதரர்களும் புறப்பட்டு அவருடைய வீட்டை அடைந்தோம்.
13 அவர் தம் வீட்டில் வானதூதர் தோன்றியதாகவும், அந்தத் தூதர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்;
14 நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உமக்குக் கூறுவார்" என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்குச் சொன்னார்.
15 "நான் பேசத் தொடங்கியதும், பரிசுத்த ஆவி முன்பு நம்மேல் இறங்கியதுபோலவே அவர்கள் மேலும் இறங்கினார்.
16 அப்போது 'அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார். நீங்களோ பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்' என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்தேன்.
17 ஆகவே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்ட நமக்கு அருளிய அதே திருக்கொடையைக் கடவுள் அவர்களுக்கும் அருளினார் என்றால், கடவுளுக்குத் தடைசெய்ய என்னால் எப்படி முடியும்?"
18 இதைக் கேட்டு அமைதி அடைந்தனர். அப்படியானால் வாழ்வுக்கு வழியாகும் மனமாற்றத்தைக் கடவுள் புறவினத்தாருக்குக் கூட அருளினார் என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.
19 முடியப்பர் பற்றிய கலாபனையால் விசுவாசிகள் பெனிக்கியா, சைப்ரஸ், அந்தியோகியா வரைக்கும் சிதறுண்டு போயினர். அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே அன்றி வேறு யாருக்கும் தேவ வார்த்தையை அறிவிக்கவில்லை.
20 ஆனால், இப்படிப் போனவர்களுள் சைப்ரஸ்தீவினர், சீரேனே ஊரார் சிலர் அந்தியோகியாவிற்கு வந்து கிரேக்கர்களை அணுகி, அவர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தனர்.
21 ஆண்டவரின் கைவன்மை அவர்களுக்குத் துணை நின்றது. ஆதலின், பலர் ஆண்டவர்மேல் விசுவாசம் கொண்டு மனந்திரும்பினர்.
22 இச்செய்தி யெருசலேமிலுள்ள திருச்சபைக்கு எட்டவே, பர்னபாவை அந்தியோகியாவிற்கு அனுப்பினர்.
23 பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவராய், நற்பண்புடன் விளங்கிய இவர்,
24 அங்குப்போய் கடவுளின் அருளைக்கண்டு மனமகிழ்ந்தார். மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்து நிற்க அனைவரையும் ஊக்குவித்தார். திரளான மக்கள் ஆண்டவர் பக்கம் சேர்ந்தனர்.
25 சவுலை நாடி பர்னபா தர்சு நகருக்குச் சென்றார். அங்கு அவரைக் கண்டு அந்தியோகியாவிற்கு அழைத்து வந்தார்.
26 இருவரும் அச்சபையோடு ஓராண்டு முழுவதும் உறவாடினர்; அங்கே பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் தான் முதன்முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.
27 அந்நாளில் இறைவாக்கினர் சிலர் யெருசலேமிலிருந்து, அந்தியோகியாவிற்கு வந்தனர்.
28 அவர்களுள் ஒருவர் அகபு என்பவர். அவர் ஆவியினால் ஏவப்பட்டு, உலகெங்கும் பெரும் பஞ்சம் உண்டாகுமென முன்னுரைத்தார். அது கிளாதியுஸ் பேரரசன் காலத்தில் உண்டாயிற்று.
29 ஆகவே, சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களாலான பொருளுதவியை யூதேயாவிலுள்ள சகோதரர்களுக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.
30 அதன்படியே அவர்கள் அத்தொகையைப் பர்னபா, சவுல் இவர்களின் வழியாக மூப்பர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
×

Alert

×