Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Chronicles Chapters

1 Chronicles 23 Verses

1 தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது தம் மகன் சாலமோனை இஸ்ராயேலுக்கு அரசனாக்கினார்.
2 இஸ்ராயேலின் எல்லாத் தலைவர்களையும் குருக்களையும் லேவியர்களையும் கூடி வரச்செய்தார்.
3 முப்பதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள லேவியர்களின் எண்ணிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் முப்பெத்தெட்டாயிரம் பேர் எனத் தெரிய வந்தது.
4 அவர்களில் இருபத்து நாலாயிரம் பேர் ஆண்டவரின் ஆலயத் திருப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறாயிரம் பேர் அதிகாரிகளும் நடுவர்களுமாய் நியமிக்கப்பட்டனர்.
5 நாலாயிரம் பேர் வாயிற் காவலராகவும், இன்னும் நாலாயிரம் பேர் தாவீது அரசர் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளை மீட்டி ஆண்டவரைப் போற்றவும் நியமிக்கப்பட்டனர்.
6 தாவீது அவர்களை லேவிய மக்களான கெர்சோன், காத், மெராரி என்னும் குலவரிசைகளின்படி பிரித்தார்.
7 கெர்சோனின் புதல்வருள் லேதானும் செமேயியும்,
8 லேதானின் புதல்வர்களுள் தலைவனான யகியேல், சேத்தான், யோவேல் ஆகிய மூவர்.
9 சலோமித், ஓசியேல், ஆரான் ஆகிய மூவரும் செமேயியின் புதல்வர். இவர்கள் லேத்தான் குடும்பங்களின் தலைவராய் இருந்தனர்.
10 செமேயியின் புதல்வர்: லெகேத், சீசா, யாவுஸ், பாரியா ஆகியோர்.
11 இவர்களுள் லெகேத் மூத்தவன்; சீசா இரண்டாம் புதல்வன். ஆனால் யாவுஸ், பாரியா என்பவர்களுக்குப் பல பிள்ளைகள் இல்லாததால் ஒரே குடும்பமாகவும், ஒரே பிரிவாகவும் அவர்கள் கணக்கிடப்பட்டனர்.
12 காத்தின் புதல்வர் அம்ராம், ஈசார், எப்ரோன், ஓசியேல் என்னும் நால்வர்.
13 அம்ராமின் மக்கள் ஆரோனும் மோயீசனுமாவர். ஆரோனும் அவருடைய புதல்வர்களும் திருவிடத்தில் திருப்பணி புரிவதற்கும், என்றென்றும் ஆண்டவர் திருமுன் தத்தம் பிரிவுப்படி தூபம் காட்டவும், அவரது திருப் பெயரை என்றென்றும் போற்றிப் புகழவும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
14 கடவுளின் மனிதரான மோயீசனின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்தே கணக்கிடப்பட்டனர்.
15 மோயீசனுடைய புதல்வர் பெயர் கெர்சோம், எலியெசார் என்பனவாம்.
16 கெர்சோமின் மக்களில் மூத்தவன் பெயர் சுபுவேல்.
17 எலியெசாரின் மக்களில் மூத்தவன் பெயர் ரொகோபியா. எலியெசாருக்கு வேறு மக்கள் இல்லை. ரொகோபியாவிற்குப் பல புதல்வர்கள் இருந்தனர்.
18 இசாருடைய மக்களில் மூத்தவன் பெயர் சலோமித்.
19 எபிரோனின் மக்களில் எரீயா மூத்தவன். இரண்டாவது அமாரியாஸ், மூன்றாவது யகாசியேல், நான்காவது எக்மான்.
20 ஒசியேலின் புதல்வரில் மிக்கா மூத்தவன், அடுத்தவன் எசியா.
21 மெராரியின் புதல்வர்: மொகோலியும் மூசியும். மொகோலியின் புதல்வர் எலியெசாரும் சீசுமாம்.
22 எலியேசார் இறந்த போது அவனுக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் இல்லை. அவர்களின் சகோதரனாகிய சீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.
23 மூசியின் புதல்வர் மொகோலி, எதேர், எரிமோத் என்ற மூவர்.
24 தங்கள் உறவினர்களுக்கும் குடும்பங்களுக்கும் தலைவர்களும் லேவியின் புதல்வருமான இவர்கள் இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களாயிருந்தனர்; தங்கள் பெயர் வரிசைப்படி பதிவு செய்யப்பட்டு, ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
25 ஏனெனில், "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அருளி, யெருசலேமில் என்றென்றும் குடியிருக்கின்றார்.
26 இனி லேவியர்கள் திருக் கூடாரத்தையும் அதன் பணிக்கடுத்த தட்டு முட்டுகளையும் சுமக்க வேண்டியதில்லை" என்று தாவீது சொன்னார்.
27 தாவீதின் இறுதிக் கட்டளையின்படி, லேவியருள் இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதினரே எண்ணப்பட்டனர்.
28 அவர்கள் ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஆரோனின் புதல்வர்களுக்கு உதவி செய்ய நியமிக்கப் பெற்றார்கள்; மண்டபங்களையும் உள் அறைகளையும் கவனித்து வந்தார்கள்: புனித பணிமுட்டுகளைச் சுத்தம் செய்து வந்தார்கள்; இன்னும் ஆண்டவரின் வழிபாட்டுக்கடுத்த எல்லா வேலைகைளையும் செய்து வந்தார்கள்.
29 குருக்கள் காணிக்கை அப்பம், போசனப் பலிகளுக்கு வேண்டிய மிருதுவான மாவு, புளியாத அப்பம். சட்டிகளில் சுடப்பட்டது, பொரிக்கப்பட்டது ஆகிய அனைத்தையும் தயாரித்து வந்தார்கள்; அத்தோடு இவற்றின் அளவையும் நிறையையும் கவனித்து வந்தார்கள்.
30 லேவியர்களோ காலையிலும் மாலையிலும் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும்.
31 அத்தோடு ஓய்வுநாள் திருநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், மற்றக் கொண்டாட்டங்களின் போதும், ஆண்டவருக்குத் தகனப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் போதும் குறிப்பிட்டவர்கள் தத்தம் பிரிவுப்படி ஆண்டவர் திருமுன் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க வேண்டும்.
32 இவ்வாறு அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தை அடுத்த ஒழுங்கு முறைகளையும், திருவிடத்தின் வழிபாட்டு முறைகளையும், கடைப்பிடித்து வந்தார்கள். மேலும் ஆண்டவரின் ஆலயத்திலே திருப்பணி புரிந்து வந்த தங்கள் சகோதரரான ஆரோனின் புதல்வருக்கும் அவர்களது திருப்பணியில் உதவி புரிந்து வந்தார்கள்.
×

Alert

×