Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Chronicles Chapters

2 Chronicles 26 Verses

1 அப்பொழுது யூதா மக்கள் அனைவரும் மாசியாசின் மகனான ஒசியாசை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரியணையில் ஏற்றினார்கள். அப்பொழுது அவனுக்கு வயது பதினாறு தான்.
2 அரசன் தன் முன்னோரோடு கண் வளர்ந்த பின் ஓசியாஸ் அயிலாத் நகரைப் புதிதாய்க் கட்டி அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டான்.
3 ஓசியாஸ் அரியணை ஏறிய போது அவனுக்கு வயது பதினாறு. ஐம்பத்திரண்டு ஆண்டுகள் யெருசலேமில் அவன் ஆட்சி செலுத்தினான். யெருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பெயர் எக்கேலியா.
4 அவன் தன் தந்தை அமாசியாசைப் போன்றே ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான்.
5 தெய்வ பயத்தை அவனுக்குப் போதித்து வந்த சக்கரியாசின் வாழ்நாள் முழுவதும் ஓசியாஸ் கடவுளைத் தேடிவந்தான். அவன் ஆண்டவரைத் தேடின காலமெல்லாம், அவர் எல்லாக்காரியங்களிலும் அவனுக்கு வெற்றி அளித்தார்.
6 பின்பு ஓசியாஸ் படையெடுத்துச் சென்று பிலிஸ்தியரோடு போரிட்டுக் கேத் என்ற நகரின் மதிலையும், யப்னி, ஆஜோத் நகர்களின் மதிலையும் தகர்த்தெறிந்தான். ஆஜோத் நாட்டிலும் பிலிஸ்தியரின் நாட்டிலும் நகர்களைக் கட்டினான்.
7 கடவுள் அவனுக்குத் துணையாய் இருந்ததனால் அவன் பிலிஸ்தியர்களையும், குர்பாலில் குடியிருந்த அரேபியர்களையும் அம்மோனியரையும் வென்றான்.
8 அம்மோனியர் ஓசியாசுக்குக் கப்பம் கட்டி வந்தனர். அவனது வெற்றியை முன்னிட்டு அவனது புகழ் எகிப்தின் எல்லை வரை எட்டினது.
9 ஓசியாஸ் யெருசலேமில் மூலை வாயிலின் மேலும் பள்ளத்தாக்கு வாயிலின் மேலும் மூலைகளிலும் கோபுரங்களைக் கட்டி அவற்றைப் பலப்படுத்தினான்.
10 அவன் பாலைவனத்திலும் கோபுரங்களைக் கட்டினான்; பல கிணறுகளையும் வெட்டினான். ஏனெனில் அவனுக்குப் பாலைவனத்திலும் சமவெளியிலும் ஆடு மாடுகள் ஏராளமாய் இருந்தன. மலைகளிலும் வயல் வெளிகளிலும் விவசாயிகளும் திராட்சை பயிரிடுவோரும் அவனுக்கு இருந்தனர். ஏனெனில் ஓசியாஸ் வேளாண்மையில் அதிக நாட்டம் காட்டி வந்தான்.
11 போர் தொடுக்கப் படை ஒன்றும் ஓசியாசுக்கு இருந்தது. அது செயலன் எகியேல், அறிஞன் மவாசியாஸ், அரச அலுவலருள் ஒருவனான அனானியாஸ் ஆகியோருக்குக் கீழ் முப்பிரிவுகளாக இயங்கி வந்தது.
12 பல வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்த இப்போர் வீரர்களின் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு போர்.
13 இவர்களது அதிகாரத்தின் கீழ் இருந்த போர்வீரர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து ஏழாயிரத்தைந்நூறு. போரிடுவதில் திறமை வாய்ந்த இவர்கள் அனைவரும் அரசனின் சார்பில் எதிரிகளோடு போரிடுவர்.
14 அவர்களுக்குத் தேவையான கேடயம், ஈட்டி, தலைச்சீரா, மார்புக்கவசம், வில், கவண் முதலிய போர்க் கருவிகளை ஓசியாஸ் அவர்களுக்குத் தயாரித்துக் கொடுத்திருந்தான்.
15 கோபுரங்களிலிருந்தும், மதிலின் எல்லா மூலைகளினின்றும் அம்புகளையும் பெரிய கற்களையும் எறியக் கூடிய பலவித கருவிகளையும் ஓசியாஸ் செய்தான். ஆண்டவர் அவனுக்குத் துணை செய்து அவனைப் பலப்படுத்தியிருந்ததால் அவனது புகழ் எத்திக்கும் பரவிற்று.
16 இவ்வாறு ஓசியாசின் பலம் அதிகரிக்கவே, அவன் செருக்குற்றுத் தன் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்தான்; இதன் மூலம் தனக்கு அழிவைத் தேடிக் கொண்டான். அதாவது, அவன் ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்து தூபப் பீடத்தின் மேல் தூபம் காட்ட துணிந்தான்.
17 அதைக் கேள்விப்பட்டுக் குரு அசாரியாசும், அவரோடு ஆண்டவரின் ஆற்றல் படைத்த குருக்கள் எண்பது பேரும் அவன் பிறகே சென்று, அரசனைத் தடுத்தனர்;
18 ஓசியாசே, ஆண்டவர் திருமுன் தூபம் காட்டுவது உம் வேலை அன்று; அது அபிஷுகம் பெற்ற ஆரோனின் புதல்வராகிய குருக்களுக்கே உரிய வேலை. இத்திருவிடத்தை விட்டு உடனே வெளியேறும். நீர் செய்வது பாவம். இதனால் ஆண்டவராகிய கடவுள் உம்மை மேன்மைப்படுத்தப் போவதில்லை" என்றனர்.
19 அதைக் கேட்ட ஓசியாஸ் கோபம் கொண்டான். அவன் தூபக் கலசத்தைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு குருக்களை மிரட்டினான். உடனே குருக்களின் முன்னிலையில் அங்கேயே அரசனின் நெற்றியில் தொழுநோய் கண்டது.
20 பெரிய குரு அசாரியாசும் ஏனைய குருக்களும் அவனது நெற்றியில் தொழுநோய் தென்படக் கண்டவுடன், அவனை அங்கிருந்து விரைவாய் வெளியேற்றினர். அந்நேரத்தில் ஓசியாஸ் தன்னை ஆண்டவர் தண்டித்தார் என்று உணர்ந்து பீதியுற்று வெளியே போக விரைந்தான்.
21 அரசன் ஓசியாஸ் தன் வாழ்நாள் எல்லாம் தொழுநோயாளனாகவே இருந்தான். அந்நோய் அவன் உடலெங்கும் பரவவே அவனை ஆண்டவரின் ஆலயத்திலிருந்து விலக்கி வைத்திருந்தனர். எனவே அவன் ஒரு தனித்த வீட்டிலே வாழ வேண்டியிருந்தது. அன்று முதல் அவனுடைய மகன் யோவாத்தாம் அரசனின் அரண்மனையில் தலைமை எற்று நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி வந்தான்.
22 ஓசியாசின் வரலாறு முழுவதையும் ஆமோசின் மகன் இசயாசு என்ற இறைவாக்கினர் எழுதி வைத்துள்ளார்.
23 ஓசியாஸ் தன் முன்னோரோடு துயிலுற்றான். அவன் தொழுநோயாளியாய் இருந்ததால் மக்கள் அவனுடைய முன்னோரின் கல்லறையில் அவனை அடக்கம் செய்யாது, அதற்கடுத்த நிலத்தில் அவனைப் புதைத்தனர். அவனுடைய மகன் யோவாத்தாம் அவனுக்குப்பின் ஆட்சி புரிந்தான்.
×

Alert

×