Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Kings Chapters

1 Kings 20 Verses

1 சீரியாவின் அரசன் பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையும் குதிரைகளையும் தேர்களையும் முப்பத்திரண்டு அரசர்களையும் தன்னோடு கூட்டிக் கொண்டு சமாரியாவின் மேல் படையெடுத்து அதை முற்றுகையிட்டான்.
2 அப்பொழுது அவன் நகரில் இருந்த இஸ்ராயேலின் அரசன் ஆக்காபிடம் தூதரை அனுப்பி,
3 உன் வெள்ளியும் பொன்னும் என்னுடையவை. உன் மனைவியரும், உன் புதல்வரில் கெட்டிக்காரரும் என்னுடையவர்கள்' என்று பெனாதாத் சொல்லுகிறான்" என்று சொல்லச் சொன்னான்.
4 இஸ்ராயேலின் அரசன் அதற்கு மறுமொழியாக, "அரசராகிய என் தலைவ, உமது வார்த்தையின்படியே நானும், என் உடைமைகள் யாவும் உம்முடையவை தாம்" என்று சொல்லி அனுப்பினான்.
5 அத்தூதுவர்கள் திரும்பவும் வந்து, " உம்மிடம் எங்களை அனுப்பின பெனாதாத் சொல்லுகிறதாவது: 'உன் வெள்ளியையும் பொன்னையும், உன் மனைவியரையும் புதல்வர்களையும் நீ எனக்குக் கொடுக்க வேண்டும்.
6 ஆகையால் நாளை இந்நேரம் என் ஊழியரை உன்னிடம் அனுப்புவேன். அவர்கள் உன் வீட்டையும், உன் ஊழியரின் வீடுகளையும் சோதித்து அவர்கள் தமக்கு விருப்பமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வர் ' என்பதாம்" என்று சொன்னார்கள்.
7 அப்போது இஸ்ராயேலின் அரசன் நாட்டின் மூப்பரை எல்லாம் அழைத்து," இவன் நமக்குச் சதி செய்யும் விதத்தைக் கவனித்துப் பாருங்கள். இவன் என் மனைவியரையும் புதல்வர்களையும் என் பொன் வெள்ளியையும் கேட்டான். அதற்கு நான் தடை ஒன்றும் சொல்லவில்லையே" என்றான்.
8 அப்பொழுது எல்லா மூப்பரும் மக்கள் அனைவரும் அவனை நோக்கி, "நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவன் கேட்டவற்றிற்கு இணங்கவும் வேண்டாம்" என்றனர்.
9 எனவே, ஆக்காப் பெனாதாத்தின் தூதுவரை நோக்கி, "நீங்கள் அரசராகிய என் தலைவருக்கு, ' நீர் முதல் முறை உம் அடியானாகிய எனக்குச் சொல்லி அனுப்பிய யாவற்றையும் நான் செய்வேன். இம் முறை நீர் கேட்பவற்றை நான் செய்ய இயலாது' என்று சொல்லுங்கள்" என்றான்.
10 தூதுவர்கள் திரும்பி வந்து இம்மறுமொழியைப் பெனாதாத்துக்குச் சொல்லவே, அவன் மறுபடியும் அவர்களை ஆக்காபிடம் அனுப்பி, "சமாரியாவின் சாம்பல் என்னைப் பின் தொடரும் எல்லா மக்களுடைய உள்ளங்கைகளிலும் அடங்காமற் போனால், தேவர்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்" என்று சொல்லச் சொன்னான்.
11 அதற்கு இஸ்ராயேலின் அரசன் மறுமொழியாக, "ஆயுதங்களை அணியும்போது பெருமை பாராட்டுவது நன்றன்று; அணிந்து கழற்றின பிறகு பெருமை பாராட்டுவதே நன்று' என்று உங்கள் தலைவனுக்குச் சொல்லுங்கள்" என்றான்.
12 இம்மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனாதாத் மற்ற அரசர்களோடு தன் கூடாரத்தில் குடித்துக் கொண்டிருந்தான். இவ்வார்த்தையைக் கேட்டு அவன் தன் ஊழியரை நோக்கி, "நகரை முற்றுகையிடுங்கள்" என்றான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
13 அப்பொழுது ஓர் இறைவாக்கினர் இஸ்ராயேலின் அரசன் ஆக்காபிடம் வந்து, "ஆண்டவர் சொல்கிறதாவது: 'அந்த ஏராளமான மக்கட் கூட்டத்தை எல்லாம் நீ கண்டாய் அன்றோ? இதோ நாமே உண் ஆண்டவர் என்று நீ அறியும்படி இன்று அதை உன் கையில் ஒப்படைப்போம்' என்பதே" என்றார்.
14 ஆக்காப் அவரைப் பார்த்து, "யார் மூலம் இது நடைபெறும்?" என்று கேட்க, "மாநில அதிபர்கள் மூலம்' என்று ஆண்டவர் சொல்கிறார்" என்றார். மறுபடியும் ஆக்காப், 'போரை யார் தொடங்க வேண்டும்?" என்று வினவ, அவர், "நீர் தான்" என்றார்.
15 ஆக்காப் மாநில அதிபர்களின் சேவகர்களை எண்ணிப் பார்க்க, அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டு பேர் என்று அறிய வந்தான். பின்பு இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் கணக்கிட, அவர்கள் ஏழாயிரம் பேர் என்று கண்டு கொண்டான்.
16 இவர்கள் நண்பகல் வேளையில் வெளியே புறப்பட்டனர். பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த ஏனைய முப்பத்திரண்டு அரசர்களும் பாசறையில் குடிவெறியில் இருந்தனர்.
17 மாநில அதிபர்களின் சேவகர் அணிவகுத்து எல்லாருக்கும் முதலில் வெளியே வந்தனர். பெனாதாத், "அவர்கள் யார்?" என்று பார்த்துவர ஆள் அனுப்பினான். "அவர்கள் சமாரியாவிலிருந்து வந்தவர்கள்" என்று அவனுக்கு அறிவித்தனர்.
18 அப்போது அவன், "அவர்கள் சமாதானம் நாடி வந்திருந்தாலும் சரி, போரிட வந்திருந்தாலும் சரி, அவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான்.
19 எனவே, மாநில அதிபர்களின் சேவர்கள் முன் செல்ல, எனைய படைகள் அவர்களைப் பின் தொடர்ந்தன.
20 அவர்களில் ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சீரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ராயேல் வீரர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். சீரியாவின் அரசன் பெனாதாத் குதிரை மீது ஏறித் தன்னோடு இருந்த வீரரோடு தப்பி ஓடிப்போனான்.
21 அந்நேரத்தில் இஸ்ராயேலின் அரசன் புறப்பட்டுக் குதிரைகளையும் தேர்களையும் முறியடித்துச் சீரியரில் பலரைக் கொன்று குவித்தான்.
22 பின்பு இறைவாக்கினர் இஸ்ராயேலின் அரசனிடம் வந்து அவனை நோக்கி, "நீர் போய் உம்மைப் பலப்படுத்திக் கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னது என்று கவனித்துப் பாரும். ஏனென்றால் அடுத்த ஆண்டில் சீரியாவின் அரசன் மறுபடியும் உமக்கு எதிராய்ப் போரிட வருவான்" என்றார்.
23 மேலும் சீரியாவின் அரச ஊழியர்கள் அரசனைப் பார்த்து, "அவர்களுடைய தேவர்கள் மலைக் கடவுளர். ஆகவே, அவர்கள் நம்மை வென்றனர். நாம் அவர்களோடு சமவெளியில் போரிடுவது நல்லது; அப்போது நாம் அவர்களை வெல்வோம்.
24 அதற்காக நீர் செய்ய வேண்டியது என்னவென்றால்: உமது படையிலிருந்து எல்லா அரசர்களையும் நீக்கி விட்டு, அவர்களுக்குப் பதிலாகப் படைத்தலைவர்களை நியமனம் செய்யும்.
25 உமது படைவீரரில் மடிந்தோரின் எண்ணிக்கைக்குச் சமமான வீரர்களையும், முன்பு நீர் கொண்டிருந்த குதிரைகள், தேர்களின் எண்ணிக்கைக்குச் சமமான குதிரைகளையும் தேர்களையும் சேர்த்து வையும். சமவெளியில் போரிடும் பொழுது நாம் அவர்களை மேற்கௌ;ள நீர் காண்பீர்" என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.
26 மறு ஆண்டில் பெனாதாத் சீரியரை அணிவகுத்து, இஸ்ராயேலோடு போரிட ஆபேக்குக்கு வந்தான்.
27 இஸ்ராயேல் மக்களும் தங்கள் படைகளை அணிவகுத்து, உணவுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, சீரியருக்கு எதிராய்ப் புறப்பட்டு வந்து அவர்களுக்கு எதிரே பாசறை அமைத்தனர். இவர்கள் இரண்டு சிறிய வெள்ளாட்டு மந்தைபோல் காணப்படச் சீரியரோ நாடு எங்கணும் நிரம்பி இருந்தனர்.
28 அப்போது கடவுளின் மனிதர் ஒருவர் வந்து இஸ்ராயேலின் அரசனைப் பார்த்து, "ஆண்டவருடைய வார்த்தையைக் கேளும்: ' ஆண்டவர் பள்ளத்ததாக்குகளின் கடவுள் அல்லர்; மலைகளின் கடவுளாய் இருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியால், நாம் இப்பெரிய மக்கட் கூட்டம் முழுவதையும் உன் கையில் ஒப்படைப்போம். அதனால் நாமே ஆண்டவர் என்று நீங்கள் அறிவீர்கள்' என்கிறார்" என்று கூறினார்.
29 ஏழு நாட்களாக இருபடைகளும் நேருக்கு நேர் அணிவகுத்து நின்றன. ஏழாவது நாளில் போர் மூண்டது. இஸ்ராயேல் மக்கள் ஒரே நாளில் சீரியரது காலாட் படையில் இலட்சம் பேரைக் கொன்று குவித்தனர்.
30 எஞ்சியோர் ஆபேக் நகருக்கு ஓடிப்போயினர். அங்கே அவர்களில் இருபத்தேழாயிரம் பேரின் மேல் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. பெனாதாத்தும் நகருக்குத் தப்பி ஓடி ஓர் அறையில் நுழைந்து அங்கே ஒளிந்து கொண்டான்.
31 அப்போது அவன் ஊழியர் வந்து அவனை நோக்கி, "இஸ்ராயேல் நாட்டு அரசர்கள் இரக்கம் உள்ளவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாம் கோணி உடுத்தித் தலைகளைக் கயிறுகளால் சுற்றிக் கொண்டு இஸ்ராயேலின் அரசரிடம் போவோம். ஒருவேளை நமக்கு அவர் உயிர்ப்பிச்சை அளிப்பார்" என்று சொன்னார்கள்.
32 அவ்விதமே அவர்கள் கோணி உடுத்தித் தலைகளைக் கயிறுகளால் சுற்றிக்கொண்டு இஸ்ராயேல் அரசனிடம் வந்தனர். "உம் ஊழியனான பெனாதாத் உம்மை மன்றாடி 'எனக்கு உயிர்ப்பிச்சை அளியும்' என்கிறார்" என்று அவர்கள் அரசனை வேண்டினர். அதற்கு அவன், "இன்னும் அவன் உயிரோடு இருந்தால், அவன் எனக்குச் சகோதரன்" என்றான்.
33 இது நன்மைக்கு அடையாளம் என்று சீரியர் கண்டு, அவன் சொற்களைக் கேட்ட ஆத்திரத்தில்,"உன் சகோதரர் பெனாதாத் உயிரோடு இருக்கிறார்" என்றனர். அப்பொழுது அவன், "நீங்கள் போய் அவனை அழைத்து வாருங்கள்" என்றான். எனவே பெனாதாத் அவனைக் காண வந்தான். ஆக்காப் அவனைத் தன் தேரில் ஏற்றினான்.
34 அப்பொழுது பெனாதாத் அவனைப் பார்த்து, "என் தந்தை உம் தந்தையிடமிருந்து பிடித்த நகர்களை நான் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல் நீரும் தமாஸ்குவில் உமக்குத் தெருக்களை ஏற்படுத்திக் கொள்ளும். நாம் இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டபின் நான் விடைபெற்றுச் செல்வேன்" என்றான். அப்படியே ஆக்காப் அவனோடு உடன்படிக்கை செய்தபின் அவனை அனுப்பி வைத்தான்.
35 அப்பொழுது இறைவாக்கினரின் புதல்வர்களில் ஒருவர் ஆண்டவருடைய பெயரால் தம் தோழன் ஒருவனை நோக்கி, "நீ என்னை அடி" என்றார்.
36 அவனோ அதற்கு இணங்கவில்லை. அப்போது அவர் இவனைப் பார்த்து, "நீ ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதால், நீ என்னைவிட்டு அகன்ற உடனே, ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும்" என்றார். அப்படியே அவன் இவரை விட்டுச் சிறிது தூரம் சென்றதும் ஒரு சிங்கம் அவனைக் கண்டு கொன்று போட்டது.
37 அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, "நீ என்னை அடி" என்றார். அம்மனிதன் அவ்விதமே அவரைக் காயம்பட அடித்தான்.
38 அப்பொழுது அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று, தம் கண்ணிலும் முகத்திலும் சாம்பலை வாரிப் போட்டுக் கொண்டு மாறு வேடத்தில் வழியிலே அரசனுக்காகக் காத்திருந்தார்.
39 அரசன் அவ்வழியே சென்ற போது அவர் அரசனைப் பார்த்துக் கூப்பிட்டு, "உம் அடியான் எதிரிகளோடு போரிடச் சென்ற போது அவர்களில் ஒருவன் தப்பி ஓட வேறு ஒருவன் அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வந்து, 'இம்மனிதனைப் பத்திரமாய் வைத்திரு. இவன் உயிர் தப்பினால் உன் உயிர் போய்விடும்; அல்லது ஒரு தாலந்து வெள்ளி நீ கொடுக்க வேண்டும்' என்றான்.
40 ஆயினும், உம் அடியான் திகிலுற்று இங்குமங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென அம்மனிதன் மறைந்து விட்டான்" என்றார். இஸ்ராயேலின் அரசன் அவனைப் பார்த்து, "நீ சொன்னபடியே உனக்குத் தீர்ப்பாகும்" என்றான்.
41 உடனே அவர் தம் முகத்திலிருந்த சாம்பலைத் துடைக்க, இஸ்ராயேலின் அரசன் அவர் இறைவாக்கினரில் ஒருவர் என்று அறிந்து கொண்டான்.
42 அப்போது இறைவாக்கினர் அரசனை நோக்கி, "சாவுக்கு உரியவனை நீ உன் கையிலிருந்து தப்பிப் போகும் படி செய்ததால், அவன் உயிருக்கு பதிலாக உன் உயிரையும், அவன் மக்களின் உயிருக்குப் பதிலாக உன் மக்களின் உயிரையும் பழி வாங்குவோம்' என ஆண்டவர் திருவுளம்பற்றினார்" என்றார்.
43 இஸ்ராயேலின் அரசன் அதைக் கேட்க விரும்பாது வீடு நோக்கிப் புறப்பட்டுக் கோபவெறி கொண்டவனாய்ச் சமாரியா வந்து சேர்ந்தான்.
×

Alert

×