Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Kings Chapters

2 Kings 21 Verses

1 மனாசே அரசனான போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் யெருசலேம் நகரில் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் ஆப்சிபா.
2 அவன், ஆண்டவர் இஸ்ராயேல் மக்களின் பொருட்டு அழித்திருந்த புறவினத்தாரின் இழிவான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு, ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான்.
3 அவனுடைய தந்தை எசேக்கியாசு அழித்துவிட்ட மேடுகளைத் திரும்பவும் ஏற்படுத்தினான். பாவாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான். இஸ்ராயேல் அரசன் ஆக்காசு செய்ததுபோல் சிலைச் சோலைகளையும் ஏற்படுத்தினான். விண்மீன்களை எல்லாம் வழிபட்டு அவற்றிற்கு ஊழியம் செய்து வந்தான்.
4 'யெருசலேமில் நமது பெயர் விளங்கச்செய்வோம்' என்று ஆண்டவர் தம் ஆலயத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அவ்வாலயத்தில் மனாசே பீடங்களை எழுப்பினான்.
5 ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் விண் சக்திகளுக்கு எல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
6 மேலும் தன் மகனைத் தீயைக் கடக்கச் செய்து, குறிபார்த்துச் சகுனங்களையும் கடைப்பிடித்து வந்தான். ஆண்டவர் திருமுன் பாவம் செய்து, அவர் கோபத்தை மூட்டக் குறி கூறுபவர்களையும் சகுனம் பார்ப்பவர்களையும் ஏராளம் ஏற்படுத்தினான்.
7 இவ்வாலயத்திலும், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து நாம் தேர்ந்துகொண்ட நகரான யெருசலேமிலும் நமது பெயர் என்றென்றும் விளங்கச் செய்வோம்' என்று தமது ஆலயத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் சொல்லியிருந்தார். அதே ஆலயத்தில் மனாசே தான் சோலையில் செய்து வைத்திருந்த சிலை ஒன்றையும் அங்கே நிறுவினான்.
8 நாம் அவர்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும், நம் அடியான் மோயீசன் அளித்த சட்ட முறையின் படி இஸ்ராயேலர் கடைப்பிடித்து வந்தால் நாம் இனி அவர்களை அவர்தம் முன்னோருக்கு நாம் கொடுத்த நாட்டை விட்டு அலைய விடுவதில்லை' என்று சொல்லியிருந்தார் ஆண்டவர்.
9 அவர்கள் அதற்குச் செவிமடுக்கவில்லை. மனாசேயால் தவறான வழியிலே நடத்தப்பட்டு வந்த இஸ்ராயேல் மக்கள் தங்கள் முன்னிலையில் ஆண்டவர் அழித்திருந்த புறவினத்தாரை விட அதிகத் தீமை புரிந்து வந்தனர்.
10 ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:
11 யூதாவின் அரசன் மனாசே தனக்கு முன்னிருந்த அமோறையர் செய்துவந்த அனைத்தையும்விடக் கேடான இந்த இழிசெயல்களைச் செய்தான். மேலும், தனது தூய்மையற்ற நடத்தையால் யூதாவைப் பாவத்திற்கு ஆளாக்கினான்.
12 எனவே இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: இதோ நாம் யெருசலேமின்மேலும் யூதாவின்மேலும் கேடுகள் வரச் செய்வோம். அவை எவ்வளவு அஞ்சத்தக்கவை என்றால், அவற்றைக் கேட்பவருடைய இரு காதுகளும் விடவிடத்துப்போகும்.
13 சமாரியாவுக்கு விரோதமாய் நான் பிடித்த அளவு நூலையும், ஆக்காபின் வீட்டிற்கு விரோதமாய் நான் பிடித்த தூக்கு நூலையும் யெருசலேமுக்கு விரோதமாகவும் பிடிப்பேன். ஒருவன் வட்டிலைத் துடைத்துக் கவிழ்த்து வைக்கிறது போல் நான் யெருசலேமைத் துடைத்துக் கவிழ்த்து விடுவேன். மட்ட நூலையும், ஆக்காப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்போம். ஒருவன் தான் எழுதும் பலகையைத் துடைப்பது போல் நாம் யெருசலேமைத் துடைத்து விடுவோம். துடைத்த பின் நமது எழுது கோலைக் கொண்டு அதன் முகத்தைக் குத்திக் கிறுக்கி விடுவோம்.
14 அவர்கள் தங்கள் முன்னோர் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் நம் திருமுன் பாவங்கள் பல புரிந்து நமது கோபத்தை மூட்டி வந்திருக்கின்றனர். எனவே நம் சொந்த மக்களுள், நமது உரிமைப் பொருளில் எஞ்சியிருப்போரைக் கைநெகிழ்ந்து, அவர் தம் பகைவரின் கையில் அவர்களை ஒப்படைப்போம்.
15 அப்போது அவர்கள் தங்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பார்கள்" என்பதாம்.
16 ஆண்டவர் திருமுன் யூதா மக்கள் தீயன புரியும்படி செய்து அவர்களைப் பாவத்திற்கு ஆளாக்கிய பாவம் தவிர, யெருசலேம் நகர் முழுவதும் நிரம்பும் அளவிற்கு மனாசே மாசற்றவரின் குருதியைச் சிந்தினான்.
17 மனாசேயின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் புரிந்த பாவமும் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டிருக்கின்றன.
18 மனாசே தன் முன்னோரோடு துயில் கொள்ள, ஓசா தோட்டமாகிய அவனது அரண்மனைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் ஆமோன் அரசன் ஆனான்.
19 ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு. அவன் ஈராண்டுகள் யெருசலேமில் அரசோச்சினான். அவனுடைய தாயின் பெயர் மெச்சாலேமெத். இவள் எத்தபாவைச் சேர்ந்த காருசுவின் மகள்.
20 அவன் தன் தந்தை மனாசேயைப்போலவே ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான்.
21 தன் தந்தை காட்டிய வழியிலெல்லாம் தானும் நடந்தான். தன் தந்தை வழிபட்டு வந்த அருவருப்பான சிலைகளை அவனும் வழிபட்டு வந்தான்.
22 தன் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தான். ஆண்டவர் காட்டிய வழியே நடக்கவில்லை.
23 ஆமோனுடைய ஊழியர் அரசனுக்கு எதிராகச் சதி செய்து அவனை அரண்மனையிலேயே கொலை செய்தனர்.
24 ஆனால் மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சதி செய்தவர்களை எல்லாம் கொன்று விட்டு அவனுடைய மகன் யோசியாசை அவனுக்குப் பதிலாக மன்னனாக்கினர்.
25 ஆமோனின் மற்றச் செயல்கள் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
26 ஓசாவின் தோட்டத்திலுள்ள அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோசியாசு அவனுக்குப் பின் அரசோச்சினான்.
×

Alert

×