Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Samuel Chapters

1 Samuel 2 Verses

1 ஆண்டவரிடத்தில் என் இதயம் அக்களிக்கின்றது. என் ஆண்டவரால் என் ஆற்றல் உயர்வடைந்துள்ளது. என் பகைவர்க்கு எதிராக என் வாய் திறக்கப்பட்டது; ஏனெனில் உமது மீட்பினால் நான் அகமகிழ்ந்தேன்.
2 ஆண்டவரைப்போல தூயவர் இல்லை; உம்மையன்றி வேறு ஒருவரும் இல்லை; நம் கடவுளுக்கு இணையான வல்லமை உள்ளவரும் இல்லை;
3 மாட்சிமைப்படுத்திக் கொண்டு மேன்மையானவற்றைப்பற்றி நீங்கள் அதிகம் பேச வேண்டாம். பழையன உங்கள் செவியினின்று அகலட்டும். ஏனெனில் ஆண்டவர் அனைத்தையும் அறிந்த இறைவன். எண்ணங்கள் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கின்றன.
4 வலியோரின் வில் முறிந்து போனது; வலிமையற்றோர் வலிமையுற்றனர்.
5 முன்பு நிறைவு கொண்டிருந்தவர்கள் உணவிற்காகக் கூலிக்கு அமர்ந்தனர்; பசித்திருந்தவர்களோ பசி தீர்ந்தனர். மலடி பல மக்களைப் பெற்றாள்; பல பிள்ளைகளைப் பெற்றவளோ பலவீனமுற்றாள்.
6 ஆண்டவர் உயிரைப் பறிக்கிறார்; உயிரைக் கொடுக்கிறார். பாதாளங்களுக்குக் கொண்டு போகிறார்; அதினின்று மீண்டும் கொண்டு வருகிறார்.
7 ஆண்டவர் எளியவனாக்குகிறார்; செல்வராக்குகிறார். தாழ்த்துகிறார்; திரும்பவும் உயர்த்துகிறார்.
8 பெருமக்களுடன் அமர்ந்து புகழ் அரியனை ஏற ஏழையைத் தூசியினின்றும், எளியோனைக் குப்பையினின்றும் உயர்த்துகிறார். பூமியின் அடித்தளங்கள் ஆண்டவருக்குச் சொந்தம், அவற்றின் மேல் உலகை நிறுவினார்.
9 அவர் தம் புனிதர்களின் பாதங்களைக் காப்பார். தீயவர் இருளில் மௌனமாய் இருப்பர்; ஏனெனில், மனிதன் தன் வலிமையைக் கொண்டு தன்னைத் திடப்படுத்திக் கொள்ளமாட்டான்.
10 ஆண்டவரின் எதிரிகள் அவருக்கு அஞ்சி நடுங்குவர். அவர் விண்ணிலிருந்து அவர்கள் மேல் இடி இடிக்கச் செய்வார். ஆண்டவர் பூமியின் எல்லைகளைத் தீர்வையிடுவார்; அதன் ஆட்சியைத் தம் அரசனுக்குக் கொடுப்பார். தம் கிறிஸ்துவின் வல்லமையை உயர்த்துவார்."
11 பின்பு, ஏல்கானா ராமாத்தாவில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பிள்ளையோ ஆண்டவர் திருமுன் ஏலி என்ற குருவின் முன்னிலையில் ஊழியம் செய்து வந்தான்.
12 ஆனால் ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரைப் பொருட்படுத்தாது பெலியாலின் புதல்வர்களாய் இருந்தனர்.
13 மக்கள்பால் நமக்கு உள்ள கடமைகளைக் குருக்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் பலியிடும் வேளையில் இறைச்சி வேகும் போது குருவின் ஊழியன் எவனாவது மூன்று பல்லுடைய கொக்கியைக் கைளோடு கொணர்ந்து,
14 கொப்பறையிலாவது அண்டாவிலாவது பானையிலாவது சட்டியிலாவது விடுவான். கொக்கியில் வருவதை எல்லாம் குரு தமக்கு எடுத்துக்கொள்வார். சீலோவிற்கு வருகிற எல்லா இஸ்ராயேலரிடத்தும் அவர்கள் இவ்வாறே செய்வார்கள்.
15 பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன் குருவின் ஊழியன் வந்து பலியிடுபவனை நோக்கி, "குருவுக்குச் சமைக்க எனக்கு இறைச்சி கொடு, வெந்த இறைச்சியை உன்னிடத்தில் வாங்கமாட்டேன். வேகாததையே வாங்குவேன்" என்பான்.
16 பலியிடுபவன் அவனுக்கு மறுமொழியாக, "வழக்கப்படி இன்று கொழுப்பு முதலில் எரிந்து போகட்டும்; பிறகு நீ விரும்பும் அளவுக்கு எடுத்துக்கொள்" என்பான். ஊழியன் அவனுக்குப் பதில் மொழியாக, "அப்படியன்று, இப்போதே கொடுத்து விடு; இல்லாவிட்டால் நான் வலுக்கட்டாயமாய் எடுப்பேன்" என்பான்.
17 இவ்வாறு ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரின் பலியினின்று மக்களின் மனத்தைக் திருப்பினர். எனவே அவர்களுடைய குற்றம் ஆண்டவருக்கு முன் மிகப் பெரியதாயிருந்தது.
18 சிறுவன் சாமுவேல் மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட எபோதை உடுத்திக்கொண்டு ஆண்டவர் திரு முன் பணிவிடை செய்வான்.
19 அவன் தாய் அவனுக்கு ஒரு சிறு அங்கி தைத்து, வழக்கமான பலியைச் செலுத்தும்படி தன் கணவனுடன் தான் போகையில், குறித்த நாட்களில் அதைக் கொண்டு வந்து கொடுப்பாள்.
20 மேலும் ஏலி, ஏல்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து, அவனை நோக்கி, "நீ ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த இப்பிள்ளைக்காக ஆண்டவர் இப்பெண் மூலம் உனக்கு ஒரு வாரிசைக் கொடுப்பாராக!" என்றார். அவர்களும் தமது இல்லம் ஏகினர்.
21 ஆகையால் ஆண்டவர் அன்னாவைச் சந்தித்தார். அவள் கருவுற்று மூன்று புதல்வரையும் இரண்டு புதல்விகளையும் பெற்றாள். சிறுவன் சாமுவேல் ஆண்டவர் திருமுன் புகழ்பெற்றான்.
22 ஆனால் ஏலி முதிர் வயதினரான போது, தம் புதல்வர்கள் இஸ்ராயேலர் அனைவருக்கும் செய்து வந்த அனைத்தையும், கூடார வாயிலைக் காத்துவந்த பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததையும் கேள்விப்பட்டு, அவர்களை நோக்கி,
23 "எல்லா மக்களிடமிருந்தும் நான் கேள்விப்படும் இப்படிப்பட்ட இழி செயலை ஏன் செய்கிறீர்கள்?"
24 என் புதல்வரே, அப்படிச் செய்யவேண்டாம்; ஆண்டவரின் மக்கள் அவர் கட்டளையை மீறி நடக்கும்படி நீங்கள் செய்வதாக நான் கேள்விப்படுவது நல்லதன்று.
25 ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீமை செய்தால் கடவுள் அவனை மன்னிக்க முடியும்; ஆனால் மனிதன் ஆண்டவருக்கு எதிராகவே தீமை செய்தால் அவனுக்காக மன்றாடுவது யார்? என்றார். அவர்களோ தம் தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை. அதற்காக ஆண்டவர் அவர்களைக் கொல்லத் திருவுளம் கொண்டார்.
26 சிறுவன் சாமுவேலோ வளர்ந்து முன்னேறி ஆண்டவருக்கும் மனிதருக்கும் பிரியமானவனாய் இருந்து வந்தான்.
27 அப்போது கடவுளின் மனிதர் ஒருவர் ஏலியிடம் வந்து அவரை நோக்கி, "ஆண்டவர் சொல்லுவதாவது: 'எகிப்து நாட்டில் பரவோன் வீட்டில் இருந்த போது நாம் உன் தந்தை வீட்டாருக்கு நம்மை வெளிப்படுத்தவில்லையா?
28 அவர்கள் நமது பலிபீடத்தில் ஏறவும், நமக்குத் தூபம் காட்டவும், நம் முன்னிலையில் எபோதை அணியவும், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களுக்குள்ளும் அவர்களைக் குருவாக நாம் தேர்ந்து கொண்டோம். உன் தந்தை வீட்டாருக்கு இஸ்ராயேல் மக்களின் எல்லாப் பலிகளிலும் பங்கு கொடுத்தோம்.
29 ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கும்படி நாம் கட்டளையிட்டிருந்த எம் பலியையும் காணிக்கைகளையும் நீங்கள் காலால் உதைத்துத் தள்ளியது ஏன்? நம் மக்களாகிய இஸ்ராயேலின் எல்லாப் பலிகளிலும் முந்தினவற்றை நீங்கள் உண்ணும்படி, நம்மை விட உன் பிள்ளைகளை அதிகமாய் மதித்தாயோ?'
30 ஆகையால் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'உன் வீடும் உன் தந்தை வீடும் என்றென்றும் நமது திருமுன் ஊழியம் செய்யும்படி உறுதியாகக் கூறியிருந்தோம்; இப்போதோ அவ்வாக்கு நம்மை விட்டு அகலக்கடவது. ஆனால் நம்மை மாட்சிப் படுத்துபவனை நாமும் மாட்சிப் படுத்துவோம். நம்மை பழிப்பவர் பழிக்கு ஆளாவர்.
31 இதோ, நாட்கள் வரும்; உன் வீட்டில் வயது முதிர்ந்தோர் இல்லாதபடி உன் புயத்தையும் உன் தந்தை வீட்டின் புயத்தையும் வெட்டுவோம்;
32 இஸ்ராயேலர் மேன்மையுற்றிருக்கையில் ஆலயத்தில் உன் பகைவரை நீ பார்ப்பாய்; என்றென்றும் உன் வீட்டில் முதியவர் இரார்.
33 ஆயினும் உன் கோத்திரத்தில் எல்லாரையும் நம் பீடத்தின்று நீக்கமாட்டோம். ஆனால் உன் கண்களைக் குருடாயும் உன் ஆன்மாவைச் சோர்வுள்ளதாயும் ஆக்குவோம். உன் வீட்டின் பெரும்பாலோர் ஆளாகும் போதே இறந்துபடுவர்;
34 ஒப்னி, பினேசு என்ற உன் இரு புதல்வர்களுக்கும் நடக்க விருப்பதே அதற்கு அடையாளமாகும்: இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
35 பிறகு நம்மனதுக்கேற்றபடி நடக்கும் பிரமாணிக்கம் உள்ள குரு ஒருவனை நம் விருப்பப்படி ஏற்படுத்துவோம். அவனுக்கு நிலைத்து நிற்கும் வீடு ஒன்றைக் கட்டி எழுப்புவோம். அவன் நம் கிறிஸ்துவுக்கு முன் எந்நாளும் நடப்பான்.
36 அப்போது நடக்கவிருப்பதாவது: உன் வீட்டில் எஞ்சியிருப்பவன் எவனும் வந்து தனக்காக வேண்டிக்கொள்ளும்படி சொல்வான்; ஒரு வெள்ளிக்காசும் ஒரு ரொட்டியும் ஒப்புக்கொடுப்பான்; அப்போது அவன், "நான் ஒருவாய் ரொட்டி சாப்பிடும்படி நீங்கள் தயவு செய்து குருவுக்குரிய ஒரு பாகத்தை எனக்குக் கொடுங்கள்" என்று கெஞ்சி மன்றாடுவான்'" என்றார்.
×

Alert

×