Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Kings Chapters

1 Kings 3 Verses

1 இவ்வாறு சாலமோனின் அரசு அவர் கையில் உறுதிப்படுத்தப்பட்டது. பின் சாலமோன் எகிப்திய அரசன் பாரவோனோடு உறவு கொண்டு பாரவோனின் மகளை மணந்து, தம் அரண்மனையையும் கடவுளின் ஆலயத்தையும் யெருசலேமின் சுற்று மதிலையும் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் வைத்திருந்தார்.
2 ஆனால் அன்று வரை ஆண்டவருடைய பெயரால் ஆலயம் கட்டப்படாமல் இருந்ததினால், மக்கள் மேடுகளின் மேல் பலியிட்டு வந்தனர்.
3 சாலமோன் ஆண்டவர் மேல் அன்பு கூர்ந்து தம் தந்தையின் கட்டளைகளின்படி நடந்து வந்தார். அவரும், மேடுகளில் தான் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தார்.
4 காபோவாம் மிக உயர்ந்த மேடாய் இருந்ததால் சாலமோன் ஒருநாள் அங்குச் சென்று, அந்தக் காபாவோன் பலிபீடத்தில் ஆயிரம் தகனப் பலிகளைச் செலுத்தினார்.
5 அன்றிரவு ஆண்டவர் கனவில் தோன்றி, "நீ விரும்புவதைக் கேள்" என்றார்.
6 அதற்கு சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உம் திருமுன் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் உம்மோடு நடந்து வந்ததற்கு ஏற்ப நீர் அவர் மேல் பேரிரக்கம் கொண்டீர். அப்பேரிரக்கத்தை என்றும் அவருக்குக் காட்டி இன்று உள்ளது போல் அவரது அரியணையில் வீற்றிருக்க ஒரு மகனை அவருக்குத் தந்துள்ளீர்.
7 இப்போது, என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் உம் அடியானை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரியணையில் ஏற்றினீர். நானோ சிறுவன்; எதையும் தலைமை ஏற்று நடத்தும் ஆற்றல் அற்றவன்.
8 நீர் தேர்ந்து கொண்டவர்களும், எண்ணிக்கைக்குள் அடங்காத, மதிப்பிட முடியாதவர்களுமான திரளான மக்களாகிய உம் மக்கள் நடுவில் அடியேன் இருக்கிறேன்.
9 ஆகையால் உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமையைப் பகுத்தறியவும் வேண்டிய ஞானத்தை அடியேனுக்கு அளித்தருளும்; ஏனெனில், கணக்கற்ற இந்த உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.
10 சாலமோன் சொன்ன சொற்களும், செய்து கொண்ட விண்ணப்பமும் ஆண்டவருக்குப் பிடித்திருந்தன.
11 ஆகையால் ஆண்டவர் அவரை நோக்கி, "உனக்கென நீடிய ஆயுளையும் மிகுந்த செல்வத்தையும் உன் எதிரிகளின் உயிர்களையும் கேளாமல், நீ இதையே கேட்டு, நீதி வழங்குவதற்கு ஏற்ற ஞானத்தை உனக்குத் தர வேண்டும் என்று நீ மன்றாடினதால்,
12 உன் வார்த்தையின்படியே நாம் உனக்குச் செய்தோம். ஞானமும் அறிவும் உள்ள இதயத்தை உனக்குத் தந்தோம். இதில் உனக்கு இணையானவன் இதற்கு முன் இருந்ததுமில்லை; இதற்குப் பின் இருக்கப் போவதுமில்லை.
13 இதுவுமன்றி, நீ நம்மிடம் கேளாத செல்வத்தையும் புகழையும் நாம் உனக்குத் தந்தோம். இதற்கு முன் இருந்த அரசர்களில் ஒருவன் கூட உனக்கு இணையாய் இருந்ததில்லை.
14 அன்றியும் உன் தந்தை தாவீது நடந்தது போல் நீயும் நம் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்து நம்வழி நடப்பாயாகில், உனக்கு நீடிய ஆயுளை அருள்வோம்" என்றார்.
15 சாலமோன் கண்விழித்த போது, தான் கண்ட கனவின் பொருளைப் புரிந்து கொண்டார். உடனே யெருசலேமுக்கு வந்து ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தித் தம் ஊழியர் அனைவருக்கும் பெரும் விருந்து செய்தார்.
16 அக்காலத்தில் விலைமாதர் இருவர் அரசரிடம் வந்து அவருக்கு முன்பாக நின்றனர்.
17 அவர்களில் ஒருத்தி, "என் தலைவ, கேளும்; நானும் இப் பெண்ணும் ஒரே வீட்டில் குடியிருந்தோம்; நான் படுக்கையறையில் இவளருகில் இருந்த போது ஒரு பிள்ளையைப் பெற்றேன்.
18 நான் பிள்ளை பெற்ற மூன்றாம் நாளில் இவளும் ஒரு பிள்ளையைப் பெற்றாள். எங்கள் இருவரைத் தவிர வீட்டில் வேறு ஒருவரும் இல்லை.
19 இரவுத் தூக்கத்தில் இப் பெண் தன் பிள்ளையின் மேல் புரண்டு அமுக்கினதினாலே அது இறந்து போயிற்று.
20 அப்பொழுது உம் அடியாளாகிய நான் தூங்கிக் கொண்டிருக்க இவள் நள்ளிரவில் எழுந்து என் பக்கத்தில் கிடந்த என் பிள்ளையை எடுத்துத் தன் மடியில் கிடத்திக் கொண்டு, இறந்த தன் பிள்ளையை எடுத்து என்னருகே கிடத்தி விட்டாள்.
21 பிள்ளைக்குப் பால் கொடுக்கக் காலையில் நான் எழுந்த போது அது இறந்து கிடக்கக் கண்டேன். பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்த்த போது, அது நான் பெற்ற பிள்ளையன்று எனக் கண்டேன்" என்றாள்.
22 அதற்கு மற்ற பெண் மறுமொழியாக, "அப்படியன்று, உயிரோடு இருக்கிறது என் பிள்ளை; இறந்தது உன் பிள்ளைதான்" என்றாள். இவளோ, "இல்லை, ஏன் பொய் சொல்கிறாய்? இறந்தது உன் பிள்ளை; உயிரோடிருக்கிறது என் பிள்ளை தான்" என்றாள். இவ்வாறு அவர்கள் அரசர் முன் வாதாடிக் கொண்டிருந்தனர்.
23 அப்பொழுது அரசர், " உயிரோடு இருக்கிறது என் பிள்ளை; இறந்தது உன் பிள்ளை' என்று இவள் சொல்கிறாள். 'அப்படியன்று, இறந்தது உன் பிள்ளை; உயிரோடு இருக்கிறது என் பிள்ளை' என்று அவள் சொல்லுகிறாள்" என்று சொன்னார்.
24 பின்னர், "ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்" என்று அரசர் பணித்தார். அப்படியே ஒரு வாளை அரசரிடம் கொண்டு வந்தார்கள்.
25 அவர், "உயிரோடு இருக்கிற பிள்ளையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாகக் கொடுங்கள்" என்றார்.
26 அப்போது உயிரோடு இருந்த பிள்ளையின் தாய் தன் பிள்ளைக்காக வயிறு துடித்தவளாய் அரசரை நோக்கி, "வேண்டாம் தலைவ, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும்" என்றாள். மற்றவள் அதற்கு மாறாக, "அது எனக்கும் வேண்டாம், அவளுக்கும் வேண்டாம். இரு கூறாக்குங்கள்" என்றாள்.
27 அப்பொழுது அரசர் முடிவாக, "உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லாமல் அவளுக்குக் கொடுத்து விடுங்கள்; அவள் தான் அதன் தாய்" என்றார்.
28 அரசர் அளித்த இத்தீர்ப்பை இஸ்ராயேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நீதி வழங்கத்தக்க ஞானத்தைக் கடவுள் அரசருக்கு அளித்திருக்கிறார் என்று கண்டு, அவருக்கு அஞ்சி நடந்தனர்.
×

Alert

×