Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Samuel Chapters

2 Samuel 11 Verses

1 {தாவீதும் பத்சேபாளும்} [PS] அடுத்த வருடம் ராஜாக்கள் வழக்கமாக யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடு தன்னுடைய வீரர்களையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் இராணுவத்தை அழிக்கவும், ரப்பாவை முற்றுகையிடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
2 ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.
3 அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள்.
4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள்.
5 அந்தப் பெண் கர்ப்பமடைந்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
6 அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான்.
7 உரியா அவனிடம் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, மக்கள் சுகமாக இருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.
8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு [* பார்க்க ரூத் 3:4, 7, 8. உன்னதப் பாட்டு 5:3 இந்த வசனங்களின்படி தாவீது உரியாவை வீட்டுக்கு அனுப்பி தன் மனைவிடம் உடல் உறவு செய்ய மறைமுகமாக ஏவினான்] என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
9 ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான்.
10 உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இருக்கிறது என்ன என்று கேட்டான்.
11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என்னுடைய ஆண்டவனான யோவாபும் என்னுடைய ஆண்டவனின் வீரர்களும் வெளியிலே முகாமிட்டிருக்கும்போது, நான் சாப்பிடுவதற்கும், குடிக்கிறதற்கும், என்னுடைய மனைவியோடு உறங்கவும், என்னுடைய வீட்டிற்குள் நுழைவேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
12 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயே இரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.
13 தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
15 அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
16 அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சுற்றி காவல்போட்டிருக்கும்போது பெலசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.
17 பட்டணத்தின் மனிதர்கள் புறப்பட்டுவந்து யோவாபோடு யுத்தம் செய்யும்போது, தாவீதின் வீரர்களான மக்களில் சிலர் விழுந்து இறந்தார்கள்; ஏத்தியனான உரியாவும் இறந்தான்.
18 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க தூதர்களை அனுப்பி,
19 தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லி முடிந்தபோது,
20 ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை அருகில் போய் யுத்தம் செய்யவேண்டியது என்ன? மதிலின் மேல் நின்று அம்பு எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?
21 எருப்பேசேத்தினுடைய மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை மதிலின் மேலிருந்து ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அவன்மேல் போட்டதால் அல்லவோ அவன் இறந்தான்; நீங்கள் மதிலிற்கு இவ்வளவு அருகில் போனது என்ன என்று உன்னோடு சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்று சொல் என்றான்.
22 அந்த ஆள் போய், நுழைந்து, யோவாப் தன்னிடம் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
23 தாவீதைப் பார்த்து; அந்த மனிதர்கள் மேலோங்கி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்வரை அவர்களைத் துரத்தினோம்.
24 அப்பொழுது வில்வீரர்கள் மதிலின் மேலிருந்து உம்முடைய வீரர்களின்மேல் அம்பு எய்ததால், ராஜாவின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்றான்.
25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடம் போய், இந்தக் காரியத்தைப்பற்றிக் கலங்கவேண்டாம்; பட்டயம் ஒருமுறை ஒருவனையும், மற்றொருமுறை வேறொருவனையும் தாக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கச்செய்து, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனைத் தைரியப்படுத்து என்றான்.
26 தன்னுடைய கணவனான உரியா இறந்தான் என்று அவனுடைய மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன்னுடைய கணவனுக்காக துக்கம் கொண்டாடினாள்.
27 துக்கநாள் முடிந்தபின்பு, தாவீது அவளை வரவழைத்து, தன்னுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் யெகோவாவுக்கு மனவருத்தமாக இருந்தது. [PE]
×

Alert

×