1
|
சவுல் இறந்தபின், தாவீது அமலேக்கியரின் படுகொலையிலிருந்து திரும்பி சிசெலேகில் இரண்டு நாள் தங்கினான். |
2
|
மூன்றாம் நாள் சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணக்கம் புரிந்தான். |
3
|
தாவீது, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று அவனை வினவினான். அவன் "இஸ்ராயேல் பாசறையினின்று ஓடிவந்தேன்" என்று அவனுக்குப் பதில் கூறினான். |
4
|
மீண்டும் தாவீது அவனை நோக்கி "நடந்தது என்ன? எனக்கு அறிவி" என்றான். அதற்கு அவன், "மக்கள் போரை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களில் பலர் மடிந்தனர்; அன்றியும் சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்தார்கள்" என்றான். |
5
|
அப்போது தாவீது அந்த இளைஞனை நோக்கி, "சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்துவிட்டனர் என்று எவ்வாறு அறிவாய்?" என்று கேட்டான். |
6
|
அதற்கு, செய்தி கொணர்ந்த இளைஞன், "தற்செயலாய் கெல்போயே மலைக்குப் போனேன்; சவுல் தம் ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் தேர்களும் குதிரை வீரர்களும் அவரை தொடர்ந்து நெருங்கினார்கள். |
7
|
அவர் திரும்பிப் பார்த்து என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான் 'இதோ இருக்கிறேன்' என்றேன். |
8
|
அப்பொழுது, 'நீ யார்?' என்று அவர் கேட்க, நான் 'அமலேக்கியன்' என்று சொன்னேன். |
9
|
அப்பொது அவர் என்னை நோக்கி, 'நீ என் மேல் நின்று என்னைக் கொன்று போடு. ஏனெனில் என் உயிர் என்னிடம் இன்னும் இருப்பதால் எனக்கு இடுக்கண் நேர்ந்துள்ளது' என்றார். |
10
|
வீழ்ந்தபின் அவர் பிழைக்கமாட்டார் என்று நான் அறிந்திருந்ததால், அவர்மேல் நின்று அவரைக் கொன்றுபோட்டேன். பின்பு அவர் தலைமீது இருந்த மகுடத்தையும், அவர் புயத்திலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு இங்கு என் தலைவராகிய உம்மிடம் கொணர்ந்தேன்" என்றான். |
11
|
இதை கேட்டு தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, |
12
|
சவுலும் அவர் மகன் யோனத்தாசும், ஆண்டவருடைய மக்களும், இஸ்ராயேல் குடும்பத்தாரும் வாளால் மடிந்து விழுந்தனர் என்று கதறி அழுது, மாலை வரை நோன்பு காத்திருந்தனர். |
13
|
பிறகு தாவீது தனக்குச் செய்தி அறிவித்த இளைஞனை நோக்கி, "நீ எங்கிருந்து வருகிறாய்? " என்று கேட்டதற்கு அவன், "நான் புறவினத்தானாகிய அமலேக்கியனுடைய மகன்" என்று மறுமொழி உரைத்தான். |
14
|
தாவீதோ, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைக் கொலை செய்வதற்கு நீ உன் கையை நீட்ட அஞ்சாதது ஏன்?" என்று சொன்னான். |
15
|
தன் ஊழியர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, "நீ பக்கத்தில் வந்து அவன் மேல் பாய்ந்து அவனை குத்து" என, இவன் அவனைக் குத்தினான்; அவனும் இறந்தான். |
16
|
தாவீது அவனைப் பார்த்து, "உன் இரத்தப்பழி உன் தலை மேலேயே இருக்கட்டும்; ஏனெனில், 'ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்' என்று உன் வாயே உனக்கு எதிராய்ச் சாட்சி சொன்னது" என்றான். |
17
|
தாவீதோ சவுலின் மீதும் அவன் மகன் யோனத்தாசின் மீதும் பின்வருமாறு புலம்பல் பாடி, |
18
|
நீதிமான்களின் நூலில் எழுதியுள்ளபடி அதை யூதாவின் புதல்வருக்குக் கற்றுக் கொடுக்கக் கட்டளையிட்டான். அப்பாடலாதது: "இஸ்ராயேலே, உன் உயர்விடங்களில் காயம் அடைந்து இறந்தவர்களை எண்ணிப்பார். |
19
|
புகழ்பெற்ற இஸ்ராயேலர் உன் மலைகளின் மேல் கொலையுண்டனர்! இவ்வலியோர் எவ்வாறு விழுந்தனர்? |
20
|
கெத்திலும் இதை அறிவிக்காதீர்கள்; அஸ்கலோனின் தெருக்களிலும் இதைத் தெரியப்படுத்தாதீர்கள். தெரிவித்தால், பிலிஸ்தியரின் புதல்விகள் அகமகிழ்வர்; விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் பெண்கள் களிகூர்வர்! |
21
|
கெல்போயேயின் குன்றுகளே, பனியோ மழையோ உங்கள்மீது பொழியாதிருப்பதாக! உங்கள் வயல்கள் முதற்பலனைத் தராதிருப்பனவாக! ஏனெனில் அங்கேயன்றோ சவுல் எண்ணெயால் அபிஷுகம் செய்யப்படாதவர் போல் தம் கேடயத்தைத் தரையில் எறிந்துவிட்டார்! வலியோரின் கேடயம் அவமதிக்கப்பட்டதே! சவுலின் கேடயமும் அவமதிக்கப்பட்டதே! |
22
|
இதற்குமுன் யோனத்தாசின் அம்பு கொலையுண்டவர்களின் உதிரத்தைக் குடிக்காமலும், வலியோரின் கொழுப்பை உண்ணாமலும் ஒருபோதும் பின்னிட்டு வந்ததில்லை! சவுலின் வாளோ வெறுமையாய்த் திரும்பினதில்லை! |
23
|
உயிரோடிருக்கையில் சவுலும் யோனத்தாசும் அன்பும் அழகும் உள்ளவர்களாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரிந்து போகவில்லை.அவர்கள் கழுகுகளிலும் வேகம் உள்ளவர்களாய், சிங்கங்களிலும் வலிமை உள்ளவர்களாய் இருந்தார்கள். |
24
|
இஸ்ராயேலின் புதல்விகளே, சவுலுக்காக அழுங்கள்! ஏனெனில் அவரே ஒண் சிவப்பு மெல்லாடைகளால் உங்களை உடுத்தி உங்கள் உடைகளின் மேல் பொன்னணிகளை அணிவித்தவர்! |
25
|
போர்க்களத்தில் வல்லவர் வீழ்ந்தது எங்ஙனம்? உயர்விடங்களில் யோனத்தாசு கொலையுண்டது எவ்வாறு? |
26
|
தம்பி, யோனத்தாசு! உனக்காகத் துயரப்படுகிறேன். நீ பேரழகனும் பெண்களை விடப் பேரன்பனுமாய் இருந்தாய்! ஒரு தாய் தன் ஒரே மகனுக்கு அன்பு செய்வதுபோலன்றோ நான் உனக்கு அன்பு செய்தேன்! |
27
|
வலியோர் வீழ்ந்தது எங்ஙனம்? போர்க்கருவிகள் அழிந்தது எவ்வாறு?" |
2-Samuel 1:3 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...