Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Chronicles Chapters

2 Chronicles 13 Verses

1 அரசன் எரொபோவாமின் பதினெட்டாம் ஆட்சி ஆண்டில் ஆபியா யூதாவைத் தனக்கு அடிமைப் படுத்தினான்.
2 அவன் மூன்று ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் மிக்கா. இவள் காபாவா ஊரானான உரியலின் மகள். ஆபியாவுக்கும் எரொபோவாமுக்கும் இடையே போர் நடந்தது.
3 ஆபியா பொறுக்கி எடுக்கப்பட்ட நாற்பதினாயிரம் திறமை மிக்க வீரர்களுடன் போருக்கு வந்தான். எரொபோவாம் பொறுக்கி எடுக்கப்பட்ட எண்பதினாயிரம் திறமை மிக்க வீரர்களை அவனுக்கு எதிராகப் போருக்கு நிறுத்தினான்.
4 அப்பொழுது ஆபியா எப்பிராயீமிலுள்ள செமெரோன் மலையின் மேல் ஏறி நின்று, "எரொபோவாமே, இஸ்ராயேல் மக்களே, கேளுங்கள்.
5 இஸ்ராயேலின் அரசை என்றென்றும் தாவீதின் சந்ததியிலேயே நிலைநாட்டும் பொருட்டும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் செய்த உடன்படிக்கையை நீங்கள் அறிவீர்கள்!
6 ஆயினும் தாவீதின் மகன் சாலமோனின் ஊழியனாயிருந்த நாபாத்தின் மகன் எரொபோவாம் தன் தலைவருக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்துள்ளான்.
7 வீணரும் பெலியாலின் மக்களும் அவனோடு சேர்ந்துகொண்டு சாலமோனின் மகன் ரொபோவாமை வென்றனர். ஏனெனில் ரொபோவாம் அனுபவம் அற்றவனும் கோழையுமாயிருந்ததால் அவர்களை எதிர்த்து நிற்க அவனால் முடியவில்லை.
8 இப்போதோ தாவீதின் சந்ததிக்கு ஆண்டவர் கொடுத்துள்ள அரசை எதிர்த்து நிற்கலாம் என்று எண்ணுகிறீர்கள்; உங்களைப் பின்பற்றப் பலர் இருக்கின்றனர். எரொபோவாம் உங்களுக்குத் தெய்வங்களாகச் செய்து கொடுத்த பொன் கன்றுக்குட்டிகளும் உங்கள் கையில் இருக்கின்றன.
9 ஆரோனின் புதல்வர்களான ஆண்டவரின் குருக்களையும் லேவியர்களையும் தள்ளிவிட்டு, புறவினத்தாரைப் போன்று உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள். ஓர் இளங்காளையையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஒப்புக்கொடுத்துத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் எவனும் பொய்த் தெய்வங்களின் குருவாகிறான்.
10 எங்களுக்கோ ஆண்டவர்தாம் கடவுள். நாங்கள் அவரை விட்டு அகலவே மாட்டோம். ஆரோனின் புதல்வரான குருக்களே ஆண்டவருக்குத் திருப்பணி புரிவர். ஆலயத்தைச் சேர்ந்த மற்ற பணிகளை லேவியர் மட்டுமே செய்வர்.
11 அவர்கள் நாள்தோறும் ஆண்டவருக்குத் தகனப்பலிகளைக் காலையும் மாலையும் ஒப்புக்கொடுப்பர். மேலும் திருச் சட்டப்படி சேர்க்கப்பட்ட நறுமண வகைகளைச் செலுத்திப் பரிசுத்தமான மேசையின் மீது காணிக்கை அப்பங்களை அடுக்கி வைப்பர். அதுவுமன்றி எங்களுக்குப் பொன் குத்து விளக்குத் தண்டு உண்டு. அதன் விளக்குகள் மாலை தோறும் ஏற்றப்படுகின்றன. நீங்கள் எங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளை விட்டு விலகினீர்கள்; நாங்களோ அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றோம்.
12 இதோ எங்கள் படைக்கு ஆண்டவரே தலைவர்; உங்களுக்கு எதிராய் எக்காளங்களைப் பேரொலியோடு முழங்குபவர்கள் ஆண்டவரின் குருக்களே. இஸ்ராயேலின் புதல்வர்களே, உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் போரிட வேண்டாம்; அது உங்களுக்கு நல்லது அன்று" என்றான்.
13 ஆபியா அவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், எரொபோவாம் அவனுக்குப் பின்னால் பதிவிருக்கும் ஆட்களை அனுப்பி, யூதாவுக்குத் தெரியாமலே யூதாவின் படைகளைச் சுற்றி வளைத்திருந்தான்.
14 யூதா மக்கள் திரும்பிப் பார்த்த போது தங்களுக்கு முன்னும் பின்னும் எதிரிகள் நிற்கக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டனர். குருக்கள் எக்காளங்களை ஊதத் தொடங்கினர்.
15 யூதாவின் வீரர் அனைவரும் போர் முழக்கம் செய்ய ஆபியாவுக்கும் யூதாவுக்கும் எதிராகக் கிளம்பியிருந்த எரொபோவாமையும் இஸ்ராயேலர் அனைவரையும் கடவுள் முறியடித்தார்.
16 அப்போது இஸ்ராயேல் மக்கள் யூதா மக்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர். ஆண்டவர் அவர்களை யூதாவின் கையில் ஒப்புவித்தார்.
17 எனவே ஆபியாவும் அவனுடைய மக்களும் அவர்களை வெட்டி வீழ்த்தினர். இஸ்ராயேலில் ஆற்றல் மிக்க ஐந்து லட்சம் வீரர் காயம்பட்டு விழுந்தனர்.
18 அன்று இஸ்ராயேல் மக்கள் சிறுமையுற்றனர். யூதாவின் புதல்வர்களோ தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர் பால் நம்பிக்கை வைத்திருந்தபடியால் மேலும் வலுப்பெற்றனர்.
19 ஆபியா எரொபோவாமைப் பின்தொடர்ந்து அவனுக்குச் சொந்தமான நகர்களைப் பிடித்தான். அவை யாவன: பேத்தேலும் அதைச் சார்ந்த நகர்களும், ஏசானாவும் அதற்கடுத்த ஊர்களும், எப்பிரோனும் அதன் ஊர்களுமாம்.
20 அதுதொட்டு ஆபியாவின் வாழ்நாளெல்லாம் எரொபோவாமால் அவனை எதிர்த்து அடிக்க, அவனும் இறந்து பட்டான்.
21 ஆபியா மேலும் வலிமை அடைந்தான். பதினான்கு பெண்களை மணந்து கொண்டான். அவனுக்கு இருபத்திரண்டு புதல்வரும் பதினாறு புதல்வியரும் பிறந்தனர்.
22 ஆபியாவின் மற்றச் செயல்களும், அவனது நடத்தையும், அவன் ஆற்றிய உரைகளும் இறைவாக்கினர் இத்தோவின் நூலில் விரிவாய் எழுதப்பட்டிருக்கின்றன.
×

Alert

×