Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Kings Chapters

1 Kings 7 Verses

1 சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்கப் பதின் மூன்று ஆண்டுகள் ஆயின.
2 அவர் 'லீபானின் வனம்' என்ற மாளிகையையும் கட்டினார். அது நூறு முழ நீளமும், ஐம்பது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாய் இருந்தது. மேலும் அதற்குக் கேதுரு மரத் தூண்களின் நடுவே நான்கு நடைபாதைகள் இருந்தன. ஏனெனில் அவர் கேதுரு மரங்களைத் தூண்களாக வெட்டியிருந்தார்.
3 ஒவ்வொரு வரிசையிலும் பதினைந்து தூண்கள் இருந்தன. அந்த நாற்பத்தைந்து தூண்களின் மேல் அமைந்திருந்த வளைவு கேதுரு மரங்களாலேயே மூடப்பட்டிருந்தது.
4 அத்தூண்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்ததுமன்றி,
5 ஒரே அளவு இடைவெளியில் நாட்டப்பட்டிருந்ததால் அவை ஒன்றுக்கொன்று நேராக இருந்தன. அத்தூண்களின் மேல் ஒரே அளவுள்ள சதுர உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
6 அவர் ஐம்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமான தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தையும் கட்டினார். இப்பெரிய மண்டபத்திற்கு எதிரில் வேறு தூண்களை நிறுத்தி, அத்தூண்களின் மேல் உத்திரங்களிட்டு வேறொரு மண்டபத்தையும் கட்டினார்.
7 நீதியிருக்கை அமைந்திருக்கிற அரியணை மண்டபத்தையும் கட்டினார். அதைக் கீழ்த்தளம் முதல் மேல்தளம் வரை கேதுருப் பலகைகளால் பாவினார்.
8 அம்மண்டபத்தின் நடுவே அதே மாதிரியாகச் செய்யப்பட்ட ஒரு நீதியிருக்கை மண்டபம் இருந்தது. சாலமோன் தாம் மணந்து கொண்ட பாரவோனின் மகளுக்கும் அம்மண்டபத்தைப் போன்று வேறொரு மண்டபத்தைக் கட்டினார்.
9 இக்கட்டடங்கள் எல்லாம், உள்ளும் புறமும், தரை முதல் சுவரின் உச்சி வரை, வெளியே அமைந்த பெரிய முற்றம் வரைக்கும், ஒரே அளவுப்படி செதுக்கப் பெற்ற விலையேறப் பெற்ற கற்களால் கட்டப்பட்டிருந்தன.
10 அடித்தளமோ பத்து முழமும் எட்டு முழமுமான விலையேறப் பெற்ற பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தது.
11 அதன் மேல் ஒரே அளவுள்ள விலையேறப்பெற்ற கற்களும் போடப்பட்டிருந்தன. கேதுரு பலகைகளும் அதே அளவின்படி அறுக்கப்பட்டிருந்தன.
12 பெரிய முற்றம் வட்ட வடிவமாய் இருந்தது. அதில் மூன்றுவரிசை செதுக்கப் பெற்ற கற்றூண்களும், ஒரு வரிசை இழைத்த கேதுரு மரத்தூண்களும் நாட்டப்பட்டிருந்தன. ஆண்டவருடைய ஆலயத்தின் உள் முற்றமும் அதன் முன் மண்டபமும் அவ்வாறே அமைக்கப் பெற்றிருந்தன.
13 சாலமோன் அரசர் தீரிலிருந்து ஈராம் என்பவனை வரவழைத்திருந்தார்.
14 இவன் நெப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு விதவையின் மகன். இவன் தந்தை தீர் நகரத்தான். இவன் பித்தளை வேலையில் கைதேர்ந்தவன். எல்லாவிதப் பித்தளை வேலையையும் செய்யத்தக்க மதி நுட்பம் வாய்ந்தவன். ஈராம் சாலமோன் அரசரிடம் வந்து அவர் சொன்ன வேலையை எல்லாம் செய்தான்.
15 இவன் இரண்டு பித்தளைத் தூண்களைச் செய்தான். ஒவ்வொரு தூணும் பதினெட்டு முழ உயரமும், பன்னிரண்டு முழச் சுற்றளவும் உள்ளதாய் இருந்தது.
16 அத்தூண்களின் உச்சியில் வைக்கப் பித்தளையினால் வார்க்கப்பட்ட இரண்டு தூண் முகடுகளைச் செய்தான். ஒவ்வொரு முகடும் ஐந்து முழ உயரமாய் இருந்தது.
17 அவ்விரு பித்தளை முகடுகளுக்கும் வலைபோன்ற பின்னல்களும், சங்கிலி போன்ற தொங்கல்களும், முகட்டிற்கு ஏழாக அமைந்திருந்தன.
18 தூண்களைச் செய்த விதமாவது: தூண்களின் உச்சியின் மேலுள்ள முகடுகளை மூடும்படிக்கு முகடு ஒவ்வொன்றிலும் பின்னலின் மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதுளம் பழங்களை அமைத்தான்.
19 மண்டபத்தின் முன்புறத்திலிருக்கும் தூண்களுடைய உச்சியின் மேலுள்ள முகடுகளோ லீலிமலர் வேலைப்பாடுடன் நான்கு முழ உயரமுடையனவாய் இருந்தன.
20 மேலும், இரண்டு தூண்களின் மேலுள்ள முகடுகளின் பின்னல்களுக்கு அருகே தூண்களின் அளவுக்குத் தகுந்தபடி வேறு முகடுகளும் மேலே வைக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டாம் வகை முகடுகளைச் சுற்றிலும் இரண்டு வரிசையாய் இருநூறு மாதுளம் பழங்கள் அமைக்கப்பட்டன.
21 இந்த இரண்டு தூண்களை ஆலய மண்டபத்தில் நாட்டினான். அவன் வலப்புறத்தில் நாட்டின தூணுக்கு ஜாக்கின் என்றும், இடப்புறத்தில் நாட்டின தூணுக்குப் போசு என்றும் பெயரிட்டான்.
22 தூண்களின் முகட்டில் லீலி மலரால் செய்யப்பட்ட வேலைப்பாட்டை வைத்தான். இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது.
23 அவன் வார்ப்புக் கடல் என்ற வட்டமான தொட்டியையும் கட்டினான். அதன் அகலம் பத்து முழம், உயரம் ஐந்து முழம், சுற்றளவு முப்பது முழம்.
24 அதன் கீழே சுற்றிலும் பத்து முழத்திற்குக் கொத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொட்டி வார்க்கப்பட்ட போது பல இரு வரிசைச் சித்திரமும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன.
25 அக்கடல் தொட்டி பன்னிரு எருதுகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும், மூன்று கிழக்கையும், நோக்கி இருந்தன. கடல் தொட்டி எருதுகளின் மேலேயும், இவற்றின் பின்புறங்கள் அதற்கடியிலும் இருந்தன.
26 தொட்டியின் கனம் மூன்று அங்குலமும், அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும், மலர்ந்த லீலிமலரின் இதழைப்போலவும் இருந்தன. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.
27 அது தவிர ஈராம் பத்து வெண்கலச் சதுரப் பாதங்களையும் செய்தான். ஒவ்வொரு பாதமும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமுமாய் இருந்தது.
28 அந்தப் பாதங்கள் வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டு, இணைப்புக்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
29 வளையம் முதலிய சிற்ப அணிகளுக்குள் சிங்கங்களும் காளைகளும் கெருபீம்களும் வைக்கப்பட்டிருந்தன. சந்துகளின் மேலும் கீழும் அவ்விதமான சிங்கங்களும் காளைகளும், நீர்த்தாரைபோல் தொங்கிக் கொண்டிருந்த பித்தளைத் தகடுகளும் இருந்தன.
30 ஒவ்வொரு பாதத்துக்கும் நான்கு பித்தளை அச்சுகளும் உருளைகளும் இருந்தன. தொட்டியின் கீழ் நான்கு கோடிகளுக்கும் கொப்பரையைத் தாங்க வார்க்கப்பட்ட புயங்களின் நான்கு காதுகளும் ஒன்றுக்கொன்று நேராய் இருந்தன.
31 பாதத்தின்மேல் தொட்டி நிலைகொள்ள ஒரு பள்ளம் இருந்தது. வெளியேயிருந்து பார்த்தால் அது ஒரு முழ உயரமான வடிவுபோல் இருந்தது. தூண்களின் கோணங்களுக்குள் பல சிற்பங்களும் செய்யப்பட்டிருந்தன. இரு தூண்களின் இடைவெளிகளோ வட்டமாய் இல்லாது சதுரமாய் இருந்தன.
32 பாதத்தின் நான்கு கோணங்களோடு சேர்ந்த நான்கு உருளைகள் பாதத்தின் கீழே ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். ஒவ்வொன்றும் ஒன்றரை முழ உயரம்.
33 உருளைகளின் வேலைப்பாடு தேர் உருளைகளின் வேலைப்பாட்டை ஒத்திருந்தது. அவற்றின் அச்சுகளும் சுற்று வட்டங்களும் சுற்றுக்கட்டைகளும் குடங்களும் வார்க்கப்பட்டிருந்தன.
34 பாதத்தினுடைய நான்கு மூலைகளிலும் தாங்கும் கால்கள் பாதத்திலிருந்து புறப்படுகிற தனி வார்ப்பாக இருந்தது பாதத்தோடு இணைக்கப்பட்டிருந்தன.
35 ஒவ்வொரு பாதத்தின் தலைப்பிலும் அரை முழ உயரமுள்ள வளைவான வரம்பு இருந்தது. அதன் மேற்பகுதி தொட்டி பதியத்தக்க விதமாயும், பலவித கொத்து வேலைபாட்டுச் சிற்பங்களால் அமைந்ததாயும் இருந்தது. இவை பாதத்தோடு சேர்ந்த ஒரே வார்ப்பாய் இருந்தன.
36 அவன் வெண்கலங்களின் இடையிலும், கோணங்களின் இடையிலும் கெருபீம்கள், சிங்கங்கள், பேரீச்சஞ் சோலைகளுடைய சிற்பங்களைச் செதுக்கினான். ஆனால் செதுக்கப்பட்ட இவை எல்லாம் சிற்பம் போலில்லாமல், உயிருடன் நிற்பது போல, சுற்றிலும் உருவங்கள் பதிக்கப்பட்டனவாயிருந்தன.
37 இப்படியாக ஈராம் அந்தப் பத்துப் பாதங்களையும் செய்தான். அவை எல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரே விதக் கொத்து வேலைப்பாடுமாயிருந்தன.
38 அவன் பத்து வெண்கலத் தொட்டிகளையும் செய்தான். ஒவ்வொரு தொட்டியும் நாற்பது 'பாட்' என்ற குடம் கொள்ளும். ஒவ்வொரு தொட்டியும் நான்கு முழ அகலமாய் இருந்தது. அந்தப் பத்தும் ஒவ்வொரு பாதத்தின்மேல் வைக்கப்பட்டிருந்தன.
39 அவன் ஐந்து பாதங்களை ஆலயத்தின் வலப்புறத்திலும், ஐந்து பாதங்களை ஆலயத்தின் இடப்புறத்திலும் வைத்தான். ஆனால் கடல் என்ற தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலப்புறத்திலே தெற்கு நோக்கி வைத்தான்.
40 ஈராம் கொப்பரைகளையும் அண்டாக்களையும் கலயங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் ஆண்டவருடைய ஆலயத்துக்காகச் சாலமோன் அரசர் செய்யச் சொல்லியிருந்த மற்ற வேலைகளையும் செய்து முடித்தான்.
41 அவையாவன: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின் மேலிருக்கும் சிற்ப அணியான கிண்ணங்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கும் இரண்டு வலைப்பின்னல்களும்,
42 தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கிண்ணங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் அமைத்த இரண்டு வரிசை மாதுளம் பழங்களும் ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதுளம் பழங்களும், பத்து பாதங்களும்,
43 பாதங்களின் மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,
44 ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரு எருதுகளும்,
45 கொப்பரைகளும் அண்டாக்களும் கலயங்களுமாம். ஆண்டவருடைய ஆலயத்துக்காகச் சாலமோன் அரசருக்கு ஈராம் செய்த தட்டுமுட்டுகள் எல்லாம் சுத்தமான பித்தளையால் செய்யப்பட்டிருந்தன.
46 யோர்தானுக்கடுத்த சமவெளியில் சொக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவேயுள்ள களிமண் தரையில் அரசர் இவற்றை வார்ப்பித்தார்.
47 இந்த தட்டு முட்டுகள் எல்லாவற்றையும் சாலமோன் ஆலயத்தில் வைத்தார். இந்தத் தட்டு முட்டுகள் மிக அதிகமாய் இருந்தமையால், அவற்றின் பித்தளையின் எடை கணிக்கப்படவில்லை.
48 மேலும் சாலமோன், ஆண்டவடைய ஆலய ஊழியத்திற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்தார். அதாவது பொன் பீடத்தையும், சமூகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேசையையும்,
49 திருத்தலத்திற்கு முன்பாகப் பசும்பொன் விளக்குத் தண்டுகள் வலப்புறம் ஐந்தையும், இடப்புறம் ஐந்தையும், அவற்றின் மேல் பொன்னால் லீலிமலர் விளக்குகளையும், பொன் குறடுகளையும் செய்து வைத்தார்.
50 பசும்பொன் குடங்களையும் கத்திரிகளையும் கலசங்களையும் கிண்ணங்களையும் தூபக்கலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், ஆலய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தார்.
51 இவ்விதமாய்ச் சாலமோன் அரசர் ஆண்டவருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தன. அப்பொழுது சாலமோன் தம் தந்தை தாவீது பரிசுத்த காணிக்கையாக நேர்ந்து கொண்ட வெள்ளியையும், பொன்னையும் தட்டுமுட்டுகளையும் கொண்டுவந்து ஆண்டவருடைய ஆலயத்தின் கருவூலங்களில் வைத்தார்.
×

Alert

×