Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Samuel Chapters

1 Samuel 14 Verses

1 ஒரு நாள் சவுலின் மகன் யோனத்தாசு தன் பரிசையனான இளைஞனை நோக்கி, "அப்பால் இருக்கிற பிலிஸ்தியர் பாளையத்திற்குப் போவோம், வா" என்றான். அதை அவன் தன் தந்தைக்குத் தெரிவிக்கவில்லை.
2 அந்நேரத்தில் சவுல் காபாவின் கடைசி எல்லையாகிய மக்ரோனிலிருந்த ஒரு மாதுள மரத்தின் கீழ்த் தங்கியிருந்தார். அவருடன் இருந்த ஆட்கள் ஏறக்குறைய அறுநூறு பேர்.
3 சீலோவில் ஆண்டவருடைய குருவாயிருந்த ஏலிக்குப் பிறந்த பினேஸின் மகனாகிய இக்காபோதின் சகோதரனான அக்கிதோபின் மகன் ஆக்கியோஸ் ஏபோதை அணிந்திருந்தான். ஆனால் யோனத்தாசு எங்குச் சென்றிருந்தான் என்று மக்கள் அறியாதிருந்தனர்.
4 யோனத்தாசு பிலிஸ்தியர் பாளையம் வரை ஏற முயன்ற கணவாயின் இருமருங்கும் செங்குத்தான பாறைகளும் பற்களைப் போன்ற சிகரங்களும் அங்குமிங்கும் இருந்தன; அவற்றில் ஒன்றுக்குப் போசெஸ் என்றும், மற்றொன்றுக்குச் சேனே என்றும் பெயர்;
5 ஒன்று வடக்கே மக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே காபாவுக்கு எதிராகவும் இருந்தன.
6 யோனத்தாசு தன் பரிசையனான இளைஞனைப் பார்த்து, "விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய பாளையத்துக்குப் போவோம், வா. ஒருவேளை ஆண்டவர் நமக்குத் துணைபுரிவார். ஏனெனில் பலரைக் கொண்டோ சிலரைக் கொண்டோ மீட்பது ஆண்டவருக்குக் கடினம் அன்று" என்றான்.
7 அவனுடைய பரிசையன், "உமக்குப் பிடித்தவற்றை எல்லாம் செய்யும்; உமது விருப்பப்படியே போகலாம்; எங்குச் சென்றாலும் நானும் உம்மோடு வருவேன்" என்று அவனுக்குச் சொன்னான்.
8 அதற்கு யோனத்தாசு, "இதோ நாம் அம்மனிதர்களிடம் போகிறோம். நாம் அவர்கள் கண்ணில் படும்போது,
9 'நாங்கள் உங்களிடம் வரும்வரை நீங்கள் நில்லுங்கள்' என்று அவர்கள் நமக்குக் கூறினால், நம் இடத்தை விட்டு அவர்களிடம் போக வேண்டாம்.
10 அவர்கள் 'எங்களிடம் வாருங்கள்' என்று சொன்னால் போவோம். ஏனெனில் ஆண்டவர் அவர்களை நம் கைகளில் ஒப்படைத்தார் என்பதற்கு அதுவே அடையாளம்" என்றான்.
11 அப்படியே இருவரும் பிலிஸ்தியர் பாளையத்தை அடுத்து வந்தபோது, பிலிஸ்தியர், "இதோ எபிரேயர் ஒளிந்திருந்த குழிகளை விட்டுப் புறப்படுகிறார்கள்" என்று சொன்னார்கள்.
12 பின், பாளையத்தினின்று யோனத்தாசோடும் அவனுடைய பரிசையனோடும் பேசி, "எங்களிடத்திற்கு ஏறி வாருங்கள்; உங்களுக்கு ஒரு காரியம் சொல்வோம்" என்று சொன்னார்கள். அப்போது யோனத்தாசு, "போவோம், என்னைப் பின்தொடர்; ஆண்டவர் இஸ்ராயேல் கையில் அவர்களை ஒப்புவித்து விட்டார்" என்று பரிசையனுக்குச் சொல்லி,
13 யோனத்தாசு கைகளாலும் கால்களாலும் நகர்ந்து ஏறினார்; அவனுடைய பரிசையனும் அவனுக்குப்பின் ஏறினான். அப்பொழுது சிலர் யோனத்தாசு முன் மடிந்து விழுந்தார்கள். அவன் பின் வந்த அவனுடைய பரிசையனும் பலரை வெட்டிக்கொன்றான்.
14 யோனத்தாசும் அவனுடைய பரிசையனும் அடித்த இந்த முதல் அடியிலேயே ஏறக்குறைய இருபதுபேர் அரை ஏர் நிலப்பரப்பில் மடிந்து விழுந்தனர்.
15 பாளையத்திலும் நாட்டிலும் ஒரே பீதி உண்டாயிற்று. கொள்ளையிடப் போயிருந்த கூட்டத்தினர் எல்லாம் திடுக்கெனத் திகில் அடைந்தனர்; நிலமும் அதிர்ந்தது. இது கடவுள் ஆற்றிய அருஞ்செயல் போல் நிகழ்ந்தது.
16 இதோ, மக்களுள் பலர் விழுந்து கிடக்கிறதையும், அங்குமிங்கும் ஓடுகிறதையும் பெஞ்சமினுடைய காபாவிலிருந்த சவுலின் காவலர் கண்டனர்.
17 சவுல் தம்மோடு இருந்தவர்களை நோக்கி, "நம்மை விட்டுப் போனவன் யார்? விசாரித்துப் பாருங்கள்" என்று சொன்னார். விவரம் ஆராய்கையில் யோனத்தாசும் அவனுடைய பரிசையனும் அங்கு இல்லை எனத் தெரிய வந்தது.
18 அப்போது சவுல் அக்கியசைப் பார்த்து, "கடவுளின் பேழையைக் கேட்டுப்பாரும்" என்றார். (ஏனெனில் அப்பொழுது கடவுளின் பேழை இஸ்ராயேல் மக்களிடம் இருந்தது).
19 சவுல் குருவிடம் பேசிக் கொண்டிருக்கையில், பிலிஸ்தியர் பாளையத்தில் பெரும் முழக்கம் எழும்பிற்று. அது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து வெகு தெளிவாய்க் கேட்டது. அப்போது சவுல், "உம் கையை மடக்கும்" என்று குருவுக்குச் சொன்னார்.
20 சவுலும் அவரோடு இருந்த எல்லா மக்களும் ஆர்ப்பரித்துப் போர்க்களம் வரை போனார்கள். இதோ! அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டனர். அதனால் பலர் மடிந்தனர்.
21 இதைக் கண்டு நேற்றும் முந்தாநாளும் பிலிஸ்தியரோடு பாளையத்தில் தங்கியிருந்த எபிரேயர்கள் சவுல், யோனத்தாசோடு இருந்த இஸ்ராயேலருடன் சேர்ந்து கொள்ளத் திரும்பி வந்தார்கள்.
22 எபிராயீம் மலையில் பதுங்கியிருந்த இஸ்ராயேலர் அனைவரும் பிலிஸ்தியர் புறமுதுகு காட்டினர் என்று கேள்விப்பட்டுப் போரில் இவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அப்பொழுது ஏறக்குறைய பதினாயிரம் பேர் சவுலோடு இருந்தனர்.
23 அன்று ஆண்டவர் இஸ்ராயேலை மீட்டார். போர் பெத்தாவன்வரை நடந்தது.
24 இஸ்ராயேல் மனிதர்கள் அன்று ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். அப்பொழுது சவுல் மக்களைப் பார்த்து, "நான் என் எதிரிகளின்மீது பழி வாங்கப் போகிறேன். மாலை மட்டும் எவன் சாப்பிடுவானோ அவன் சபிக்கப்பட்டவன்" என்று ஆணையிட்டுச் சொன்னார். அன்று மக்களில் ஒருவரும் சாப்பிடவில்லை.
25 அவர்கள் எல்லாரும் காடு சென்றனர். அங்குத் தரை மேல் தேன் இருந்தது.
26 இவ்வாறு மக்கள் ஒரு காட்டினுள் நுழைந்தனர். அங்குத் தேன் வடியக் கண்டனர். ஆனால் எவனும் தன் கையை வாயில் வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் ஆணைக்கு அஞ்சியிருந்தனர்.
27 ஆனால் யோனத்தாசு தன் தந்தை மக்களுக்கு இட்டிருந்த ஆணையை அறியாதிருந்தான். அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டித் தேன் கூட்டில் குத்தி, தன் கையை வளைத்து அதை வாயில் வைத்தான். அவன் கண்கள் தெளிவுற்றன.
28 அப்பொழுது மக்களில் ஒருவன், "இன்று சாப்பிடும் மனிதன் சபிக்கப்பட்டவன் என்று உன் தந்தை பசியாயிருந்த மக்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்" என்றான்.
29 அதற்கு யோனத்தாசு, "என் தந்தை அதனால் மக்களுக்குத் தொல்லை கொடுத்தார். அந்தத் தேனில் கொஞ்சம் நான் சாப்பிட்டதினால் என் கண்கள் தெளிவானதை நீங்களே கண்டீர்கள்.
30 மக்களுக்கு அகப்பட்ட எதிரிகளின் கொள்ளைப் பொருட்களில் அவர்கள் ஏதாவது சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்! பிலிஸ்தியருக்குள் உண்டான படுகொலை இன்னும் கொடூரமாய் இருந்திருக்கும் அன்றோ?" என்று மறுமொழி சொன்னான்.
31 அன்று அவர்கள் மக்மாசுமுதல் அயியாலோன்வரை பிலிஸ்தியரை முறியடித்தனர்.
32 மக்கள் மிகவும் களைப்புற்றியிருந்தனர். அவர்கள் கொள்ளைப் பொருட்களின் மேல் பாய்ந்து ஆடு மாடுகளையும் கன்றுகளையும் கொணர்ந்து தரையில் போட்டு அடித்து இரத்தத்துடன் சாப்பிட்டனர்.
33 அப்பொழுது, "இதோ இரத்தத்துடன் சாப்பிட்டதனால் மக்கள் ஆண்டவருக்கு எதிராய் பாவம் செய்தார்கள்" என்று சவுலுக்குத் தெரியவந்தது. அதற்கு அவர், "நீங்கள் கடவுளின் கட்டளையை மீறினீர்கள்; இப்பொழுதே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள்" என்றார்.
34 மறுமுறையும் சவுல் சிலரை அனுப்பி, "நீங்கள் சாதாரண மக்களுக்குள் போய், 'இரத்தத்தோடு இறைச்சியை உண்பது ஆண்டவருக்கு ஏற்காத பாவம். எனவே, மக்களில் ஒவ்வொருவனும் தன் மாட்டையாவது ஆட்டுக்கடாயையாவது சவுலிடம் கொணர்ந்து அங்கே அடித்துப் பின்பு சாப்பிடலாம்' என்று சொல்லுங்கள்" என்றார். ஆகையால் மக்கள் எல்லாரும் தத்தம் மாட்டை அன்று இரவு தாங்களே கொண்டு வந்து அங்கே அடித்தனர்.
35 அதன் பிறகு சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டினார். அது அவர் ஆண்டவருக்குச் கட்டின முதலாவது பலிபீடம்.
36 மீண்டும் சவுல், "நாம் இரவில் பிலிஸ்தியர் மேல் பாய்ந்து விடியும் வரை அவர்களைக் கொன்று குவிப்போம். அவர்களில் ஒருவனையும் விட்டு வைக்கக் கூடாது" என்று சொன்னார். அதற்கு மக்கள், "உமக்கு நலம் என்று தோன்றுவதை எல்லாம் செய்யும்" என்றனர். குருவோ, "நாம் இங்குக் கடவுளை அண்டி போக வேண்டும்" என்று சொன்னார்.
37 பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ராயேல் கையில் விடுவீரா?" என்று சவுல் ஆண்டவரிடம் கேட்டார். அவர் அன்று அவருக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.
38 இதைக் கண்ட சவுல், "இன்று யாரால் இப்பாவம் வந்தது என்று மக்கட் தலைவர்கள் அனைவரிடமும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
39 இஸ்ராயேலின் மீட்பராம் ஆண்டவர் வாழி! என் மகன் யோனத்தாசால் இது நடந்திருந்தால் தடை ஏதுமின்றி அவன் சாகக்கடவான்" என்று சொன்னார். மக்களில் ஒருவனும் அவனுக்கு எதிராகப் பேசவில்லை.
40 சவுல் இஸ்ராயேலர் அனைவரையும் பார்த்து, "நீங்கள் ஒரு பக்கத்தில் இருங்கள், நானும் என் மகன் யோனத்தாசும் மறுபக்கத்தில் இருப்போம்" என்றார். அதற்கு மக்கள், "உமக்கு நன்மை எனத் தோன்றுவதைச் செய்யும்" என்று சவுலுக்கு மறுமொழி சொன்னார்கள்.
41 சவுல், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, இன்று உம் அடியானுக்கு நீர் மறுமொழி சொல்லாதிருப்பது ஏன்? அடையாளம் கொடும். இந்தப் பாவம் என்மேலாவது என் மகன் யோனத்தாசு மேலாவது இருந்தால் அதை விளங்கச் செய்யும்; அல்லது அந்தப் பாவம் உம் மக்கள்மேல் இருந்தால் அவர்களைத் தூயவராக்கும்" என்றார். அப்போது யோனத்தாசும் சவுலும் பிடிபட்டனர்; மக்கள் நீங்கினார்கள்.
42 அப்போது சவுல், "எனக்கும் என் மகன் யோனத்தாசுக்கும் இடையே சீட்டுப் போடுங்கள்" என்றார்.
43 யோனத்தாசு பிடிபட்டான். சவுல் யோனத்தாசைப் பார்த்து, "நீ செய்ததை எனக்கு வெளிப்படுத்து" என, யோனத்தாசு, "என் கையிலிருந்த கோலின் நுனியினால் கொஞ்சம் தேனை எடுத்துச் சுவை பார்த்தேன். இதோ அதற்காகச் சாகிறேன்" என்று அவருக்கு வெளிப்படுத்தினான்.
44 அதற்கு சவுல், "யோனத்தாசு, நீ சாகவே சாவாய்; இல்லாவிட்டால் கடவுள் எனக்கு தகுந்த கைம்மாறு அளிப்பாராக" என்று சொன்னார்.
45 அதற்கு மக்கள், "இஸ்ராயேலில் இவ்வளவு பெரிய மீட்பைக் கொணர்ந்த யோனத்தாசும் சாவானோ? அது கூடாது. ஆண்டவர்மேல் ஆணை! அவன் தலைமயிரில் ஒன்றும் தரையில் விழாது. ஏனெனில் கடவுள் துணை நிற்க அவன் இன்று அதைச் செய்தான்" என்று சொல்லி யோனத்தாசு சாகாதபடி அவனைத் தப்புவித்தனர்.
46 சவுல் பிலிஸ்தியரைப் பின் தொடராது, திரும்பிப் போனார். பிலிஸ்தியரும் தங்கள் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.
47 இவ்வாறு இஸ்ராயேலின் மேல் சவுலின் அரசு உறுதிப்பட்ட பின், அவர் சுற்றிலுமுள்ள மோவாப், அம்மோன், ஏத்தோம் புத்திரர், சொபா அரசர், பிலிஸ்தியர் ஆகிய எல்லா எதிரிகளோடும் சண்டை செய்து வந்தார்; அவர் எங்குச் சென்றாலும் வெற்றியுடன் திரும்புவார்.
48 பிறகு அவர் படை திரட்டி அமலேக்கியரை முறியடித்தார். தங்களைக் கொள்ளையிட்டு வந்தோருடைய கையினின்று இஸ்ராயேலரை மீட்டார்.
49 யோனத்தாசு, யெசுயி, மெல்கிசுவா ஆகியோர் சவுலின் புதல்வர்கள். அவருடைய இரு புதல்வியரில் மூத்தவள் பெயர் மெரோப், இளையவள் பெயர் மிக்கோல்.
50 சவுலுடைய மனைவியின் பெயர் அக்கினோவாம்; அவள் அக்கிமாசின் புதல்வி. அவருடைய படைத் தலைவனின் பெயர் அப்நேர்; இவன் சவுலின் சிற்றப்பனான நேரின் மகன்.
51 சவுலின் தந்தை பெயர் சீஸ். அப்நேரின் தந்தையின் பெயரோ நேர்; இவன் அபியேலின் மகன்.
52 சவுலின் வாழ்நாள் முழுவதும் பிலிஸ்தியரோடு கடும்போர் நடந்து வந்தது. ஆற்றல் படைத்தவனையோ போருக்குத் தகுதி படைத்தவனையோ சவுல் கண்டால் அவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்வார்.
×

Alert

×