Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Chronicles Chapters

2 Chronicles 28 Verses

1 ஆக்காஸ் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபது. அவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். தன் மூதாதையாகிய தாவீதைப் போல் அவன் ஆண்டவர் திருமுன் நேரிய வழியில் நடக்கவில்லை.
2 மாறாக இஸ்ராயேல் அரசர்களின் வழிகளைப் பின்பற்றிப் பாவாலுக்கு வார்ப்புச் சிலைகளைச் செய்தான்.
3 அவன் பென்னென்னோம் என்ற பள்ளத்தாக்கில் தூபம் காட்டவும், இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவர் அழித்திருந்த புறவினத்தாரின் வழக்கத்தைப் பின்பற்றித் தன் பிள்ளைகளைத் தீயில் எரித்து விடவும் துணிந்தான்.
4 மேடைகளிலும் குன்றுகளிலும் அடர்ந்த தழையுள்ள மரங்களின் கீழும் அவன் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தான்.
5 அதன் பொருட்டு அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் சீரியா அரசன் கையில் அவனை ஒப்புவித்தார். இவன் படையெடுத்து வந்து ஆக்காசை முறியடித்து, அவனது நாட்டிலிருந்து ஏராளமான பொருட்களைக் கொள்ளையிட்டுத் தமாஸ்கு நகருக்குக் கொண்டு போனான். மேலும் ஆக்காஸ் இஸ்ராயேல் அரசனின் கையில் ஒப்படைக்கப்பட்டான். இவன் பலரைக் கொன்று அவர்கள் தோல்வியுறச் செய்தான்.
6 அதாவது, ருமேலியின் மகன் பாக்கே ஒரே நாளில் யூதா மனிதரில் நூற்றிருபதாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினான்; இவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்தவர்களே. எனினும் இவர்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்திருந்தனர்.
7 அன்றியும் எப்பிராயீமின் வலிமை மிக்க மனிதன் ஜெகீரி அரசனின் மகன் மவாசியாசையும் அரண்மனைத் தலைவனான எஜ;ரிகாவையும், அரசனுக்கு அடுத்த நிலையில் இருந்த எல்கனாவையும் கொன்று போட்டான்.
8 அது தவிர இஸ்ராயேல் மனிதர் தங்கள் சகோதரராகிய மக்களிலே இரண்டு லட்சம் பெண்களையும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிறைபிடித்தார்கள்; திரளான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சமாரியா நகருக்குக் கொண்டு போனார்கள்.
9 அக்காலத்தில் ஒதேத் என்ற ஓர் இறைவாக்கினர் அங்கு இருந்தார். அவர் சமாரியாவை நோக்கி வந்து கொண்டிருந்த படைக்கு எதிரே போய் அவர்களை நோக்கி, "இதோ உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய ஆண்டவர் யூதாவின் மேல் சினம் கொண்டு அவர்களை உங்கள் கைகளில் ஒப்புவித்தார். நீங்களோ அவர்களைக் கொடூரமாய்க் கொலை செய்தீர்கள். உங்களது கொடும் செயல் வானமட்டும் எட்டியது.
10 இப்பொழுதோ யூதாவின் மக்களை உங்களுக்கு வேலைக்காரர்களாகவும் வேலைக் காரிகளாகவும் அடிமைப்படுத்த வேண்டும் என்று கருதியுள்ளீர்கள். அது தகாது. இதைக் கருதியது கூட உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக பாவம்.
11 ஆதலால் என் வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் சிறைப்படுத்தியுள்ள உங்கள் சகோதரர்களைத் தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகும்படி அனுப்பி விடுங்கள். இல்லாவிட்டால் ஆண்டவரின் கடும் கோபம் உங்கள்மேல் விழும்" என்றார்.
12 ஆகவே எப்பிராயீம் மக்கள் தலைவர்களான யோவனானின் மகன் அசாரியாசும், மோசொல்லாமோத்தின் மகன் பராக்கியாசும், செல்லுமின் மகன் எசெக்கியாசும், அத்லியின் மகன் அமாசாவும் போரிலிருந்து திரும்பி வந்தவர்களை எதிர் கொண்டு சென்றனர்.
13 அவர்களை நோக்கி, "நீங்கள் சிறைபிடித்த இவர்களை நம் ஊருக்குள் கொண்டு வரவே கூடாது; அது ஆண்டவருக்கு எதிரான குற்றமாகும். நமது சொந்தப் பாவங்களே ஏராளமாய் இருக்கின்றன. அப்படியிருக்க இன்னும் பாவம் செய்யத் துணிவது ஏன்? அதனால் இஸ்ராயேலின் மேல் ஆண்டவரின் கோபம் வருமன்றோ?" என்றனர்.
14 அதைக் கேட்டு அவ்வீரர்கள் தலைவர்களுக்கு முன்பாகவும் எல்லா மக்களுக்கு முன்பாகவும் சிறைப்பட்டோரை விடுதலை செய்தனர்; கொள்ளைப் பொருட்களையும் திருப்பிக் கொடுத்தனர்.
15 அப்பொழுது அத்தலைவர்கள் எழுந்து சிறைப்பட்டோர் அனைவரையும் அழைத்து அவர்களில் உடை அற்றிருந்தவர்களுக்குக் கொள்ளையடிக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்தனர். அவர்களுக்கு உடுப்புகளையும் மிதியடிகளையும் அணிவித்து, சாப்பிடவும் குடிக்கவும், உடலில் பூச எண்ணெயும் கொடுத்து அவர்களது களைப்பைப் போக்கினர். பிறகு நடக்கச் சக்தியற்றவரையும் தளர்ச்சியுற்றவரையும் குதிரைகளின் மேல் ஏற்றி ஈந்து மரங்களின் நகரமான எரிக்கோவிலிருந்த அவர்களுடைய சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்; பின்னர் சமாரியா திரும்பினர்.
16 அக்காலத்தில் ஆக்காஸ் என்ற அரசன் அசீரிய அரசனுக்குத் தூதுவரை அனுப்பித் தனக்குத் துணை செய்யும்படி மன்றாடினான்.
17 ஏதோமியர் வந்து யூதாவை முறியடித்து ஏராளமான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
18 பிலிஸ்தியர் யூதாவின் சமவெளிகளிலும் தென்னாட்டிலும் இருந்த நகர்களைத் தாக்கினர். பெத்சாமேசையும் சொக்கோவையும், தம்னாவையும் கம்சோவையும் அவற்றை அடுத்த ஊர்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினர்.
19 ஆண்டவர் யூதாவை இவ்வாறு சிறுமைப்படுத்தினதற்குக் காரணம், யூதாவின் அரசன் ஆக்காஸ் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணித்திருந்தது தான்.
20 மேலும், அசீரிய அரசன் தெல்காத்பல்னசார் அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை தோற்கடித்தான். அதுவுமன்றித் தன்னை எதிர்க்க யாரும் இல்லாததால் நாட்டைப் பாழாக்கினான்.
21 ஆக்காஸ் ஆண்டவரின் ஆலயத்திலும், அரசரின் அரண்மனையிலும், தலைவர்களின் வீடுகளிலுமிருந்த செல்வங்களை எல்லாம் எடுத்து அசீரிய அரசனுக்குப் பரிசாகக் கொடுத்தான். அவ்வாறு கொடுத்தும் அதனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.
22 அரசன் ஆக்காஸ் இவ்வளவு துன்புற்ற போதிலும் அவன் மேன் மேலும் ஆண்டவரைப் புறக்கணிக்கத் தொடங்கினான்.
23 அவன், "சீரியா நாட்டுத் தெய்வங்கள் சீரியருக்குத் துணையாய் இருக்கின்றன; ஆதலால் அவை எனக்கும் துணை செய்யும் பொருட்டு நான் அவற்றிற்குப் பலியிடுவேன்" என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்திருந்த தமாஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். அதற்கு மாறாக அவை அவனுக்கும் இஸ்ராயேலருக்கும் அழிவையே தேடித் தந்தன.
24 ஆக்காஸ் கடவுளுடைய ஆலயத்தில் இருந்த தட்டுமுட்டுகளை எல்லாம் நொறுக்கி ஆலயத்தின் கதவுகளைப் பூட்டி விட்டு யெருசலேமில் மூலைக்கு மூலை பலி பீடங்களை அமைத்தான்.
25 மேலும் பொய்த் தெய்வங்களுக்குத் தூபம் காட்ட யூதாவின் ஒவ்வொரு நகரிலும் பலிபீடங்களை எழுப்பி, தன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கடுஞ்சினம் மூட்டினான்.
26 அவனுடைய மற்றச் செயல்களும், அவனது வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலற்றில் இடம் பெற்றுள்ளன.
27 ஆக்காஸ் தன் முன்னோரோடு துயிலுற்றான். அவன் யெருசலேம் நகரில் புதைக்கப்பட்டாலும், இஸ்ராயேலின் அரச கல்லறைக்குப் புறம்பே புதைக்கப்பட்டான். அவனுடைய மகன் எசெக்கியாஸ் அவனுக்கு பின் அரசனானான்.
×

Alert

×