Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Chronicles Chapters

2 Chronicles 11 Verses

1 ரொபோவாம் யெருசலேமுக்கு வந்தவுடனே இஸ்ராயேலரோடு போரிடவும், தனது அரசைத் திரும்பவும் கைப்பற்றிக் கொள்ளவும் கருதி, யூதா குலத்தாரையும் பென்யமீன் குலத்தாரையும் வரச் செய்து, அவர்களில் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் போர் வீரர்களைத் தேர்ந்து கொண்டான்.
2 அப்பொழுது கடவுளின் மனிதர் செமொசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்காவது:
3 நீ யூதாவின் அரசனும் சாலமோனின் மகனுமான ரொபோவாமையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ராயேலரையும் நோக்கி, 'கடவுளின் வார்த்தையைக் கேளுங்கள்:
4 நீங்கள் உங்கள் சகோதரரை எதிர்த்துப் போரிடச் செல்ல வேண்டாம். நம்மாலே இச்செயல் நடந்துற்றமையால், நீங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள் என்று சொல்லுகின்றார்' என்பாய்" என்பதாம். அவர்கள் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு எரொபோவாமுக்கு எதிராய்ப் போரிடுவதை நிறுத்திவிட்டுத் தங்கள் வீடு திரும்பினர்.
5 ரொபோவாம் யெருசலேமில் வாழ்ந்து வந்தான். யூதாவில் அரணுள்ள நகர்களைக் கட்டினான்.
6 அவன் பெத்லகேம், ஏத்தாம்,தேக்குவே,
7 பெத்சூர், சொக்கோ, ஒதொல்லாம்,
8 கேத், மரேசா, ஜுப்,
9 அதுராம், லாக்கீசு, அஜேக்கா,
10 சாராவா, ஐயலோன், எபிரோன் ஆகிய நகர்களைக் கட்டினான். இவை யூதாவிலும் பென்யமீனிலுமே உள்ளன.
11 ரொபோவாம் அந்த நகர்களைச் சுற்றி மதில் எழுப்பிய பின் அவற்றில் ஆளுநர்களை ஏற்படுத்தினான். உணவுப் பொருட்கள், எண்ணெய், திராட்சை இரசம் முதலியவற்றிற்கான பண்டகசாலைகளையும் அமைத்தான்.
12 ஒவ்வொரு நகரிலும் கேடயம், ஈட்டி கொண்ட ஆயுதக் கிடங்குகளையும் நிறுவி, நகர்களை மிக்க விவேகத்துடன் உறுதிப்படுத்தினான். இவ்வாறாக அவன் யூதாவையும், பென்யமீனையும் ஆண்டு வந்தான்.
13 இஸ்ராயேல் நாடு எங்கணும் இருந்த குருக்களும் லேவியர்களும் அவனிடம் கூடி வந்தனர்.
14 ஏனெனில் அவர்கள் ஆலயத்தில் திருப்பணி புரியாதவாறு எரொபோவாமும் அவன் புதல்வரும் அவர்களை விலக்கி வைத்திருந்ததால், அவர்கள் தங்கள் ஊர்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு யூதா நாட்டுக்கும் யெருசலேமுக்கும் சென்றிருந்தனர்.
15 எரொபோவாம் தான் ஏற்படுத்திய மேடைகளுக்கென்றும் பேய்களுக்கென்றும் கன்றுக் குட்டிகளுக்கென்றும் குருக்களை நியமித்திருந்தான்.
16 இஸ்ராயேல் குலத்தாரில் தங்கள் கடவுளான ஆண்டவரையே முழு மனத்தோடும் பின்பற்ற மனதாயிருந்தவர்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த யெருசலேமுக்கு வந்து கொண்டிருந்தனர்.
17 இவ்வாறு மூன்றாண்டுகளாய் அவர்கள் யூதாவின் நாட்டைப் பலப்படுத்திச் சாலமோனின் மகன் ரொபோவாமின் ஆட்சியை உறுதிப்படுத்தினர். அவர்கள் தாவீதும் சாலமோனும் நடந்த வழியிலே மூன்று ஆண்டுகள் நடந்து வந்தனர்.
18 தாவீதின் மகன் எரிமோத்துக்கும், இசாயியின் மகனுக்குப் பிறந்த எலியாவின் புதல்வி அபிகாயிலுக்கும் பிறந்த மகலாத்தை ரொபோவாம் மணந்து கொண்டான்.
19 இவள்மூலம் ஜெகுஸ், சமொரியா, ஜொம் என்ற புதல்வர்கள் அவனுக்குப் பிறந்தனர்.
20 அவளுக்குப் பிறகு ரொபோவாம் அப்சலோமின் மகள் மாக்காளையும் மணந்தான். இவள் அவனுக்கு அபியா, ஏத்தாயி, ஜிஜா, சலொமித் என்பவர்களைப் பெற்றாள்.
21 ரொபோவாம் அப்சலோமின் மகளான இந்த மாக்காலைத் தன் எல்லா மனைவியரையும் வைப்பாட்டிகளையும் விட அதிகமாய் நேசித்து வந்தான். அவன் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டிகளையும் மணந்து இருபத்தெட்டுப் புதல்வர்களையும் அறுபது புதல்வியரையும் பெற்றெடுத்தான்.
22 அவன் மாக்காளின் மகன் ஆபியாவை அவனுடைய சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தினான். ஏனெனில் இவனையே அரசனாக்க அவன் எண்ணம் கொண்டிருந்தான்.
23 காரணம், இவன் அறிவுக் கூர்மையுடையவனாய், யூதா, பென்யமீன் நாடுகள் எங்கணுமிருந்த அரணுள்ள எல்லா நகர்களிலும் தன் சகோதரரை விடப் பேரும் புகழும் பெற்றிருந்தான்; அவன் தன் சகோதரர்களுக்கு வேண்டிய உணவையும் கொடுத்து அவர்களுக்குப் பல மனைவியரையும் தேடிக் கொடுத்தான்.
×

Alert

×