Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Samuel Chapters

1 Samuel 17 Verses

1 பிலிஸ்தியர் மறுபடியும் போருக்குப் படைகளைத் திரட்டிக் கொண்டு யூதாவினுடைய சொக்கோவுக்கு வந்து, சொக்கோவுக்கும் அசேக்காவுக்கும் நடுவில் தொம்மீம் எல்லைகளில் பாசறை அமைத்தனர்.
2 சவுலும் இஸ்ராயேல் மக்களும் ஒன்று கூடித் தேரேபேந்து பள்ளத்தாக்கிற்கு வந்து பிலிஸ்தியருக்கு எதிராக போரிடுவதற்கு அணிவகுத்து நின்றனர்.
3 பிலிஸ்தியர் மலையின் அப்பக்கத்திலும், இஸ்ராயேலர் மலையின் இப்பக்கத்திலும் இருந்தனர். அவர்களுக்கு இடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
4 அப்போது கெத் நாட்டானாகிய கோலியாத் என்ற பெயருடைய ஓர் இழிகுல மனிதன் பிலிஸ்தியர் பாசறையினின்று வெளியே வந்தான். அவன் உயரம் ஆறு முழம் ஒரு சாண்.
5 தலையில் வெண்கலத் தொப்பியும், மீன் செதிலைப் போன்ற ஒரு போர்க்கவசமும் அணிந்திருந்தான். அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சீக்கல் வெண்கலமாம்.
6 அவன் கால்களில் வெண்கலக் கவசத்தையும், தோள்களின் மேல் ஒரு வெண்கலக் கேடயத்தையும் அணிந்திருந்தான்.
7 அவனுடைய ஈட்டிக் கம்பு நெசவுக்காரனின் தறிமரம் போல் இருந்தது. அவன் ஈட்டியின் முனை அறுநூறு சீக்கல் இரும்பாலானது. அவனுடைய பரிசையன் அவனுக்கு முன் நடப்பான்.
8 அவன் இஸ்ராயேல் படைகளுக்கு எதிரே நின்று கூக்குரலிட்டு, "ஏன் போருக்குத் தயாராய் வந்தீர்கள்? நான் பிலிஸ்தியன் அன்றோ? நீங்கள் சவுலின் ஊழியர்கள் அல்லவா? உங்களுக்குள் ஒருவனைத் தேர்ந்து கொள்ளுங்கள். அவன் என்னுடன் தனியே சண்டை செய்ய வரட்டும்.
9 அவன் என்னுடன் சண்டை போட்டு என்னைக் கொன்றால், நாங்கள் உங்கள் அடிமைகளாய் இருப்போம்; நான் அவனைக் கொன்று போட்டாலோ, நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்" என்பான்.
10 மேலும் அந்தப் பிலிஸ்தியன், "நான் இன்று இஸ்ராயேலின் சேனைகளை இழிவு படுத்தியிருக்கிறேன். எனவே, ஒரு வீரனை என்னிடம் அனுப்புங்கள். அவன் என்னுடன் தனித்துப் போரிடட்டும்" என்று சொல்வான்.
11 பிலிஸ்தியனுடைய இத்தகு சொற்களைச் சவுலும் இஸ்ராயேலர் அனைவரும் கேட்டுக் கலங்கி, அதிக அச்சம் கொண்டிருந்தனர்.
12 முன் சொல்லப்பட்ட தாவீது யூதா நாட்டுப் பெத்லகேம் ஊரானும், இசாயி என்ற பெயருடைய எபிராத்திய மனிதனின் மகனும் ஆவான். இசாயிக்கு எட்டுப் புதல்வர்கள் இருந்தனர். இவன் சவுலின் காலத்தில் மற்ற மனிதர்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாய் இருந்தான்.
13 இவனுடைய மூத்த புதல்வர்கள் மூவரும் சவுலோடு கூடப் போருக்குச் சென்றிருந்தனர். போருக்குப் போயிருந்த இவனுடைய மூன்று புதல்வர்களுள் மூத்தவன் பெயர் எலியாப்; இரண்டாமவன் அபினதாப்; மூன்றாமவன் சம்மா.
14 தாவீது எல்லாருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவரும் சவுலைப் பின் சென்றிருந்தனர்.
15 எனவே தாவீது சவுலை விட்டுத் திரும்பிப் போய்ப் பெத்லகேமில் தன் தந்தையின் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான்.
16 அந்தப் பிலிஸ்தியனோ, காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்களாக இவ்வாறு செய்து வந்தான்.
17 இசாயி தன் மகன் தாவீதை நோக்கி, "உன் சகோதரர்களுக்காக இந்த ஒரு மரக்கால் வறுத்த மாவையும், இப் பத்து அப்பங்களையும் எடுத்துக் கொண்டு பாசறையில் இருக்கிற உன் சகோதரர்களிடம் விரைந்து செல்.
18 இப் பத்துப் பாலாடைக் கட்டிகளையும் படைத் தலைவருக்குக் கொண்டு போய்க் கொடுத்து, உன் சகோதரர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்று பார்த்து, அவர்கள் எவரெவருடன் அணி வகுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்" என்று சொல்லி, அவனை அனுப்பி வைத்தான்.
19 அப்போது சவுலும் இவர்களும் இஸ்ராயேலின் எல்லா மக்களும் தெரேபிந்துப் பள்ளத்தாக்கில் பிலிஸ்தியரோடு போரிட்டுக் கொண்டிருந்தனர்.
20 ஆகையால் தாவீது அதிகாலையில் எழுந்து, மந்தையைக் காவலனிடம் ஒப்படைத்து விட்டு, இசாயி தனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மகலாவில் இருந்த சேனையை நோக்கிச் சென்றான். படைவீரர் போருக்குச் சென்று போர்க் குரல் எழுப்பினர்.
21 இப்பக்கத்தில் இஸ்ராயேலர் அணிவகுத்து நிற்க, அப்பக்கத்தில் பிலிஸ்தியர் போருக்குத் தயார் பண்ணிக் கொண்டிருந்தனர்.
22 தாவீது தான் கொண்டு வந்த மூட்டையை இறக்கி அவற்றைக் காவலன் ஒருவனிடம் ஒப்புவித்தான். பின் போர் களத்திற்கு ஓடித் தன் சகோதரர்களின் உடல் நலம் பற்றி விசாரித்தான்.
23 அவன் அவர்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், பிலிஸ்தியர் பாசறையினின்று கோலியாத் என்ற பெயருடைய பிலிஸ்தியனும், கெத் நாட்டானும் இழிகுலத்தவனுமான அம்மனிதன் வந்து நின்றான். அவன் முன் சொன்ன வார்த்தைகளையே சொல்ல தாவீது அதைக் கேட்டான்.
24 அம்மனிதனைக் கண்டபோது இஸ்ராயேலர் அனைவரும் மிகவும் அஞ்சி, அவன் முகத்தில் விழிக்காது ஓடிப்போனார்கள்.
25 இஸ்ராயேலரில் ஒருவன், "இப்போது வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா? இவன் இஸ்ராயேலை இழிவுபடுத்த வந்துள்ளான். இவனைக் கொல்பவன் எவனோ, அவனை அரசர் செல்வந்தனாக்கித் தம் மகளையும் அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்து, அவன் தந்தை வீட்டாரையும் இஸ்ராயேலில் வரி இல்லாதபடி ஆக்குவார்" என்றான்.
26 அதைக் கேட்ட தாவீது தன்னுடன் இருந்த மனிதர்களை நோக்கி, "இப் பிலிஸ்தியனைக் கொன்று, இஸ்ராயேலுக்கு ஏற்பட்டுள்ள இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? உயிருள்ள கடவுளின் சேனைகளைப் பழிக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இப் பிலிஸ்தியன் யார்?" என்றான்.
27 அதற்கு மக்கள், "அவனைக் கொல்கிறவனுக்கு இவை அனைத்தும் கொடுக்கப்படும்" என்று முன்சொன்ன வார்த்தைகளையே அவனுக்கு மறுபடியும் சொன்னார்கள்.
28 தாவீதின் மூத்த சகோதரனாகிய எலியாப் தாவீது மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறதைக் கேட்டு அவன் மேல் கோபமுற்று, "ஏன் இங்கு வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைவனத்தில் விட்டு விட்டு ஏன் இங்கு வந்தாய்? உன் செருக்கையும் தீய எண்ணத்தையும் நான் அறிவேன். ஏனெனில் போரைப் பார்ப்பதற்காக வந்துள்ளாய்" என்று சொன்னான்.
29 அதற்கு தாவீது, "நான் என்ன செய்து விட்டேன்? நான் பேசக்கூடாதா?" என்றான்.
30 பின் அவனைவிட்டுச் சற்று விலகி வேறொருவனிடத்தில் அதேபோல் கேட்டான். மக்கள் முன்சொன்ன வார்த்தைகளையே அவனுக்கு மறுமொழியாகச் சொன்னார்கள்.
31 தாவீது கூறியவற்றைக் கேட்டவர்கள் அவற்றைச் சவுலுக்கு அறிவித்தனர்.
32 அவரருகில் அவன் அழைக்கப்பட்டபோது தாவீது சவுலை நோக்கி, "கோலியாத்தின் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை. உம் அடியானாகிய நானே போய் அப்பிலிஸ்தியனோடு சண்டையிடுவேன்" என்றான்.
33 அதற்குச் சவுல், "அப் பிலிஸ்தியனை எதிர்க்கவும், அவனுடன் சண்டையிடவும் உன்னால் முடியாது. நீயோ சிறுவன்; அவனோ இளமை முதல் போரில் பயிற்சி உள்ளவன்" என்றார்.
34 தாவீது சவுலை நோக்கி, "உம் அடியான் தன் தந்தையின் மந்தையை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமாவது கரடியாவது வரும். மந்தை நடுவிலிருந்து கடாவைத் தூக்கிக் கொண்டு போகும்.
35 நான் அவற்றைப் பின்தொடர்ந்து அடித்து அவற்றின் வாயினின்று பிடுங்குவேன். அவை என் மேல் பாயும். நானோ அவற்றின் மூஞ்சியைப் பிடித்து, மூச்சு விடாத படி அமுக்கி அவற்றைக் கொல்வேன்.
36 உம் அடியானாகிய நான் ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும் இவ்வாறு கொன்றிருக்கிறேன்; அவற்றில் ஒன்றைப் போலவே விருத்தசேதனம் செய்யப்படாத இப்பிலிஸ்தியனும் இருப்பான். இப்பொழுதே நான் போய் மக்களுக்கு வந்துள்ள இழிவை நீக்குவேன். ஏனெனில் உயிருள்ள கடவுளின் சேனையைப் பழிக்க விருத்தசேதனமற்ற இப்பிலிஸ்தியன் யார்?" என்றான்.
37 மறுபடியும் தாவீது, "என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர், இப்பிலிஸ்தியன் கையினின்றும் என்னை மீட்பார்" என்றான். "சென்றுவா; ஆண்டவர் உன்னோடு இருப்பார்!" என்று சவுல் தாவீதுக்குச் சொன்னார்.
38 சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவன் தலை மேல் வைத்து, ஒரு மார்க்கவசத்தையும் அவனுக்கு அணிவித்தார்.
39 தாவீது அவரது வாளைத் தன் ஆடையின்மேல் கட்டிக்கொண்டு, இப்படி ஆயுதம் அணிந்து நடக்க முடியுமா என்று சோதித்துப் பார்த்தான்; ஏனெனில் அவனுக்குப் பழக்கம் இல்லை. தாவீது சவுலை நோக்கி, "எனக்குப் பழக்கம் இல்லாததால் இவ்விதம் நடக்க என்னால் முடியாது" என்று சொல்லி, அவற்றைக் களைந்து போட்டான்.
40 எப்பொழுதும் கையில் வைத்திருக்கும் தன் தடியைப் பிடித்துக்கொண்டு ஓடையில் ஐந்து கூழாங்கற்களைப் பொறுக்கி எடுத்துத் தன் மேலிருந்த இடையனுக்குரிய சட்டைப் பையில் போட்டுக் கவணையும் கையில் எடுத்துக் கொண்டு பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டான்.
41 பிலிஸ்தியனும் நடந்து தாவீதின் அருகில் வந்தான்; அவனுடைய பரிசையனும் அவன் முன் நின்றான்.
42 பிலிஸ்தியன் சுற்றிப்பார்த்துத் தாவீதைக் கண்டு, அவன் இளைஞனாயும் செந்நிறமாயும் பார்க்க அழகாயும் இருந்ததைப் பற்றி அவனை ஏளனம் செய்தான்.
43 பிலிஸ்தியன் அவனை நோக்கி, "நீ என்னிடம் ஒரு கோலுடன் வர நான் என்ன ஒரு நாயா?" என்று சொல்லி, தன் தேவர்களின் மேல் ஆணையிட்டுத் தாவீதைச் சபித்தான்.
44 மேலும் அவன் தாவீதை நோக்கி, "என் அருகில் வா; நான் வானத்துப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் உன் தசைகளைக் கொடுப்பேன்" என்றான்.
45 அதற்குத் தாவீது பிலிஸ்தியனைப் பார்த்து, "நீ வாளோடும் ஈட்டியோடும் கேடயத்தோடும் என்னிடம் வருகிறாய்; நானோ சேனைகளின் ஆண்டவருடைய பெயராலே, நீ அவமதித்த இஸ்ராயேலுடைய படைகளின் கடவுளுடைய பெயராலே உன்னிடத்தில் வருகிறேன்.
46 இன்று ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னைக் கொன்று உன் தலையைத் துண்டிப்பேன். இஸ்ராயேலரில் கடவுள் இருக்கிறதை உலகெல்லாம் அறிந்து கொள்ளும்படி, இன்று பிலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் கொடுப்பேன்.
47 அதனால் ஆண்டவர் மீட்பது வாளாலும் அன்று, ஈட்டியாலும் அன்று என்று இந்த மக்கட் கூட்டம் எல்லாம் தெரிந்து கொள்ளும்; ஏனெனில் போர் அவருடையது. அவர் உங்களை எங்கள் கைகளில் ஒப்படைப்பார்" என்று சொன்னான்.
48 பிலிஸ்தியன் எழுந்து தாவீதுக்கு எதிரே நெருங்கி வருகையில் தாவீது விரைந்து பிலிஸ்தியனுக்கு எதிராகச் சண்டையிட ஓடினான்.
49 தன் பையில் கையைவிட்டு ஒரு கல்லை எடுத்துக் கவணில் போட்டு அதைச் சுழற்றிப் பிலிஸ்தியன் நெற்றியில் எறிந்தான். கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையில் முகங்குப்புற விழுந்தான்.
50 இப்படித் தாவீது ஒரு கவணாலும் கல்லாலும் பிலிஸ்தியனை வென்று, அடிபட்ட பிலிஸ்தியனைக் கொன்றான். தாவீதின் கையில் வாள் இல்லாததால்,
51 அவன் ஓடிப் பிலிஸ்தியன் மேல் ஏறி நின்று, அவன் வாளைப் பிடித்து அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையைக் கொய்தான். அப்போது பிலிஸ்தியர் தங்களுக்குள் அதிக ஆற்றல் படைத்தவன் மாண்டதைக் கண்டு புறமுதுகு காட்டி ஓடினர்.
52 எனவே இஸ்ராயேலரும் யூதா மனிதர்களும் எழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டு பள்ளத்தாக்கின் எல்லை வரைக்கும் அக்காரோன் நகர் வாயில் வரைக்கும் பிலிஸ்தியரைத் துரத்தினார்கள். பிலிஸ்தியரில் காயம் அடைந்தவர்கள் சாராயிம் வழியிலும் கேத், அக்காரோன் வரைக்கும் விழுந்து கிடந்தனர்.
53 இஸ்ராயேல் மக்கள் பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்த பின், திரும்பி வந்து, அவர்களின் பாசறையைக் கொள்ளையடித்தார்கள்.
54 தாவீது பிலிஸ்தியனுடைய தலையை எடுத்து யெருசலேமுக்குக் கொண்டு வந்தான். அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்தில் வைத்தான்.
55 தாவீது பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போனதைக் கண்ட போது சவுல் தன் படைத்தலைவனாகிய அப்நேரை நோக்கி, "அப்நேர், இவ்விளைஞன் எக்குடும்பத்தில் பிறந்தவன்?" என்று கேட்டார். அப்நேர், "அரசே, உம் உயிர் மேல் ஆணை, அதை நான் அறியேன்" என்றான்.
56 அரசர், "இவ்விளைஞன் யாருடைய மகன் என்று கேள்" என்று சொன்னார்.
57 பிலிஸ்தியனைக் கொன்று தாவீது திரும்பி வந்தபோது அப்நேர் அவனைச் சவுல்முன் அழைத்துச் சென்றான். பிலிஸ்தியனுடைய தலை அவன் கையில் இருந்தது.
58 சவுல் அவனை நோக்கி, "இளைஞனே, நீ யாருடைய மகன்?" என்று கேட்டார். அதற்கு தாவீது, "நான் பெத்லகேம் ஊரானாகிய உம் அடியான் இசாயினுடைய மகன்" என்றான்.
×

Alert

×