Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Kings Chapters

1 Kings 14 Verses

1 அக்காலத்தில் எரோபோவாமின் மகன் அபியா நோயுற்றான்.
2 அப்போது எரோபோவாம் தன் மனைவியைப் பார்த்து, "நீ எரோபோவாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேடம் பூண்டு, நான் இம்மக்களுக்கு மன்னன் ஆவேன் என்று எனக்குச் சொன்ன இறைவாக்கினர் அகியாசு குடியிருக்கிற சீலோவுக்கு நீ போகவேண்டும்.
3 உன்னோடு பத்து அப்பங்களையும் பலகாரங்களையும், ஒரு கலயம் தேனையும் எடுத்துக்கொண்டு அவரிடம் போ. பின்ளைக்கு நிகழவிருப்பதை அவர் உனக்கு அறிவிப்பார்" என்றான்.
4 அப்படியே எரோபோவாமின் மனைவி சீலோவுக்குப் புறப்பட்டு அகியாசின் வீட்டுக்கு வந்தாள். அகியாசோ முதியவராய் இருந்ததால் கண்கள் மங்கிப் பார்க்க முடியாதவராய் இருந்தார்.
5 அந்நேரத்தில் ஆண்டவர் அகியாசை நோக்கி, "இதோ, எரோபோவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப்பற்றி உன்னிடம் கலந்து பேச வருகிறாள். நீ அவளுக்கு இவ்வாறெல்லாம் சொல்ல வேண்டும்" என்றார். பிறகு அவள் அவரிடம் வந்து ஓர் அன்னிய பெண் போன்று நடிக்கத் தொடங்கினாள்.
6 அப்படியே அவள் வாயிற்படிக்குள் நுழைந்தாள். அகியாசு அவளது நடையின் சத்தத்தைக் கேட்டவுடனே, "எரோபோவாமின் மனைவியே, உள்ளே வா. நீ உன்னை அன்னிய பெண்ணாகக் காட்டிக் கொள்வது ஏன்? நான் உனக்கு ஒரு துக்க செய்தியை அறிவிக்க அனுப்பபட்டுள்ளேன்.
7 எரோபோவாமிடம் போய் நீ அவனுக்குச் சொல்ல வேண்டியதாவது: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதென்னவென்றால்: "மக்கள் நடுவே நாம் உன்னை உயர்த்தி நம் இஸ்ராயேல் மக்களுக்கு உன்னைத் தலைவனாக ஏற்படுத்தினோம்.
8 தாவீதின் குலத்தில் இருந்து வந்த ஆட்சியைப் பிரித்து அதை உன் கையில் கொடுத்தோம். எனினும், நம் கட்டளைகளைக் கைக்கொண்டு, தன் முழு இதயத்தோடும் நம்மைப் பின்பற்றி, நம் திருமுன் நல்லவனாய் ஒழுகி வந்த நம் ஊழியன் தாவீதைப்போல் நீ இராமல்,
9 உனக்கு முன் இருந்த எல்லாரையும் விட நீ அதிகத் தீங்கு புரிந்தாய். நமக்குக் கோபம் வருவிக்க, வார்க்கப் பட்ட சிலைகளால் அன்னிய தேவர்களை உனக்கு உண்டாக்கிக் கொண்டு நம்மைப் புறக்கணித்து விட்டாய்.
10 ஆகையால் எரோபோவாம் சந்ததியின் மேல் கேடு வரச் செய்து, எரோபோவாமின் வீட்டிலுள்ள ஆண்மகனையும், அடைத்து வைக்கப்பட்டவனையும், இஸ்ராயேலிலுள்ள கடைசியானவனையும் ஆக எல்லாரையுமே கொன்று குவிப்போம்; தூய்மையாகும் வரை குப்பையைத் துடைப்பத்தால் பெருக்கிக் கூட்டுவது போல், எரோபோவாமின் சந்ததியை அறவே அழித்தொழிப்போம்.
11 எரோபோவாமின் சந்ததியாரில் எவரெவர் நகரில் சாவார்களோ அவர்கள் நாய்களுக்கு இரையாவார்கள்; நகருக்கு வெளியே சாகிறவர்களோ வானத்துப் பறவைகளுக்கு இரையாவார்கள். இது ஆண்டவரின் வாக்கு."
12 ஆகையால் நீ புறப்பட்டு உன் வீட்டுக்குப் போ; நீ எந்நேரத்தில் நகரினுள் கால் வைப்பாயோ அந்நேரமே உன் பிள்ளை சாகும்.
13 அப்பிள்ளைக்காக இஸ்ராயேலர் எல்லாரும் துக்கம் கொண்டாடி அதை அடக்கம் செய்வார்கள். ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் எரோபோவாமின் சந்ததியில் அந்த ஒரு பிள்ளையின் மேல் கருணைக் கண் கொண்டதினால், அந்த ஒரு பிள்ளை மட்டும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
14 ஆண்டவர் தமக்காக, இஸ்ராயேலுக்கு ஓர் அரசனை ஏற்படுத்தினார். அவன் தன் காலத்திலே எரோபோவாமின் சந்ததியை அடியோடு அழித்து போடுவான். அது இக்காலத்திலேயே நடக்கும்.
15 தண்ணீரில் நாணல் அசைவது போல் ஆண்டவர் இஸ்ராயேலை அசைத்துத் துன்புறுத்துவார்; அவர்கள் முன்னோருக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து இஸ்ராயேலை வேரோடு பிடுங்குவார்; அவர்களை நதிக்கு அப்பால் சிதறடிப்பார். ஏனெனில் விக்கிரக ஆராதனைக்காகப் பெரும் தோப்புகளை அமைத்து ஆண்டவருக்குக் கோபம் வருவித்திருந்தனர்.
16 எரோபோவாம் கட்டிக்கொண்டதும், இஸ்ராயேலைக் கட்டிக் கொள்ளச் செய்ததுமான பாவங்களின் பொருட்டு ஆண்டவர் இஸ்ராயேலைக் கைவிட்டு விடுவார்" என்றார்.
17 அப்போது எரோபோவாமின் மனைவி புறப்பட்டுத் தேர்சாவுக்கு வந்தாள். தன் வீட்டு வாயிற்படியில் கால் வைத்தவுடனே பிள்ளை இறந்து விட்டது.
18 ஆண்டவர் இறைவாக்கினரான அகியாசு என்ற தம் அடியார் மூலம் சொல்லியிருந்த வாக்கின்படியே, அப்பிள்ளையை அடக்கம் செய்து இஸ்ராயேலர் எல்லாரும் துக்கம் கொண்டாடினார்கள்.
19 எரோபோவாம் போரிட்டதும் ஆண்டதுமான அவனுடைய மற்றச் செயல்கள் இஸ்ராயேலிய அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
20 எரோபோவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் அரசோச்சினான். அவன் தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் அவன் மகன் நாதாப் அரியணை ஏறினான்.
21 சாலமோனின் மகன் ரொபோவாமோ யூதாவில் ஆட்சி செய்தான். ரொபோவாம் அரசனான போது அவனுக்கு வயது நாற்பத்தொன்று. பின்னர் ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி இஸ்ராயேல் கோத்திரங்களிலெல்லாம் தேர்ந்து கொண்ட நகராகிய யெருசலேமில் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். 'அம்மோனியளாகிய அவனுடைய தாயின் பெயர் நாமா.
22 யூதா மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்து தாங்கள் செய்த பாவங்களினால் தங்கள் முன்னோர் செய்த எல்லாவற்றையும் விட அவருக்கு அதிகக் கோபத்தை மூட்டினார்கள்.
23 அவர்களும் எல்லா மேடுகள் மேலும், எல்லா அடர்ந்த மரங்களின் கீழும் பலிபீடங்களையும் சிலைகளையும் தோப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
24 நாட்டில் பெண் தன்மையுடைய ஆடவரும் இருந்தனர். ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக அழித்துப் போட்ட மக்கள் செய்திருந்த எல்லாவித அக்கிரமங்களையும் அவர்கள் கட்டிக் கொண்டார்கள்.
25 ரொபோவாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் அரசனாகிய சீசாக் யெருசலேமுக்கு விரோதமாய் எழுந்தான்.
26 ஆண்டவருடைய ஆலயத்தின் கருவூலங்களையும் அரண்மனையின் கருவூலங்களையும், சாலமோன் செய்து வைத்த பொன் கேடயங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றான்.
27 அவற்றிற்குப் பதிலாக அரசன் ரொபோவாம் பித்தளைக் கேடயங்களைச் செய்து அவற்றைக் கேடய வீரர் தலைவர்கள் கையிலும் அரண்மனை வாயிற்காப்போர் கையிலும் கொடுத்தான்.
28 அரசன் ஆலயத்துக்குள் நுழையும் போது, அரண்மனைச் சேவகர் அவற்றைப் பிடித்துக் கொண்டு அரசனுக்கு முன் நடந்து போவார்கள். பின்பு அவற்றை ஆயுதக் கிடங்கில் திரும்ப வைப்பார்கள்.
29 ரொபோவாமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
30 ரொபோவாமுக்கும் எரோபோவாமுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து வந்தது.
31 ரொபோவாம் தன் முன்னோரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் தன் முன்னோர் அருகே அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியளாகிய அவன் தாய்க்கு நாமா என்று பெயர். அவனுடைய மகன் அபியாம் அவனுக்குப்பின் அரசு கட்டில் ஏறினான்.
×

Alert

×