Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Kings Chapters

2 Kings 4 Verses

1 அப்போது இறைவாக்கினர் ஒருவரின் மனைவி எலிசேயுவிடம் வந்து கதறி அழுது, "உம் அடியானாகிய என் கணவர் இறந்து விட்டார்; அவர் தெய்வ பயம் உள்ளவர் என உமக்குத் தெரியும். இப்போதோ அவருடைய கடன்காரன் என் இரண்டு மக்களையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக்கொள்ள வந்திருக்கிறான்" என்றாள்.
2 எலிசேயு அவளைப் பார்த்து, "நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய், சொல்" என்றார். அதற்கு அவள், "உம் அடியாளாகிய எனக்கு உடலில் பூசிக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் இருக்கிறது. அதைத் தவிர வேறு ஒன்றும் வீட்டில் இல்லை" என்றாள்.
3 எலிசேயு அவளை நோக்கி, "நீ உன் சுற்றத்தார் எல்லாரிடமும் போய்ப் பல காலிப் பாத்திரங்களைக் கடன் வாங்கி வா.
4 உன் வீட்டில் நுழைந்து, உள்ளே நீயும் உன் பிள்ளைகளும் இருக்கக் கதவைப் பூட்டிக்கொண்டு, முன் கூறிய எல்லாப் பாத்திரங்களிலும் அந்த எண்ணெயை ஊற்று; அவை நிறைந்த பின்னர் அவற்றை நீ எடுத்துக்கொள்" என்றார்.
5 அவள் அவ்விதமே போய் தானும் தன் புதல்வரும் உள்ளிருக்கக் கதவைப் பூட்டிக்கொண்டாள். தன் பிள்ளைகள் பாத்திரங்களை எடுத்துக் கொடுக்க, அவள் அவற்றில் எண்ணெயை ஊற்றினாள்.
6 எல்லாப் பாத்திரங்களும் நிறைந்த பின் அவள் தன் மகனைப் பார்த்து, "இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா" என்றாள். அதற்கு அவன், "வேறு இல்லை" என்றான். எண்ணெயும் நின்று போனது.
7 அவள் கடவுளின் மனிதரிடம் வந்து அதை அறிவித்தாள். அதற்கு அவர், "நீ போய் எண்ணெயை விற்று உன் கடன்காரனுக்குக் கொடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் பிழைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
8 ஒருநாள் எலிசேயு சூனாம் நகர் வழியே செல்ல, அவ்விடத்துச் சீமாட்டி ஒருத்தி சாப்பிடும் படி அவரை வற்புறுத்தினாள். அதன் பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் உணவருந்த அவள் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
9 ஒருநாள் அவள் தன் கணவனை நோக்கி, "நம்மிடம் அடிக்கடி வருகிறவர் ஆண்டவரின் மனிதரும் புனிதருமாய் இருக்கிறார் என்று எனக்கு நன்றாய் விளங்குகிறது.
10 ஆதலால், அவர் நம்மிடம் வரும் போதெல்லாம் அவர் நம்மோடு தங்கும்படி நாம் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் ஒரு படுக்கை, மேசை, நாற்காலி, விளக்குத்தண்டு முதலியன தயார் படுத்தி வைப்போம்" என்றாள்.
11 ஒருநாள் எலிசேயு அவ்வறையில் தங்கி அங்கு ஓய்வெடுத்தார்.
12 பின்பு அவர் தம் ஊழியன் ஜியேசியை நோக்கி, "அந்தச் சூனாமித்தாளைக் கூப்பிடு" என்றார். ஜியேசி அவளை அழைக்க, அவள் இறைவாக்கினர் முன் வந்து நின்றாள்.
13 அப்போது எலிசேயு தன் ஊழியனைப் பார்த்து, "நீ அவளோடு பேசி, 'அம்மணி, நீர் எல்லாவற்றிலும் வெகு சிரத்தையோடு எங்களுக்குப் பணிவிடை புரிந்து வந்துள்ளீர்; ஆதலின் நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? அரசரிடத்திலாவது, படைத் தலைவரிடமாவது பரிந்து பேசும்படி ஏதும் உளதா?' என்று கேள்" என்றார். அதற்கு அவள், "என்னுடைய இனத்தாரின் நடுவே நான் அமைதியாய் வாழ்ந்து வருகிறேன்" என்றாள்.
14 மேலும், அவர் ஜியேசியைப் பார்த்து, "நான் அவளுக்கு என்ன செய்யும்படி அவள் விரும்புகிறாள் என்று கேள்" என்றார். அதற்கு ஜியேசி, "கேட்கவும் வேண்டுமோ? அவளுக்குப் பிள்ளையே கிடையாது; அவள் கணவருக்கும் வயதாகி விட்டது" என்றான்.
15 அப்போது எலியேசு அவளைத் தம்மிடம் அழைத்து வர ஜியேசிக்குக் கட்டளையிட்டார். அவளும் வந்து வாயில் முன் நின்றாள்.
16 அப்போது எலியேசு அவளைப் பார்த்து, "நீ உயிரோடு வாழ்ந்து வருவாயாகில், இதே நேரத்தில் இதே வினாடியில் நீ ஒரு மகனைக் கருத்தரிப்பாய்" என்று மொழிந்தார். அதற்கு அவள் "ஐயனே, கடவுளின் மனிதரே! உம்மை மன்றாடுகிறேன். உம் அடியாளிடம் பொய் சொல்ல வேண்டாம்" என்றாள்.
17 அப்பெண்மணி எலிசேயு குறித்த காலத்தில், குறித்த நேரத்தில் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள்.
18 குழந்தை வளர்ந்தான். ஒருநாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றிருந்தான்.
19 அப்போது, தன் தந்தையைப் பார்த்து "எனக்குத் தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது" என்று சொன்னான். அவனோ தன் ஊழியன் ஒருவனைப் பார்த்து, "நீ இவனைத் தூக்கி கொண்டு போய் இவன் தாயிடம் விடு" என்றான்.
20 அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அவன் தாயிடம் விட்டான். அவள் அவனை நண்பகல் வரை மடிமேல் வளர்த்தி வைத்திருந்தாள். அதன் பின் அவன் இறந்தான்.
21 அவளோ கடவுளுடைய மனிதரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினாள்; பின்னர் கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள்.
22 தன் கணவனை அழைத்து, "கடவுளின் மனிதரிடம் நான் போய்வர வேண்டும்; எனவே, என்னோடு உம் வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்" என்று கூறினாள்.
23 அதற்கு அவன், "நீ அவரிடம் போகவேண்டிய காரணம் என்ன? இன்று மாதத்தின் முதல் நாளும் அன்று, ஓய்வு நாளும் அன்று" என்றான். அதற்கு, "நான் போக வேண்டியதிருக்கிறது" என்று பதில் உரைத்தாள்.
24 அவள், கழுதைக்குச் சேணமிட்ட பின் தன் ஊழியனை நோக்கி, "வழியில் எனக்குத் தாமதம் நேரிடாதபடி கழுதையை வேகமாய் ஓட்டிச் செல். மேலும் நான் உனக்குச் சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும்" என்று ஆணையிட்டாள்.
25 இங்ஙனம் புறப்பட்டு கார்மேல் மலையின் கண் தங்கியிருந்த கடவுளின் மனிதரிடம் வந்தாள். அவள் தன்னை நோக்கி வருவதைக் கண்ணுற்ற அவர், தம் ஊழியன் ஜியேசியை நோக்கி, "இதோ, சூனாமித்தாள் வருகிறாள்.
26 நீ அவளை எதிர்கொண்டுபோய், அவளைப் பார்த்து: 'நீரும் உம் கணவரும் உம் மகனும் நலமாய் இருக்கிறீர்களா?' என்று கேள்" என்றார். அவள் மறுமொழியாக, "நலமுடன் தான் இருக்கிறோம்" என்றாள்.
27 பிறகு அவள் மலையின் மேல் இருந்த கடவுளின் மனிதரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டாள். அவளை அப்புறப்படுத்த ஜியேசி அருகில் வந்த போது, கடவுளின் மனிதர் அவனை நோக்கி, "அவளை விட்டு விடு. ஏனெனில் அவளது உள்ளம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. ஆண்டவர் அதன் காரணத்தை எனக்கு அறிவிக்காமல் மறைத்து வைத்துள்ளார்" என்றார்.
28 அப்போது அவள் அவரை நோக்கி, "ஐயனே, உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? என்னை ஏமாற்ற வேண்டாம் என்று நான் உமக்கு முன்பே சொல்லவில்லையா?" என்றாள்.
29 எலிசேயு ஜியேசியைப் பார்த்து, "நீ உன் கச்சையை இடுப்பிலே கட்டி, என் ஊன்று கோலைக் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டாலும் வணக்கம் செய்யாதே; உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செலுத்தாதே. வீட்டுக்குள்ளே போய் என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை" என்றார்.
30 ஆனால் சிறுவனின் தாய் எலிசேயுவை நோக்கி, "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விடவே மாட்டேன்" என்றாள். ஆதலால் எலிசேயு எழுந்து அவளைப் பின்தொடர்ந்தார்.
31 ஜியேசியோ இவர்களுக்கு முன்பே நடந்து போய் ஊன்று கோலைச் சிறுவனின் முகத்தின் மேல் வைத்திருந்தான். ஆயினும் சிறுவனுக்கு உணர்வுமில்லை, பேச்சுமில்லை என்று கண்டு, திரும்பித் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, "சிறுவன் உயிர் பெறவில்லை" என அறிவித்தான்.
32 எலிசேயு வீட்டினுள் நுழைந்து, இறந்த சிறுவன் தம் படுக்கையின் மேல் கிடக்கக் கண்டார்.
33 அப்பொழுது எலிசேயு சிறுவன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டு, ஆண்டவரை நோக்கி வேண்டினார்.
34 பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும், கண்ணோடு கண்ணும், கைகளோடு கைகளும் வைத்துச் சிறுவன் மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறினது.
35 பின்பு படுக்கையை விட்டு இறங்கி அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின் மேல் ஏறிச் சிறுவன் மீது படுத்துக் கொண்டார். அப்போது குழந்தை ஏழுமுறை கொட்டாவி விட்டுக் கண் திறந்தது.
36 எனவே, எலிசேயு ஜியேசியை அழைத்து, "அந்தச் சூனாமித்தாளை அழைத்துவா" என்றார். அவள் அறையில் நுழைந்த போது எலிசேயு அவளை நோக்கி, "உன் மகனை எடுத்துக்கொண்டு போ" என்றார்.
37 அவள் அவரை அணுகி, அவரது காலடியில் வீழ்ந்து, தரை மட்டும் பணிந்து அவரை வணங்கினாள். பின்பு தன் மகனைக் கூட்டிக்கொண்டு வெளியே போனாள்.
38 எலிசேயு கல்கலாவுக்குத் திரும்பினார். நாட்டில் பஞ்சம் நிலவி வந்தது. இறைவாக்கினரின் பிள்ளைகள் அவரோடு வாழ்ந்து வந்தனர். எலிசேயு தம் ஊழியர்களில் ஒருவனை நோக்கி, "நீ ஒரு பெரிய பானையை எடுத்து இறைவாக்கினரின் பிள்ளைகளுக்குச் சாப்பாடு தயார் செய்" என்றார்.
39 அப்போது அவர்களில் ஒருவன், காட்டுக் கீரை பறிப்பதற்காக வயல் வெளிக்குச் சென்றான். அங்கே காட்டுத் திராட்சை போன்ற ஒருவிதக் கொடியைக் கண்டு, அதினின்று தன் போர்வை நிறையப் பேய்க் குமட்டிக் காய்களைப் பறித்து வந்தான். பின்னர் அவற்றைத் துண்டு துண்டாய் நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்தான். ஏனெனில், அவை என்ன என்று அவனுக்குத் தெரியாது.
40 பின்பு தம் தோழர்களுக்கு அதைச் சாப்பிடப் பரிமாறினர். அவர்கள் அதைச் சுவை பார்த்ததும், "கடவுளின் மனிதரே, இப்பானையில் சாகடிக்கக் கூடிய பொருள் ஏதோ இருக்கிறது" எனக் கூக்குரலிட்டனர். அவர்களால் அதை உண்ண முடியவில்லை.
41 எலிசேயு அவர்களைப் பார்த்து, "கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்" என்றார். அவர்கள் கொண்டு வரவே, அவர் அம் மாவைப் பானையில் போட்டு, "அவர்கள் உண்ணும்படி இதைப் பரிமாறுங்கள்" என்று சொன்னார். இப்பொழுது அது கசக்கவே இல்லை.
42 பாவால்சலிசா என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் புதுத் தானியத்தில் செய்யப்பட்ட சில அப்பங்களையும், இருபது வாற்கோதுமை உரொட்டிகளையும், ஒரு சாக்குப் புதுத் தானியத்தையும் கடவுளின் மனிதரிடம் கொண்டுவந்தான். எலிசேயு, "இவ்வப்பங்களை மக்களுக்குச் சாப்பிடக்கொடு" என்றார்.
43 அவன் மறுமொழியாக, "நூறு பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றான். அவர் மறுபடியும் ஊழியனை நோக்கி, "மக்களுக்கு இவற்றைச் சாப்பிடக் கொடு. ஏனெனில், 'இவர்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் திருவுளம் பற்றியுள்ளார்" எனக் கூறினார்.
44 எனவே, அவன் அவற்றை அவர்களுக்குப் பரிமாறினான். அவர்களும் உண்டனர். ஆண்டவர் சொல்லியிருந்தபடி மீதியும் இருந்தது.
×

Alert

×