Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Kings Chapters

1 Kings 16 Verses

1 பாசாவுக்கு எதிராக ஆண்டவர் அனானியின் மகன் ஏகுவின் மூலம் திருவுளம் பற்றினதாவது:
2 நாம் தூசியிலிருந்து உன்னைக் கை தூக்கி, நம் மக்கள் இஸ்ராயேல்மேல் உன்னைத் தலைவனாக ஏற்படுத்தினோம்; நீயோ எரோபோவாமின் வழிநடந்து நம் மக்களாகிய இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி, அவர்களுடைய பாவங்களால் நமக்குக் கோபம் வருவித்தாய்.
3 எனவே, இதோ நாம் பாசாவின் சந்ததியாரையும், அவன் வீட்டாரின் சந்ததியாரையும் அழித்து, நாபாத்தின் மகன் எரோபோவாமின் வீட்டைப் போல் உன் வீட்டையும் பாழாக்குவோம்.
4 பாசாவின் சந்ததியாரில் நகருள் இறப்பவன் நாய்களுக்கு இரையாவான்; நகருக்கு வெளியே இறப்பவன் வானத்துப் பறவைகளுக்கு இரையாவன்.
5 பாசாவின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் நிகழ்த்திய போர்களும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
6 பாசா தன் முன்னோரோடு துயிலடைந்து தேர்சாவில் புதைக்கப்பட்டான். அவன் மகன் ஏலா அவனுக்குப் பின் அரசு கட்டில் ஏறினான்.
7 பாசா தன் செயல்களால் ஆண்டவருக்குக் கோபமுண்டாக்கி, அவர் திருமுன் செய்த எல்லாப் பாவங்களின் பொருட்டு ஆண்டவர் எரோபோவாம் வீட்டாரைப் பாழாக்கினது போல் இவன் வீட்டாரையும் பாழாக்கிப் போடுவார் என்று, அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினர் பாசாவுக்கும் அவன் வீட்டாருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்திருந்தார். எனவே, அரசன் சினம் கொண்டு அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினரைக் கொலை செய்தான்.
8 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய இருபத்தாறாம் ஆண்டில் பாசாவின் மகனான ஏலா இஸ்ராயேலின் அரசனாகித் தேர்சாவில் ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
9 அவனது பாதிக் குதிரைப் படைக்குத் தலைவனாய் இருந்த சாம்பிரி என்ற அவனுடைய ஊழியன் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். தேர்சாவின் ஆளுநனான அர்சாவின் வீட்டில் ஏலா குடி போதையில் இருந்தான்.
10 அப்போது திடீரென சாம்பிரி உட்புகுந்து ஏலாவைக் கொன்றான். இவ்வாறு யூதாவின் அரசன் ஆசா ஆட்சி பீடம் ஏறின இருபத்தேழாம் ஆண்டில் அவன் அரசன் ஆனான்.
11 அவன் அரசனாக அரியணை ஏறியவுடன், பாசாவின் வீட்டார் அனைவரையும் கொன்றான். இவனுடைய உற்றாரிலாவது நண்பரிலாவது யாரையும் அவன் விட்டு வைக்கவில்லை.
12 இவ்வாறு இறைவாக்கினரான ஏகுவின் மூலம் ஆண்டவர் பாசாவுக்குச் சொல்லியிருந்த வாக்கின்படியே சாம்பிரி பாசாவின் வீட்டார் அனைவரையும் அழித்தான்.
13 பாசாவும் அவன் மகன் ஏலாவும் தங்கள் வீண் பகட்டால் தாங்களும் பாவிகளாகி, இஸ்ராயேலையுல் பாவத்தில் ஆழ்த்தி இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வரச் செய்தனர். அதன் காரணமாகவே இது நிகழ்ந்தது.
14 ஏலாவின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி ஆகமத்தில் எழுதப்பட்டன.
15 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய இருபத்தேழாம் ஆண்டில் சாம்பிரி தேர்சாவில் இருந்துகொண்டு ஏழுநாள் அரசாண்டான். அப்போது பிலிஸ்தியருக்குச் சொந்தமாய் இருந்த கெப்பெத்தோன் என்ற நகரை இஸ்ராயேலரின் படை வளைத்து முற்றுகையிட்டது.
16 அப்போது, 'சாம்பிரி கலகம் செய்து அரசனைக் கொன்று விட்டான்' என்று கேள்விப்பட்டவுடன் இஸ்ராயேலர் எல்லாரும் கூடி, அன்று பாளையத்தில் இருந்த இஸ்ராயேலின் படைத்தலைவனாகிய அம்ரியை அரசனாக்கினார்கள்.
17 அப்போது அம்ரி கெப்பெத்தோனை விட்டுப் புறப்பட்டு இஸ்ராயேல் படையோடு வந்து தேர்சாவை வளைத்து முற்றுகையிட்டான்.
18 நகர் பிடிபடப்போகிறது எனச் சாம்பிரி அறிந்து, அரண்மனைக்குள் புகுந்து அதைத் தீக்கிரையாக்கினான்; தானும் தீக்குளித்தான்.
19 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து எரோபோவாமின் வழியிலும், இஸ்ராயேலரைப் பாவத்துக்கு ஆளாக்கிய அவனுடைய தீயவழியிலும் நடந்து, தன் பாவங்களிலே மடிந்தான்.
20 சாம்பிரியின் மற்றச் செயல்களும் அவன் செய்த சூழ்ச்சிகளும் புரிந்த கொடுமைகளும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
21 அப்போது இஸ்ராயேல் மக்கள் இரு வகுப்பாய்ப் பிரிந்து ஒருசாரார் கினேத்தின் மகன் தெப்னியை அரசனாக்கி அவனைப் பின் சென்றனர்.
22 ஆயினும் கினேத்தின் மகன் தெப்னியைப் பின்பற்றினவர்களை விட அம்ரியைப் பின்பற்றினவர்களே அதிக வலிமையுற்றனர். தெப்னி இறந்தான்; அம்ரியோ இன்னும் ஆட்சி செலுத்தி வந்தான்.
23 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறின முப்பத்தோராம் ஆண்டில் அம்ரி அரசைக் கைப்பற்றி, இஸ்ராயேலில் பன்னிரு ஆண்டுகளும், தேர்சாவில் ஆறு ஆண்டுகளும் ஆட்சி புரிந்தான்.
24 அப்பொழுது அவன் சோமேர் என்பவனிடமிருந்து சமாரியர் மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி அம்மலையில்மேல் ஒரு நகரைக் கட்டி, மலையின் உரிமையாளன் சோமேரின் பெயரின்படியே அதற்குச் சமாரியா என்று பெயர் இட்டான்.
25 அம்ரி ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட மிகவும் இழிவான முறையில் நடந்து வந்தான்.
26 இவன் நாபாத்தின் மகன் எரோபோவாமின் எல்லா வழிகளிலும், இஸ்ராயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய அவனுடைய பாவ வழிகளிலும் நடந்து வந்தான். இவ்வாறு தன் வீண் பகட்டால் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்தான்.
27 அம்ரியின் மற்றச் செயல்களும், அவன் செய்த போர்களும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
28 அம்ரி தன் முன்னோரோடு துயில் கொண்டு சமாரியாவில் புதைக்கப்பட்டான். அவன் மகன் ஆக்காப் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
29 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியைக் கைப்பற்றின முப்பத்தெட்டாம் ஆண்டில் அம்ரியின் மகன் ஆக்காப் இஸ்ராயேலின் அரசனாகிச் சமாரியாவில் இஸ்ராயேலின் மேல் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
30 அம்ரியின் மகன் ஆக்காப் தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட ஆண்டவர் திருமுன் அதிகப் பாவங்கள் புரிந்தான்.
31 நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளில் நடந்ததுமின்றி, சீதோனியரின் அரசன் எத்பாலின் மகள் ஜெசாபேலை மணந்து கொண்டான். பின்னர் பாவாலுக்கு ஊழியம் செய்து அதை வழிபட்டான்.
32 அவன் சமாரியாவில் கட்டியிருந்த பாவாலின் கோயிலில் பாவாலுக்கு ஒரு பலிபீடத்தையும் அமைத்திருந்தான். (விக்கிரக ஆராதனைக்காக)
33 ஒரு தோப்பையும் அமைத்திருந்தான். இப்படி ஆக்காப் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் உண்டாகும்படி, தனக்கு முன் இருந்த இஸ்ராயேலின் அரசர்கள் எல்லாரையும் விடப் பாவத்திற்கு மேல் பாவம் செய்து வந்தான்.
34 அவனது ஆட்சிக் காலத்தில் பேத்தல் ஊரானாகிய ஈயேல் எரிக்கோவைக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம்ஆண்டவர் அறிவித்திருந்தபடியே, அவன் அதற்கு அடிக்கல் நாட்டும் போது அபிராம் என்ற அவன் தலை மகனும், அதன் வாயில்களை அமைத்தபோது சேகுப் என்ற அவன் இளைய மகனும் இறந்தனர்.
×

Alert

×