Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Kings Chapters

1 Kings 18 Verses

1 நாட்கள் பல நகர்ந்தன. மூன்றாவது ஆண்டில் ஆண்டவர் எலியாசை நோக்கி, "நீ ஆக்காபிடம் செல். நாம் நாட்டின் மேல் மழை பொழியச் செய்வோம்" என்று திருவுளம் பற்றினார்.
2 அப்படியே எலியாசு ஆக்காபிடம் போனார். சமாரியாவில் கொடும் பஞ்சம் நிலவியது.
3 எனவே, ஆக்காப் தன் அரண்மனை மேற்பார்வையாளனாகிய அப்தியாசை வரவழைத்தான். அப்தியாசோ தெய்வ பயம் உள்ளவன்.
4 ஜெசாபேல் ஆண்டவரின் இறைவாக்கினர்களைக் கொன்று வந்த போது, அப்தியாசு நூறு இறைவாக்கினர்களைக் கூட்டி வந்து, ஐம்பது ஐம்பது பேராக அவர்களைக் குகைகளில் ஒளித்து வைத்தான்; அதோடு உணவு அளித்து அவர்களைக் காப்பாற்றி வந்தான்.
5 ஆக்காப் அப்தியாசை நோக்கி, "நீ நாட்டிலுள்ள எல்லாப் பள்ளத்தாக்குகளுக்கும் ஊருணிகளுக்கும் சென்று, நம் கால்நடைகளை எல்லாம் இழந்துபோகாமல் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடு காப்பாற்றும்படி நமக்குப் புல் அகப்படுமா என்று பார்த்து வா" என்றான்.
6 இருவரும் நாட்டைச் சுற்றிப் பார்க்கும்படி அதை இரு பகுதிகளாகப் பிரித்த பின்னர், ஆக்காப் ஒரு வழியாயும் அப்தியாசு வேறு வழியாயும் போனார்கள்.
7 அப்தியாசு போகும் வழியில் எலியாசைச் சந்தித்தான். அப்தியாசு அவரை அடையாளம் அறிந்து நெடுந் தெண்டனிட்டு வணங்கி, "நீர் என் தலைவர் எலியாசு தானா?" என்று கேட்டான்.
8 அதற்கு அவர், "நான் தான். நீ போய், 'இதோ எலியாசு வந்திருக்கிறார்' என்று உன் தலைவனுக்குச் சொல்" என்றார்.
9 அதற்கு அப்தியாசு, "ஆக்காப் என்னைக் கொன்று போடும்படி நீர் உம் அடியானை அவன் கையில் ஒப்படைக்க நான் என்ன பாவம் செய்துள்ளேன்?
10 உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடும்படி மனிதரை அனுப்பாத இனமுமில்லை, நாடுமில்லை. நீர் ஓரிடத்திலும் காணப்படவில்லை என்று அவர்கள் சொன்ன போது, அவன் அந்தந்த நாட்டிடமிருந்தும் இனத்தாரிடமிருந்தும், உம்மைக் காணவில்லை என்று உறுதி பெற்றுக் கொண்டான்.
11 இப்பொழுது, 'நீ போய் உன் தலைவனிடம்: "இதோ எலியாசு வந்திருக்கிறார்" என்று சொல்' என்று நீர் சொல்லுகிறீரே.
12 நான் உம்மைவிட்டு அகன்றவுடனே, ஒருவேளை ஆண்டவருடைய ஏவுதலால் நான் அறியாத இடத்திற்கு நீர் சென்றுவிடலாம். அப்போது நான் ஆக்காபிடம் போய் உமது வருகையை அறிவிக்க, அவன் உம்மைக் காணாவிட்டால் என்னைக் கொன்று போடுவானே. உம் அடியானாகிய நான் இளமை தொட்டு ஆண்டவருக்கு அஞ்சி நடக்கிறேன்.
13 ஜெசாபேல் ஆண்டவரின் இறைவாக்கினரைக் கொன்று வந்த போது நான் அவர்களில் நூறு பேரை இரண்டு குகைகளிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்து வைத்து, உணவு அளித்து அவர்களைக் காப்பாற்றி வந்தேன் என்று என் தலைவராகிய உமக்குத் தெரியாதா?
14 இப்பொழுது என் தலைவன் என்னைக் கொன்று விடும்படியாகவா நீர், 'இதோ எலியாசு வந்திருக்கிறார்' என்று அவனிடம் போய்ச் சொல்லச் சொல்லுகிறீர்?" என்றான்.
15 அதற்கு எலியாசு, "நான் வழிபட்டு வரும் சேனைகளின் ஆண்டவர் மேல் ஆணை! இன்றே நான் ஆக்காபிடம் செல்வேன்" என்றார்.
16 அப்போது அப்தியாசு போய் ஆக்காபைக் கண்டு அவனுக்கு அதை அறிவிக்கவே, உடனே ஆக்காப் எலியாசைச் சந்திக்க வந்தான்.
17 ஆக்காப் எலியாசைக் கண்டவுடன் அவரை நோக்கி, "இஸ்ராயேலில் கலகம் செய்து வருபவன் நீ தானே?" என்றான்.
18 அதற்கு எலியாசு, "இஸ்ராயேலில் கலகம் செய்தவன் நான் அன்று. ஆண்டவரின் கட்டளையை மீறிப் பாவாலைப் பின்பற்றினதால் நீரும் உம் தந்தை வீட்டாருமே இஸ்ராயேலில் கலகம் செய்தீர்கள்.
19 இப்போது கார்மேல் மலையின் மேல் இஸ்ராயேலர் அனைவரையும், பாவாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பது பேரையும், ஜெசாபேலின் பந்தியில் உணவருந்தி வரும் பரந்த தோப்புகளின் தீர்க்கதரிசிகளான நானூறு பேரையும் என்னிடம் அழைத்து வர ஆட்களை அனுப்பும்" என்றார்.
20 அப்படியே ஆக்காசு இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் கூட்டி வர ஆட்களை அனுப்பி, கார்மேல் மலையிலிருந்த அந்தத் தீர்க்கதரிசிகளையும் அழைத்து வரும்படி செய்தான்.
21 அப்போது எலியாசு மக்களுக்கு முன் சென்று, "நீங்கள் எதுவரை இருபக்கமும் சாய்ந்து நடக்கும் நொண்டியைப் போல் இருப்பீர்கள்? ஆண்டவர் கடவுளானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாவால் கடவுளானால் அவனைப் பின்பற்றுங்கள்" என்றார். மக்கள் மறுமொழியாக ஒன்றும் சொல்லவில்லை.
22 எலியாசு மறுமுறையும் மக்களை நோக்கி, "ஆண்டவரின் இறைவாக்கினரில் எஞ்சியிருப்பவன் நான் ஒருவனே. பாவாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பது பேர் உள்ளனர்.
23 இருப்பினும், இரண்டு காளைகளை எம்மிடம் கொண்டு வாருங்கள். ஒரு காளையை அவர்கள் தேர்ந்து கொண்டு அதைத் துண்டு துண்டாய் வெட்டித் தீப்போடாமல் விறகுகளின் மேல் வைக்கட்டும். நானோ மற்றக் காளையை அப்படியே செய்து தீப்போடாமல் விறகுகளின் மேல் வைக்கிறேன்.
24 நீங்கள் உங்கள் தெய்வங்களைப் பெயர் சொல்லி அழைத்து வேண்டிக்கொள்ளுங்கள். நானும் என் கடவுளைப் பெயர் சொல்லி அழைத்து வேண்டிக்கொள்கிறேன். அப்போது தீயை உண்டுபண்ணுவதின் மூலம் நம் மன்றாட்டுகளுக்குச் செவி மடுக்கும் கடவுளே உண்மைக் கடவுள்" என்றார். அதற்கு மக்கள் எல்லாரும், "இதுவே சரியான யோசனை" என்றனர்.
25 அப்போது எலியாசு பாவாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி, "நீங்கள் பலராய் இருப்பதால், நீங்களே முதலில் ஒரு காளையைத் தேர்ந்து கொண்டு அதைத் தயார் செய்து தீப்போடாமல் உங்கள் தெய்வங்களின் பெயரை மட்டும் சொல்லி அழைத்து வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார்.
26 அத்தீர்க்கதரிசிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை வாங்கி அதைத் தயார் செய்து, "பாவாலே, எங்களுக்குச் செவிகொடும்" என்று காலை முதல் நண்பகல் வரைத் தங்கள் பலிபீடத்தைப் பலமுறை சுற்றிவந்து பாவாலின் பெயரைச் சொல்லி அழைத்து வேண்டிக் கொண்டனர். இருப்பினும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறுமொழி கொடுப்பாரும் இல்லை.
27 நண்பகல் வேளையில் எலியாசு கிண்டலாக அவர்களை நோக்கி, "இன்னும் உரத்த குரலில் செபியுங்கள்; அவர் கடவுள் அல்லரோ? சிலவேளை அவர் உரையாடிக் கொண்டிருப்பார்; அல்லது சத்திரத்தில் தங்கியிருப்பார்; அல்லது அவர் பயணம் சென்றிருக்கக் கூடும்; ஒருவேளை, அவர் தூங்கிக் கொண்டிருப்பார்; எனவே, அவரை எழுப்ப வேண்டியிருக்கலாம்" என்றார்.
28 அவர்கள் உரத்த குரலில் கூப்பிட்டுத் தம் வழக்கத்தின் படியே, இரத்தம் மிகுதியாக வடியும் வரைக் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களையே குத்திக் கொண்டனர்.
29 பிற்பகலிலும் அவர்கள் கத்திக் கொண்டுதான் இருந்தார்கள். இதோ பலி செலுத்தும் நேரமும் வந்தது. இருப்பினும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறுமொழி கொடுப்பாரும் இல்லை; அவர்களது மன்றாட்டைக் கவனிப்பாரும் இல்லை.
30 அப்போது எலியாசு எல்லா மக்களையும் நோக்கி, "எல்லாரும் என்னிடம் வாருங்கள்" என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகே வந்தனர். உடனே எலியாசு முன்னே இடிந்து கிடந்த ஆண்டவருடைய பலிபீடத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.
31 உனக்கு இஸ்ராயேல் என்ற பெயர் இருப்பதாக" என்று ஆண்டவர் யாக்கோபுக்குச் சொல்லியிருந்ததின் பொருட்டு, எலியாசு யாக்கோபின் புதல்வர்களுடைய கோத்திரங்களின் கணக்குப்படியே பன்னிரு கற்களை எடுத்தார்.
32 பின்னர் அக்கற்களைக் கொண்டே ஆண்டவருடைய பெயரால் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். மேலும் பலிபீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுசால் அகலம் உள்ள ஒரு வாய்க்காலை வெட்டினார்.
33 விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாய் வெட்டி, விறகுகளின் மேல் வைத்தார்.
34 மக்களை நோக்கி, "நான்கு குடம் தண்ணீர் கொணர்ந்து தகனப் பலியின் மேலும் விறகுகளின் மேலும் ஊற்றுங்கள்" என்றார். பிறகு, "இன்னும் ஒருமுறை அப்படியே ஊற்றுங்கள்" என்றார். "மூன்றாம் முறையும் அப்படியே ஊற்றுங்கள்" என்று அவர் கூற, அவர்கள் மூன்றாம் முறையும் ஊற்றினார்கள்.
35 அப்போது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடி வாய்க்காலையும் நிரப்பிற்று.
36 தகனப்பலி செலுத்தும் நேரமானவுடன் இறைவாக்கினர் எலியாசு பீடத்தருகே வந்து, "ஆபிரகாம், ஈசாக், யாக்கோப் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் இஸ்ராயேலின் கடவுள் என்றும், நான் உம்முடைய ஊழியன் என்றும், இவற்றை எல்லாம் நான் உமது வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்யும்.
37 நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும், நீரே இம்மக்களின் மனத்தை மாற்றியுள்ளீர் என்றும் இவர்கள் அறியும்படி என் மன்றாட்டைக் கேட்டருளும்; ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்" என்றார்
38 உடனே ஆண்டவரிடமிருந்து தீ இறங்கிவந்து அந்தத் தகனப் பலியையும் விறகுகளையும் கற்களையும் மணலையும் சுட்டெரித்து, வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது.
39 மக்கள் அனைவரும் இதைக் கண்டவுடனே நெடுந்தெண்டனிட்டு விழுந்து, "ஆண்டவரே கடவுள், ஆண்டவரே கடவுள்" என்றனர்.
40 அப்போது எலியாசு அவர்களை நோக்கி, "நீங்கள் பாவாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப் போகாதபடி அவர்களைப் பிடியுங்கள்" என்றார். மக்கள் அவர்களைப் பிடிக்க, எலியாசு அவர்களைக் கிசோன் ஆற்றுக்குக் கொண்டு போய் அங்கே அவர்களைக் கொன்றார்.
41 பின்பு எலியாசு ஆக்காபை நோக்கி, "நீர் போய் உணவு அருந்தும்; ஏனெனில், பெரு மழையின் இரைச்சல் கேட்கிறது" என்றார்.
42 ஆக்காப் சாப்பிடப் போகவே, எலியாசு கார்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே முழந்தாளிட்டுத் தம் முகத்தைத் தம் முழங்கால்களுக்கு இடையில் வைத்தவாறு,
43 தம் ஊழியனை நோக்கி, "நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்" என்றார். அவன் போய்ப் பார்த்து, "ஒன்றும் இல்லை" என்றான். எலியாசு அவனைப் பார்த்து, "ஏழு முறை சென்று பார்" என்றார்.
44 ஏழாம் முறை அவன் சென்று பார்த்தபோது, இதோ மனிதனின் அடிச் சுவட்டை ஒத்த ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்பி வந்தது. அப்போது எலியாசு தம் ஊழியனை நோக்கி, "நீ போய் ஆக்காபுக்கு: 'நீர் மழையில் அகப்பட்டுக் கொள்ளாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்' என்று சொல்" என்றார்.
45 அவன் புறப்படுவதற்குள் கார் முகில் சூழ, வானம் இருண்டது; காற்றும் அடித்தது. உடனே பெருமழை பெய்தது. ஆக்காப் தேரில் ஏறி ஜெஸ்ராயேலுக்குச் சென்றான்.
46 அந்நேரத்தில் ஆண்டவரின் கை எலியாசின் மேல் இருந்தது. அவரும் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு ஜெஸ்ராயேல் வரை ஆக்காபுக்கு முன்னே ஓடினார்.
×

Alert

×