Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Chronicles Chapters

2 Chronicles 10 Verses

1 ரொபோவாம் சிக்கேமுக்குப் போனான். ஏனெனில் இஸ்ராயேலர் எல்லாரும் அவனை அரசனாக்கும்படி அங்குக் கூடியிருந்தனர்.
2 சாலமோனுக்கு அஞ்சி எகிப்திற்குத் தப்பியோடியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாம் அதைக் கேள்வியுற்று எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.
3 இஸ்ராயேலர் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார்கள். அவனும் இஸ்ராயேலர் அனைவரோடும் வந்தான். அவர்கள் ரொபோவாமை நோக்கி,
4 உம் தந்தை மிகப் பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தியுள்ளார். நீர் அப்பளுவான சுமையை இலகுவாக்கி எங்கள் சுமையின் பளுவைக் குறைக்க ஒத்துக் கொண்டால், நாங்கள் உமக்கு அடிபணிவோம்" என்றனர்.
5 அதற்கு ரொபோவாம், "நீங்கள் மூன்று நாள் பொறுத்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றான். மக்களும் அவ்வாறே மூன்று நாளுக்குப்பின் அவனிடம் சென்றனர்.
6 ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருந்த காலத்தில் அவருக்குப் பணி புரிந்து வந்த மூப்பரைக் கலந்துபேசி, நான் இம்மக்களுக்கு மறுமொழி கொடுக்க வேண்டுமே; நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?" என்று வினவினான்.
7 அவர்கள், "நீர் இம்மக்களிடம் அன்பாகப் பேசி நயமான வார்த்தைகளைச் சொல்லுவீரானால், என்றும் அவர்கள் உமக்கு அடிபணிவார்கள்" என்று மறுமொழி கூறினர்.
8 ரொபோவாம் மூப்பர் சொன்ன ஆலோசனையைத் தள்ளி விட்டுத் தன்னோடு எப்போதும் இருந்து தன் பந்தியில் அமர்ந்து உணவருந்தி வந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டான்.
9 மக்கள் என்னிடம் வந்து: 'உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை நீர் இலகுவாக்க வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொண்டனர். அதற்கு நான் என்ன பதில் கூறவேண்டும்? உங்கள் ஆலோசனை என்ன?" என்று கேட்டான்.
10 அதற்கு அவனோடு இன்ப சுகமாக வளர்ந்து வந்திருந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, "உம்மைப் பார்த்து, 'உம் தந்தை என் நுகத்தை அதிகப் பளுவாக்கியுள்ளார்; நீர் அதை இலகுவாக்க வேண்டும்' என்று கேட்கும் மக்களுக்கு நீர் கூறவேண்டிய மறுமொழியாவது: 'என் தந்தையின் இருப்பை விட என் சுண்டு விரலே பெரிது.
11 ஆகையால், என் தந்தை பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார்; நானோ அதை இன்னும் பாரமாக்குவேன். என் தந்தை உங்களைத் மிலாறுகளால் அடித்தார்; நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்' என்று சொல்லுவீராக" என்றனர்.
12 மூன்றாம்நாள் எரொபோவாமும் மக்களும் அரசரின் கட்டளைக்கிணங்க வந்தனர்.
13 ரொபோவாம் அரசன் மூப்பரது ஆலோசனையை அசட்டை செய்து, அவர்களிடம் முரட்டுத்தனமாகப் பேசினான்.
14 இளைஞர்களின் ஆலோசனைப்படி அவர்களை நோக்கி, "என் தந்தை உங்கள் மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நானோ அதை அதிகப் பாரமாக்குவேன். என் தந்தை மிலாறுகளால் உங்களை அடித்தார். நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்" என்றான்.
15 இவ்வாறு அரசன் மக்களின் விண்ணப்பத்திற்குச் செவி கொடுக்கவில்லை. இது கடவுளின் திருவுளப்படியே நடந்தது. அதனால் அவர் சிலோனித்தரான அகியாவின் மூலம் நாபாத்தின் மகன் எரொபோவாமுக்குச் சொல்லியிருந்த தமது வாக்கை நிறைவேற்றினார்.
16 அரசனின் முரட்டுத்தனமான பதிலைக் கேட்ட மக்கள் ரொபோவாமைப் பார்த்து, "தாவீதோடு எங்களுக்குப் பங்கு இல்லை; இசாயியின் மகனிடம் எங்களுக்கு உரிமைச் சொத்தும் இல்லை. இஸ்ராயேலே, உன் கூடாரங்களுக்குப் போ; தாவீதே, நீயே உன் சொந்தவீட்டுக் காரியங்களைப் பார்த்துக் கொள்" என்று சொல்லி, இஸ்ராயேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றனர்.
17 ஆயினும் யூதாவின் நகர்களிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்களின் அரசனாக ரொபோவாமே விளங்கி வந்தான்.
18 பின் அரசன் ரொபோவாம் வரி வசூல் செய்ய அதுராமை அனுப்பி வைத்தான். இஸ்ராயேல் மக்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்று போட்டனர். அதைக் கேள்வியுற்ற ரொபோவாம் விரைவாய்த் தன் தேரின் மேல் ஏறி யெருசலேமுக்கு ஓடிப் போனான்.
19 இவ்வாறு இஸ்ராயேலர் தாவீதின் குலத்தினின்று இன்று வரை பிரிந்தே வாழ்கின்றனர்.
×

Alert

×