Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Samuel Chapters

2 Samuel 14 Verses

1 அரசரின் இதயத்தில் அப்சலோமைப் பற்றிய நினைவு இன்னும் இருக்கிறது என்று சார்வியாவின் மகன் யோவாப் அறிந்தான்.
2 எனவே, தேக்குவாவூருக்கு ஆள் அனுப்பி, அங்கிருந்த அறிவாளியான ஒரு பெண்ணை அழைப்பித்து, "நீ இழவு கொண்டாடுகிறவளைப் போலப் பாசாங்கு செய்து துக்க ஆடைகளை அணிந்து கொண்டு, எண்ணெய் தேய்க்காது, இறந்து போனவனுக்காக நெடுநாள் துக்கித்திருக்கிற பெண்ணைப் போல் வேடம் பூண்டு கொள்.
3 பின் அரசரிடம் சென்று நீ இவ்வாறு அவரிடம் பேசவேண்டும்" என்று சொல்லி, அவள் சொல்ல வேண்டியவற்றை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.
4 அவ்விதமே தேக்குவாப் பெண் அரசர் முன் வந்து தரையில் விழுந்து வணங்கி, "அரசே, என்னைக் காப்பாற்றும்" என்றாள்.
5 அரசர் அவளைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டதற்கு அவள்,"ஐயோ, என் கணவன் இறந்து பட்டான்;
6 நான் கைம்பெண் ஆனேன். உம் அடியாளுக்கு இரு புதல்வர் இருந்தனர். அவர்கள் இருவரும் வயல் வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்த ஒருவரும் இல்லாததால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான்.
7 இப்போழுதோ சுற்றத்தார் அனைவரும் உம் அடியாளுக்கு எதிராய் எழும்பி 'தன் சகோதரனைக் கொன்றவனை ஒப்புவித்துவிடு; தன் சகோதரனைக் கொன்றதற்குப் பதிலாய் நாங்கள் அவனைக் கொன்று அவன் வாரிசை அழிப்போம்' என்கிறார்கள். இப்படி என் கணவனுக்குப் பெயருமின்றிப் பிள்ளையுமின்றிப் போகும்படியாக எனக்கு இன்னும் விடப்பட்ட சிற்றொளியையும் அணைத்துவிடப் பார்க்கிறார்களே" என்றாள்.
8 அரசர் அப்பெண்ணைப் பார்த்து, "நாம் உன் காரியத்தைக் குறித்துக் கட்டளை கொடுப்போம்;
9 நீ உன் வீட்டுக்குப் போகலாம்" என்றார். அத்தேக்குவாப் பெண் அரசரை நோக்கி, "என் தலைவரான அரசே, பழி இருந்தாலும் அது என் மேலும், என் தந்தை வீட்டின் மேலும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமின்றி இருக்கட்டும்" என்றாள்.
10 அதற்கு அரசர், "உன்னை எதிர்ப்பவனை என்னிடம் கொண்டுவா. அவன் இனி உன்னைத் தொடமாட்டான்" என,
11 அவள், "இரத்தப்பழி வாங்க முற்படும் என் சுற்றத்தாரின் எண்ணிக்கை பெருகாதபடியும், என் மகனை யாரும் அழிக்காதபடியும் அரசர் தம்முடைய ஆண்டவராகிய கடவுளை நினைத்துப் பார்க்கக்கடவாராக" என்றாள். இதற்கு அரசர், "ஆண்டவர் மேல் ஆணை! உன் மகனுடைய தலைமயிர்களில் ஒன்றாவது தரையில் விழாது" என்று ஆணையிட்டுச் சொன்னார்.
12 அப்பொழுது அப்பெண், "அடியாள் என் தலைவராகிய அரசரிடம் ஒரு வார்த்தை சொல்லட்டுமா?" என்று வினவ, அவர் "சொல்" என்றார்.
13 அப்பொழுது அப்பெண், "பின் ஏன் கடவுளின் மக்களுக்கு எதிராய் நீர் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்? துரத்தப் பெற்ற தம் மகனை அரசர் திரும்ப அழைக்காவிட்டால் அவர் இப்போது சொன்ன சொல் அவருக்குப் பாவம் ஆகாதா?
14 தரையில் சிந்திய தண்ணீரைத் திரும்பவும் ஒன்று சேர்க்க முடியாதது போல் நாம் அனைவரும் செத்து மடிவோம். உயிர்கள் அழிவது இறைவனின் திருவுளம் அன்று. எனவே, தள்ளுண்டவன் முற்றிலும் கெட்டுப் போகாதபடி அவர் கண்டும் பொறுத்துக் கொண்டு வருகிறார்.
15 அப்படியிருக்க, நான் என் தலைவராகிய அரசரிடம் நான்கு பேர் கேட்க இக்காரியத்தைப் பற்றிப் பேச வந்தேன். 'நான் அரசரிடம் போய்ப் பேசுவேன். அவர் ஒருவேளை தம் அடியாளுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வார்' என்று உம் அடியாள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
16 ஏற்கெனவே அரசர் அடியாளுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னையும் என் புதல்வனையும் ஒன்றாய்க் கடவுளின் உரிமைக்குப் புறம்பாக்கி அழிக்கக் கருதின அனைவரின் கைக்கும் தம் அடியாளைத் தப்புவித்தார்.
17 ஆகையால், என் தலைவரான அரசே, பலியைப் போல் இதுவும் நிறைவேற வேண்டும் என்று அடியாள் வேண்டுகின்றேன். கடவுளின் தூதனைப்போல் என் தலைவராகிய அரசர் புகழ்ச்சியாலோ இகழ்ச்சியாலோ நிலைபெயர மாட்டார். இதனால் தான் உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்" என்றாள்.
18 இதற்கு மறுமொழியாக அரசர் அப் பெண்ணை நோக்கி, "நான் உன்னை ஒரு காரியம் கேட்கிறேன். ஒன்றும் மறைக்காதே" என்றார். அதற்கு அப் பெண், "என் தலைவராகிய அரசே, கேளும்" என்றாள்.
19 அப்போழுது அரசர், "இதற்கெல்லாம் யோவாப் உனக்குக் கையாளாய் இருக்கவில்லையா?" என்று கேட்டார். அதற்கு மறுமொழியாக அப்பெண் "என் தலவராகிய அரசே, உம் உயிர்மேல் ஆணை! அரசராகிய என் தலைவர் சொன்னதெல்லாம் சரியே. உம் ஊழியன் யோவாபே இதைச் செய்யும்படி என்னைப் பணித்தான். நான் சொன்ன இவ்வார்த்தைகளை எல்லாம் அவனே உம் அடியாளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.
20 நான் இவ்வார்த்தைகளை உவமையாய்ச் சொல்ல வேண்டும் என்று உம் ஊழியன் யோவாப் கட்டளையிட்டான். ஆயினும் இவ்வுலகில் உள்ளவற்றை எல்லாம் நீர் அறிந்திருக்கிறீரே! ஏனெனில், என் தலைவராகிய அரசே, கடவுளின் தூதனைப் போல் நீர் ஞானம் நிறைந்தவராய் இருக்கிறீர்" என்றாள்.
21 பிறகு அரசர் யோவாபைப் பார்த்து, "இதோ, என் கோபம் தீர்ந்து போயிற்று. நீ கேட்டபடியே செய்கிறேன். நீ போய் என் மகன் அப்சலோமை அழைத்துக் கொண்டு வா" என்றார்.
22 அப்பொழுது யோவாப் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கி அரசரைப் போற்றி வாழ்த்தினான். பிறகு தாவீதை நோக்கி, "என் தலைவராகிய அரசே, நீர் உன் ஊழியனுடைய வார்த்தையைக் கேட்டதினால் உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று நான் இன்று அறிந்து கொண்டேன்" என்றான்.
23 பின்பு யோவாப் எழுந்து ஜெஸ்சூருக்குப் போய் அப்சலோமை யெருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான்.
24 ஆனால் அரசர், "அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் என் முகத்தில் விழிக்க வேண்டாம்" என்று சொன்னார். எனவே அப்சலோம் அரசரின் முகத்தைப் பாராமலே தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றான்.
25 இஸ்ராயேலருள் அப்சலோமைப் போல் அழகு வாய்ந்தவன் ஒருவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவன்பால் ஒரு குறையும் இல்லை.
26 அவனுடைய முடி அவன் தலைக்கு அதிகப் பாரமாயிருந்ததினால், ஆண்டு தோறும் அதைக் கத்தரிக்க வேண்டியதாயிருக்கும். கத்தரிக்கும் போது அவன் தலைமயிர் அரச நிறையின்படி இருநூறு சீக்கல் நிறை உள்ளதாய் இருக்கும்.
27 அப்சலோமுக்கு மூன்று புதல்வரும், தாமார் என்ற பேரழகியான ஒரு மகளும் இருந்தனர்.
28 அப்சலோம் அரசரின் முகத்தைக் காணாமலே ஈராண்டுக் காலமாய் யெருசலேமில் வாழ்ந்து வந்தான்.
29 இறுதியில் அவன் யோவாபுக்கு ஆள் அனுப்பி அரசரிடம் போய்ப் பேசும்படி தன்னிடம் வரச் சொன்னான். யோவாபோ அவனிடம் வர விரும்பவில்லை. அப்சலோம் மறு முறையும் அவனைக் கூப்பிட ஆள் அனுப்பினதற்கு, அவன், "இல்லை, வரமாட்டேன்" என்று பதில் கூறி அனுப்பி விட்டான்.
30 அப்பொழுது அப்சலோம் தன் ஊழியரைப் பார்த்து, "என் வயலுக்கு அருகே யோவாபின் நிலம் இருப்பதும், அதில் வாற்கோதுமை விளைந்திருக்கிறதும் உங்களுக்குத் தெரியுமே. நீங்கள் போய் அதைத் தீக்கு இரையாக்குங்கள்" என்றான். அப்படியே அவர்கள் புறப்பட்டுப் போய்ப் பயிர்களைத் தீக்கு இரையாக்கினர். யோவாபின் வேலைக்காரரோ தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தலைவரிடம் வந்து, "அப்சலோமின் ஊழியர் உம் நிலத்தின் ஒரு பகுதியைத் தீக்கு இரையாக்கி விட்டனர்" என்று கூறினர்.
31 இதைக் கேட்ட யோவாப் எழுந்து அப்சலோமின் வீட்டிற்குள் சென்று, "உன் ஊழியர் என் நிலத்துப் பயிரைத் தீக்கு இரையாக்கியது ஏன்?" என்று கேட்டான்.
32 அப்சலோம் யோவாபை நோக்கி, "ஜெஸ்சூரிலிருந்து நான் ஏன் வந்தேன்? 'அங்கு இருப்பதே எனக்கு நலம்' என்று நீர் அரசரிடம் சொல்லும்படி உம்மைக் கேட்க ஆள் அனுப்பினேன். ஆகையால், நான் அரசரின் முகத்தைப் பார்க்கும்படி நீர் செய்யவேண்டும் என்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அரசர் என் குற்றத்தை மறக்காது இருந்தால், அவர் என்னைக் கொன்று போடட்டும்" என்று சொன்னான்.
33 பின்னர் யோவாப் அரசரிடம் சென்று எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தான். அப்போது அப்சலோம் அழைக்கப்பட, அவனும் அரசரிடம் வந்து அவர்முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.
×

Alert

×