Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Samuel Chapters

1 Samuel 9 Verses

1 பெஞ்சமின் கோத்திரத்தில் சீஸ் என்ற பெயருள்ள ஆற்றல் வாய்ந்த ஒரு மனிதன் இருந்தான். இவன் அபயேல் மகன்; இவன் சேரோர் மகன்; இவன் பெக்கோராத் மகன்; இவன் அபியா மகன்; இவன் பெஞ்சமின் கோத்திரத்தானான ஒரு மனிதனின் மகன்.
2 அவனுக்குச் சவுல் என்ற பெயருள்ள மகன் ஒருவன் இருந்தான். இவன் மிகவும் சிறந்தவன், நல்லவன். இஸ்ராயேல் மக்களில் இவனைவிட அழகு வாய்ந்தவன் வேறு ஒருவனும் இல்லை. அவர்கள் அனைவரும் இவருடைய தோள் உயரமே இருந்தனர்; இவன் அவர்களை விட உயர்ந்தவன்.
3 சவுலின் தந்தை சீஸ் என்பவனின் கழுதைகள் காணாமல் போயின. சீஸ் தன் மகன் சவுலை நோக்கி, "வேலைகாரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு போய்க் கழுதைகளைத் தேடு" என்றான்.
4 அவர்கள் இருவரும் எபிராயீம் மலையிலும் சலிசா நாட்டிலும் அவற்றைத் தேடி அங்குக் காணாததால், அவற்றைக் கடந்து சலிம் நாட்டுக்கு வந்தார்கள். அங்கேயும் காணவில்லை. ஜெமினி நாட்டில் கூடத்தேடியும் அகப்படவில்லை.
5 அவர்கள் சூப் என்ற நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னுடன் இருந்த ஊழியனை நோக்கி, "என் தந்தை ஒருவேளை கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு நம் பேரில் ஏக்கமாயிருக்கலாம். எனவே, வா, திரும்பிப் போவோம்" என்றான்.
6 அதற்கு அவன், "இந்த ஊரிலே கடவுளின் மனிதர் ஒருவர் இருக்கிறார்; அவர் பெருமகனார். அவர் சொல்வதெல்லாம் தவறாது நடக்கும். இப்போது அங்குப் போவோம். நாம் எதற்காக வந்தோமோ அந்த வழியை அவர் ஒருவேளை நமக்குக் காட்டுவார்" என்றான்.
7 அப்போது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து, "சரி, வா, போவோம். ஆனால் கடவுளின் மனிதருக்கு என்ன கொண்டு போவது? நம் சாக்குகளில் உரொட்டி இல்லை. கடவுளின் மனிதருக்குக் கொடுக்கப் பணமும் இல்லை" என்று சொன்னான்.
8 திரும்பவும் ஊழியன் சவுலுக்கு மறுமொழியாக, "ஸ்தாதேர் என்ற வெள்ளிக் காசில் கால்பங்கு என்னிடம் இருக்கிறது. நமக்கு வழி காட்டும்படி கடவுளின் மனிதருக்கு அதைக் கொடுப்போம்" என்றான்.
9 முற்காலத்தில் இஸ்ராயேலில் கடவுளிடம் ஆலோசனை கேட்கப்போகிற எவனும், "திருக்காட்சியாளரிடம் போவோம். வாருங்கள்" என்பான்; ஏனெனில், இன்று இறைவாக்கினர் என்று சொல்லப்படுகிறவர் அக்காலத்திலே திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
10 சவுல் வேலைக்காரனை நோக்கி, "நீ சொல்வது தான் நல்லது; வா, போவோம்" என்று சொன்னான். அப்படியே அவர்கள் கடவுளின் மனிதரிருந்த நகருக்குப் போனார்கள்.
11 அவர்கள் நகரின் மேட்டில் ஏறினபோது பெண்கள் தண்ணீர் மொள்ள வரக்கண்டு, "இங்குத் திருக்காட்சியாளர் இருக்கிறாரா?" என்று அவர்களைக் கேட்டனர்.
12 அவர்கள் அதற்கு மறுமொழியாக, "ஆம், இதோ உங்களுக்கு முன் இருக்கிறார்; உடனே விரைந்து போங்கள்; இன்று மக்கள் மேட்டில் பலியிடுவதனால் அவர் இன்று நகருக்கு வந்திருக்கிறார்.
13 நீங்கள் நகரில் நுழைந்தவுடன் அவர் சாப்பிட மேட்டிற்கு ஏறிச் செல்லும் முன் அவரைக் காண்பீர்கள்; அவர் வரும் வரை மக்கள் சாப்பிடாது இருப்பார்கள்; ஏனெனில் அவர் பலியை ஆசீர்வதித்த பின்பே அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள். இப்போது ஏறிச்செல்லுங்கள். அவரை இன்று காணலாம்" என்றனர்.
14 அவர்கள் நகருக்குள் போய் நகரின் நடுவே வந்து சேர்ந்தனர். அப்போது சாமுவேல் மேட்டின் மேல் ஏறுகிறதற்குப் புறப்பட்டு வரக் கண்டனர்.
15 மேலும் சவுல் வர ஒரு நாளைக்கு முன்பே ஆண்டவர் சாமுவேலுக்கு வெளிப்படுத்தி,
16 நாளை இதே நேரத்தில் பெஞ்சமின் நாட்டானாகிய ஒரு மனிதனை உன்னிடம் அனுப்புவோம்; நம் மக்களாகிய இஸ்ராயேலுக்குத் தலைவனாக அவனை அபிஷுகம் செய்வாய். அவன் பிலிஸ்தியர் கையினின்று நம் மக்களை மீட்பான். ஏனெனில், நம் மக்களைக் கண்ணோக்கினோம்; அவர்கள் குரலொலி நமக்கும் எட்டியது" என்று சொல்லியிருந்தார்.
17 சாமுவேல் சவுலைக் கண்ட போது, "இதோ, நாம் உனக்குச் சொன்ன மனிதன்; அவன் தான் நம் மக்களை ஆளுவான்" என்று ஆண்டவர் அவருக்குச் சொன்னார்.
18 சவுல் வாயில் நடுவில் சாமுவேலை அணுகி, "திருக்காட்சியாளருடைய வீடு எது எனத் தயவு செய்து காண்பியும்" என்றான்.
19 சாமுவேல் சவுலுக்கு மறுமொழியாக, "திருக்காட்சியாளர் நானே. என்னுடன் இன்று சாப்பிடும்படி எனக்கு முன் மேட்டிற்கு ஏறிப்போ; நாளை உன்னை அனுப்பி வைப்பேன்; உன் உள்ளத்தில் இருப்பவற்றை எல்லாம் உனக்குச் சொல்வேன்.
20 மூன்று நாளுக்கு முன் இழந்த கழுதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவை கிடைத்து விட்டன. இஸ்ராயேலில் சிறந்தவை யாருக்கு இருக்கும்? உனக்கும் உன் தந்தை வீட்டுக்கும் அல்லவா?" என்றார்.
21 சவுல் மறுமொழியாக, "நானோ இஸ்ராயேலின் மிகச்சிறிய கோத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி மகன். என் சந்ததியும் பெஞ்சமின் கோத்திரத்து வம்சங்களில் எல்லாம் மிகவும் அற்புதமானது. அப்படியிருக்க நீர் இவ்வாறு என்னிடம் பேசுவது ஏன்?" என்றான்.
22 சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் கூட்டிக்கொண்டு அவர்களை உணவறைக்குள் அழைத்துக் போய், அழைக்கப்பட்டவர்களுக்குள் முதலிடத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ஏறக்குறைய முப்பது மனிதர்கள் அங்கு இருந்தனர்.
23 சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து, "நான் உன் கையிலே ஒரு பாகத்தைக் கொடுத்து அதைப் பாதுகாத்து வைக்கச் சொல்லியிருந்தேனே, அதைக் கொண்டு வந்து வை" என்றார்.
24 அதற்குச் சமையற்காரன் ஒரு முன்னந் தொடையை எடுத்துச் சவுல்முன் வைத்தான். அப்பொழுது சாமுவேல், "இதோ, அது உனக்கென்று வைக்கப்பட்டது; அதை உன்முன் வைத்துச் சாப்பிடு. நான் மக்களை அழைத்த போது அது உனக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டது" என்று சொன்னார். அன்று சவுல் சாமுவேலுடன் சாப்பிட்டான்.
25 பிறகு அவர்கள் மேட்டிலிருந்து நகருக்கு இறங்கி வந்தனர். சாமுவேல் மேல் மாடியில் சவுலோடு பேசினார். சவுல் மேல் மாடியில் படுக்கை தயாரித்துத் தூங்கினான்.
26 இருவரும் காலையில் எழுந்திருந்தனர். வெளிச்சமான போது, சாமுவேல் மேல் மாடியிலிருந்த சவுலைக் கூப்பிட்டு, "உன்னை அனுப்பி வைக்க வேண்டும்; எழுந்து வா" என்றார். சவுலும் அப்படியே எழுந்து வந்தான். பிறகு இருவரும் புறப்பட்டு சென்றனர்.
27 அவர்கள் நகர எல்லையை அடைந்த போது சாமுவேல் சவுலைப் பார்த்து, "உன் வேலைக்காரனை நமக்கு முன் நடந்து போகச்சொல். நீ சற்று நில்; நான் ஆண்டவருடைய வார்த்தையை உனக்குத் தெரிவிப்பேன்" என்றார்.
×

Alert

×